Saturday 24 May 2014

மார்க்சின் உபரி மதிப்புக் கோட்பாடு- சிறிய அறிமுகம்

1860களின் இடைப்பகுதியில், ஐரோப்பாவில் கூலி உயர்வுக்கான கோரிக்கையும், வேலை நிறுத்தப் போராட்டங்களும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. கூலி உயர்வினால் தொழிலாளர்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை என்று முதலாளித்துவ அறிஞர்களின் கருத்தைப்போலவே, அகிலத்தில் பொதுக் கவுன்சிலின் உறுப்பினர் ஜான் வேஸ்டனும் தொழிலாளர்கள் பொருளாதாரத்துக்கான போராட்டம் வீணானது என்ற கருத்தை தொழிலாளர் மத்தியில் பரப்பிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் கூலி உயர்வுக்காகத் தொழிலாளர்கள் போராடுவதை அகிலம் ஆதரிக்க வேண்டுமா? எதிர்க்க வேண்டுமா? என்ற கேள்விக்கு, விஞ்ஞான வழிப்பட்ட பதிலைக் கொடுக்க வேண்டியநிலை ஏற்பட்டது. அப்போது மார்க்ஸ் "மூலதனம்" நூலின் முதல் தொகுதியை வெளியிடுவதற்கான தயாரிப்பில் இருந்தார். இந்நூலில் காணப்படும் சிலவற்றின் அடிப்படையில் 1865ஆம் ஆண்டு ஜூன் மாதம், சர்வதேசத் தொழிலாளர் கவுன்சில் கூட்டத்தில் "கூலி, விலை, லாபம்" என்ற அறிக்கையை ஆங்கிலத்தில் மார்க்ஸ் சமர்பித்தார். இந்த அறிக்கை மார்க்ஸ் மரணத்திற்குப் பிறகு அவருடைய மகள் எலியனோராவால் 1898ல் வெளியிடப்பட்டது.

வேஸ்டனின் அறிக்கையின் சாரம், தொழிலாளி வர்க்கம், முதலாளி வர்க்கத்தை நெருக்குதல் கொடுத்து நானூறு ரூபாய்க்கு பதில் ஐநூறு ரூபாயாக சம்பளம் வாங்கினால், முதலாளி இதற்கு, ஈடாக ஐநூறு ரூபாய் பெறுமானத்துக்கு பதிலாக நானூறு ரூபாய் பெறுமானமுள்ள பொருட்களையே தருவார். இதனால் தொழிலாளி வர்க்கம் கூலி உயர்வுக்கு முன் நானூறு ரூபாய் கொடுத்து வாங்கியதற்கு இப்போது ஐநூறு ரூபாய் கொடுக்க வேண்டியது இருக்கும்.

ஏன் என்றால் கூலியின் தொகை திண்ணமாக நிர்ணயிக்கப்பட்டது. கூலித் தொகை இயற்கையாகவே நிலையானதாக அவருக்குப் படுவதால், கூலி உயர்ந்தால் இந்த உயர்வை அடுத்து அதற்கான எதிர் நடவடிக்கை ஏற்பட்டே தீரும் என்பது அவரது வாதம்.

இதனை மறுபக்கத்திலிருந்து பார்க்க வேண்டும். கூலிக்குறைப்பை முதலாளிகள் பலவந்தமாக ஏற்படுத்த முடியும், அவ்வாறு செய்ய அவர்கள் இடைவிடாது முயல்கிறார்கள் என்ற உண்மை  வேஸ்டனுக்குத் தெரியும். கூலி நிலையானது என்னும் கோட்பாட்டின்படி இதை அடுத்தும் முன்னதைவிட குறையாத எதிர் நடவடிக்கை ஏற்பட்டே தீரும். எனவே, கூலியைக் குறைக்கும் முயற்சியையோ அல்லது செயலையோ எதிர்த்துத் தொழிலாளர்கள் நடவடிக்கை எடுப்பது நியாயமானதே. ஆகவே, கூலி உயர்வை வற்புறுத்திப் பெறும் போதும் அவர்கள் சரியாகவே செயல்படுகிறார்கள். ஏனென்றால், கூலிக் குறைப்புக்கு எதிரான ஒவ்வொரு எதிர் நடவடிக்கையும் கூலி உயர்வுக்கான நடவடிக்கையாகும். ஆகையால், கூலி நிலையானது என்பது வேஸ்டனின் சொந்தக் கோட்பாட்டின் படியே, சில சந்தர்ப்பச் சூழ்நிலைகிளில் கூலி உயர்வுக்காகத் தொழிலாளர்கள் ஒன்றுபடவும் போராடவும் வேண்டியிருக்கிறது. இந்த முடிவை மறுப்பாராயின், கூலியின் தொகை திண்ணமானது என்று பெறப்பட்ட அந்த ஆதாரக் கூற்றை அவர் விட்டுவிட வேண்டும். கூலியின் தொகை என்பது நிலையான பரிமாணம் என்று அவர் சொல்லக் கூடாது.

