Tuesday 21 May 2019

5. சோஷலிசச் சமுதாயத்தில் பணத்தின் பணிகள் - எல்.லியோன்டியெவ்


சோஷலிசத்தின் கீழ் மதிப்பு விதியின் இயக்கமானது பண அமைப்பு ஒன்றை வைத்துக் கொள் வதை அவசியமாக்குகிறது. மதிப்பு இனங்களாகிய - விலை, உற்பத்திச் செலவு, கூலிகள், இலாபங்கள் முதலியன - பண அளவில் கூறப்படுகின்றன.

சோஷலிசப் பொருளாதார அமைப்பில் பணமானது சோஷ லிச உற்பத்தி உறவுகளை வெளிப் படுத்துகிறது. திட்டமிடப் பட்ட பொருளாதார மேலாண்மையின் முக்கிய உபகரணமாக அது பயன்படுகிறது. அது பல பணிகளை நிறைவேற்றுகிறது.

முதலாவது, பணம் மதிப்பின் அளவுகோலாகப் பயன்படு கிறது, பண்டத்தின் மதிப்பு - அதன் உற்பத்தியில் செலவிடப் பட்டுள்ள உயிருள்ள உழைப்பு, உள்ளடங்கிய உழைப்பு முதலிய வற்றின் சமூக அத்தியாவசிய செலவீடு எண்ணிப் பார்க்கக்கூடிய பண அளவில் மட்டுமே குறிப்பிட வேண்டும். பண்டத்தின் மதிப்பு ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தில் கூறப்படுகிறது. அதன் விலையைக் கூறுவது இதுதான். இதில் பணமானது விலைகளை அளவிடும் அளவுகோலாக விளங்குகிறது. பண்டங்களின் விலைகளைக் கணிக்கவும், ஒப்பிடவும் அது பயன்படுகிறது.

மதிப்பை அளக்கும் பணியில் பணமானது சமுதாயத்தின் உறுப்பினர்களின் நுகர்ச்சி அளவையும், உழைப்பு அளவையும் பொதுக் கட்டுப்பாடு செய்யும் ஒரு மூலமாக விளங்குகிறது. சமு தாய உறுப்பினர்களின் உழைப்பு பண அளவினால் அளக்கப்படு கிறது. ஆலைத் தொழிலாளர்களும், அலுவலக உழைப்பாளர் களும், பெருமளவிற்குக் கூட்டுப்பண்ணை உழவர்களும் தங்களது வேலைக்கு ஈடாகப் பணம் பெற்றுக் கொள்கின்றனர்.

மதிப்பை அளக்கும் பணியில் பணமானது செலவுக் கணக் கீட்டு உபகரணமாகவும் பயன்படுகிறது. பண்டங்களின் உற்பத்திக்கு அவசியமான உழைப்புச் செலவீடு, கச்சாப் பொருட் கள், இதர பொருட்கள், எரி பொருள் முதலியவற்றின் செலவீடு, கருவிகள், கட்டடங்கள் ஆகியவற்றின் தேய்மானம், உற்பத்தி மேலாண்மையில் அகும் செலவீடு, பொருட்களை ஏற்றிச் செல் வது, வியாபார இணைப்புகள் மூலமாக நுகர்வாளருக்குப் பண் டங்கள் அளிப்பது முதலியனவெல்லாம் பண அளவில் கூறப் பட்டுள்ளன. ஒரு நிறுவனத்தின் நடவடிக்கையின் விளைவுகள் முழுவதாகவும், பொதுவாகவும் பண அளவுகளில் கூறப்படக் கூடும்.

இரண்டாவதாக, சோஷலிசத்தின் கீழ் பணமானது செலா வணியாகப் பயன்படுகிறது. அரசாங்க நிறுவனங்கள், ஸ்தாபனங் கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆலை, அலுவலகத் தொழி லாளர்கள் தங்களது கூலிகளைப் பாண்டங்கள் வாங்குவதன் மீது செலவிடுகிறார்கள், கூட்டுப்பண்ணை உழவர்களும் தங்களது பண வருமானங்களுக்குப் பண்டங்களை வாங்குகிறார்கள். பண்டங்கள் விற்பதும், வாங்குவதும் பண உபகரணத்தின் மூலமாக நடை பெறுகிறது.

முதலாளித்துவத்திலிருந்து வேறுபட்ட முறையில், சோஷ லிசத்தின் கீழ் பணமானது தனது செலாவணிப் பணியில் முரண் பாடுகளை உருவாக்குவதில்லை. நெருக்கடிகளின் அபாயமும் ஏற் படக் கூடியதாக இருப்பதில்லை. சோஷலிச சமுதாயத்தில் விற்கப் படும் பண்டங்கள் நேரடியான, சமூக உழைப்பின் பொருளாக்கம் ஆகும். இக் காரணத்தினால், பண்டங்கள் விற்பனை முதலாளித்து வத்தின் கீழுள்ள இடர்ப்பாடுகளைச் சந்திப்பதில்லை. முதலாளித்து வத்தின் கீழ் உற்பத்தியின் சமூகக் தன்மைக்கும், தனியார் முதலாளித்துவ அபகரிப்புப் படிவத்திற்குமிடையே எழும் முரண் பாடு இங்கு இருப்பதில்லை.