தொழிலாளியினது உழைப்பு நேரத்தால் தீர்மானிக்கப்படும் இந்தக் குறிப்பிட்ட மதிப்புதான் அவனும் முதலாளியும் தத்தமது பங்குகளை, கூலியாகவும் லாபமாகவும் பிரித்துக் கொள்ளப்பட வேண்டியுள்ள ஒரே மதிப்பு. இந்த மதிப்பு இரு தரப்பினரிடையேயும் எத்தகைய வெவ்வேறான விகிதாச்சாரங்களில் பிரித்துக் கொள்ளப்பட்டாலும் அதன் அளவு மாற்றம் அடையாது என்பது தெளிவு. அதாவது கூலி மாறினால் லாபமும் எதிர்திசையில் மாற்றமடையும். கூலி குறைந்தால், லாபம் அதிகரிக்கும், கூலி அதிகரித்தால், லாபம் குறையும்.

வழங்கலும் வேண்டலும் (supply and demand) என்கிற சந்தையின் போக்காலும், சரக்கின் மதிப்பை விளக்க முடியாது என்கிறார் மார்க்ஸ்.

வழங்கலும் வேண்டலும் சந்தை விலைகளின் தற்காலிக ஏற்ற இறக்கங்களை ஒழுங்கு படுத்துவதைத்தவிர வேறு எதுவும் செய்வதில்லை. ஒரு சரக்கின் சந்தை விலை அதன் மதிப்புக்கு மேலே ஏன் உயர்கிறது, அதன் மதிப்புக்குக் கீழே ஏன் குறைகிறது என்பதை வேண்டுமானல் அவை விளக்கலாம், ஆனால் அந்த மதிப்பை அவற்றால் ஒருபோதும் விளக்க முடியாது.

ஒரு சரக்கின் மதிப்பு அதில் அடங்கியுள்ள உழைப்பின் ஒட்டுமொத்தமான அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் அந்த உழைப்பின் அளவில் ஒரு பகுதி, கூலி வடிவத்தில் ஈடு செலுத்தப்பட்ட மதிப்பாகச் செயலாக்கப்படுகிறது, மறு பகுதியோ, எவ்வகையான ஈடும் செலுத்தப்படாத மதிப்பாகச் செயலாக்கப்படுகிறது. அதாவது சரக்கில் அடங்கியுள்ள உழைப்பில் ஒரு பகுதி ஊதியம் பெற்ற உழைப்பு, மற்றொரு பகுதி ஊதியம் பெறாத உழைப்பு. எனவே, சரக்கை அதன் மதிப்புக்கு விற்பதால் முதலாளி நிச்சயமாக லாபத்திற்கே விற்பார். அவர் தாம் ஈடு செலுத்திப் பெற்றதை மட்டுமின்றி, தனது தொழிலாளியின் உழைப்பு செலவிடப்பட்டிருந்த போதிலும் தாம் எதையும் செலுத்தாமல் பெற்றதையுங்கூட விற்கிறார்.

முதலாளிக்கு சரக்கின் மதிப்பு என்பது ஒன்று, அதன் உண்மையான மதிப்பு என்பது மற்றொன்று, இரண்டும் வெவ்வேறான விஷயங்கள். எனவே, பொதுவான சராசரி லாபங்கள், சரக்குகளை அவற்றின் உண்மையான மதிப்புகளுக்கு விற்பதால் கிடைக்கின்றதே தவிர அம்மதிப்புகளுக்கு மேலாக விற்பதால் அல்ல என்பதை மார்க்ஸ் இந்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தக் கூலி அமைப்பு முறையின் சுரண்டலை உபரி மதிப்பு என்கிற தமது கண்டுபிடித்த கோட்பாட்டில் மார்க்ஸ் விளக்குகிறார்.