சில பண்டங்கள் ஒருவேளை விற்கப் படாமற் போனாலும், சில சமயங்களில் அதிகப் பண்டங்கள் குவிக்கப் பட்டிருந்தாலும், அது பண்டங்களின் கீழான தரத்தினாலோ, வியாபார அமைப்பு களின் பணியில் குறைபாடுகளினாலோ, அல்லது இப்படிப்பட்ட காரணங்களினாலோ நேர்ந்திருக்கும். அப்படிப்பட்ட குறைபாடுகள் சோஷலிசப் பொருளாதார அமைப்பில் வேரூன்றியவை அல்ல. பொருளாதார மேலாண்மை மேம்பாடடைவதால் இவை நீக்கப் படுகின்றன.

மூன்றாவதாக, சோஷலிச சமுதாயத்தில் பணமானது செலுத் துகைகளின் மூலமாகப் பயன்படுகிறது. செலுத்துகைகளின் மூல மாகப் பணம் சோஷலிச நிறுவனங்களுக்கிடையே கணக்குகளைச்கரிக்கட்டவும், ஆலை, அலுவலகத் தொழிலாளர்களுக்குக் கூலி கள் கொடுப்பதற்காகவும், வரிகள், லாட்டரி வெற்றியில் கிடைத்த பணங்கள், அரசாங்கக் கடன்களில் வட்டி முதலியனவற்றைச் செலுத்தவும் பணம் பயன்படுகிறது. முதலாளித்துவத்தின் கீழ், செலுத்துகைகளின் மூலமாகப் பணியாற்றுவதில் பணமானது, பண்டத்தின் உள்ளார்ந்த முரண்பாட்டைத் தீவிரப்படுத்தி விடு கிறதால், பொருளாதார நெருக்கடிகள் முதிர்ச்சி அடைவதற்குத் துணை புரிகின்றன. முதலாளித்துவத்தின் இந்த முரண்பாடுகளில் இருந்து சோஷலிசப் பொருளாதாரம் விடுதலை பெற்று விளங்கு கிறது. சோஷலிச நிறுவனங்கள் பண்டங்கள், சேவைகள் ஆகிய வற்றிற்குச் செலுத்துகைகளைத் தாமதப் படுத்துவதா லும், உற்பத்தி அல்லது கட்டுமானத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தவறுவதாலும், உற்பத்தி வெளியீட்டின் கீழான தரத்தினாலும், மிகையான உற்பத்திச் செலவீட்டினாலும், அல்லது பொருள் மூலங் களின் சுழற்சி மிகவும் மெல்ல இருப்பதாலும் மட்டுமே இருக்கும், இப்படிப்பட்ட செலுத்துகைகளில் உண்டாகும் இடர்ப்பாடுகள் நிறுவனத்தின் பணியை முன்னேற்றமடையச் செய்வதன் மூலம் மேற்கொள்ளப் பெறுகின்றன. தங்களது ஒப்பந்தப்படியுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றும் பொறுப்பை நிறுவனங்கள் அதிகமதிக மாக ஏற்றுக் கொள்வதன் மூபேம் மேற்கொள்ளப் பெறுகின்றன.

நான்காவதாக, சோஷலிசச் சமுதாயத்தில், பணமானது சோஷலிசத் திரட்சியையும், சேமிப்பையும் உண்டாக்கும் மூல மாகப் பயன்படுகிறது. முழுப் பொருளாதாரத்திலும் உண்டா கும் திரட்சிகளை ஒருமைப் படுத்துவதும் பண அளவில் செய்யப் படுகின்றன. சோஷலிச உற்பத்தியைப் பெருக்க இவை பயன் படுத்தப் பெறுகின்றன. நாட்டின் பொருளாதாரச் செல்வத்தை வலுப்படுத்தவும், உழைக்கும் மக்களின் பொருள்சார், கலாச் சாரத் தேவைகளை நிறைவு செய்யவும் இவை பயன்படுத்தப் பெறுகின்றன.

இறுதியாக, சோஷலிசச் சமுதாயத்தில் பணமானது உலகப் பணமாக விளங்கும் பணியை நிறைவேற்றுகிறது. இவ்வாறு, சோவியத் நாட்டின் செலாவணி, பண்டக் கொள்முதல்களிலும், சோஷலிச அமைப்பிலுள்ள நாடுகளோடு கொண்டுள்ள இதர பொருளாதாரப் பிணைப்புகளிலும், இந்த அமைப்புக்குப் புறத்தே யுள்ள பல நாடுகளோடும்கூட பயன்படுகிறது. ஏனைய சோஷலிச நாடுகளின் செலாவணிகளும் குறைந்த அல்லது கூடியதோர் அளவில் இந்தப் பணியினைச் செய்கின்றன, இந் நாடுகளும் வெளி உலகத்தோடு பரந்த பொருளாதாரத் தொடர்புகள் கொண்டுள்ளன.
(அரசியல் பொருளாதாரச் சுருக்கம்- எல்.லியோன்டியெவ்- என்சிபிஎச் 1075 – தமிழாக்கம்:தா.செல்லப்பா- பக்கம் 374-376)

No comments:

Post a Comment