"மூலதன" நூலின் முதல் தொகுதி வெளிவருவதற்கு முன் இந்த அறிக்கையில் தான் முதன்முறையாக மார்க்ஸ் உபரி மதிப்புக் கோட்பாட்டை எடுத்துரைத்துள்ளார்.

உபரி மதிப்புக் கோட்பாடு

இந்த அறிக்கையில் மார்க்ஸ் கூறியவற்றை தொகுத்துப் பார்ப்போம். அதில் அவர் பண அளவை ஷில்லிங்கில் கூறியிருக்கிறார், இங்கே ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.

ஒரு உழைப்பாளி தமது வாழ்க்கைக்குத் தேவைப்படுகின்ற வாழ்வாதாரத்துக்கு ஆறு மணி நேரம் சராரி உழைப்பு தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். இதற்காக அவருக்கு ரூபாய் 500/- கூலியாகக் கொடுக்கப்படுகிறது. அவர் தினமும் ஆறு மணி நேரம் வேலை செய்தால் இந்தத் தொகையை ஈட்டுவதற்கும் இதன் மூலம் சராசரி அளவான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு போதுமானதாக இருக்கிறது. அதாவது தன்னை ஓர் உழைப்பாளியாக உயிர் வாழ்வதற்கு போதுமானதாகிறது.

நமது உழைப்பாளி கூலி உழைப்பாளி, எனவே அவர் ஒரு முதலாளிக்கு தமது உழைப்புச் சக்தியை விற்கிறார். இந்த உழைப்பாளியை நெசவாளி என்று வைத்துக் கொள்வோம். உழைப்பாளியின் நாட்கூலியாகக் கிடைப்பது ரூபாய் 500/-. நமது நெசவாளி பஞ்சின் மீது ஆறு மணிநேர உழைப்பைச் செலுத்தி ரூபாய் 500/- மதிப்பை கூட்டுகிறார். இது, உழைப்புச் சக்திக்கு சமமானதாக இருக்கிறது. இந்நிலையில் முதலாளிக்கு கூடுதலாக எந்த மதிப்பும் கிடைக்கவில்லை. இங்கே தான் சிக்கல் எழுகிறது.

தொழிலாளியின் உழைப்புச் சக்தியை வாங்கி, அதன் மதிப்பைக் கொடுத்துவிடுவதன் மூலம் முதலாளி, மற்றெந்த வாங்கும் பொருளைப் போலவே, வாங்கிய சரக்கை பயன்படுத்திக் கொள்ளும் உரிமையைப் பெறுகிறார். ஓர் இயந்திரத்தை ஓட வைத்து அதைப் பயன்படுத்திக் கொள்வதைப் போலவே ஓர் உழைப்பாளியை வேலை செய்ய வைப்பதன் மூலம் அவருடைய உழைக்கும் சக்தியை பயன்படுத்திக் கொள்கிறார். இந்த முறையில் தொழிலாளியின் தினசரி மதிப்பை கொடுத்துவிடுவதன் மூலம் முதலாளி, அந்த உழைப்புச் சக்தியை முழு நாளைக்கு வேலை செய்யவைக்கும் உரிமையைப் பெறுகிறார்.

தற்போது ஒரு நிர்ணயகரமான அம்சத்தின் மீது கவனம் திருப்ப வேண்டும்.

உழைப்புச் சக்தியின் மதிப்பு அதனைப் பராமரிக்க தேவையான உழைப்பின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த உழைப்புச் சக்தியின் பயன்பாடு உழைப்பாளியின் உழைப்புத் திறனாலும் அவனுடைய உடல் வலிமையாலும் தான் வரையறுக்கப்படுகிறது.

ஒரு குதிரைக்குத் தேவைப்படும் தீவனம் என்பதும், அக் குதிரையின் சொந்தக்காரன் அதனை செயற்படுத்தக் கூடிய நேரம் என்பதும், எப்படி வெவ்வேறானவைகளோ அது போலவே உழைப்பு சக்தியின் ஒரு நாள் என்பது அதனை ஒரு நாளில் செலவிடப்படும் நேரத்துக்கு முற்றிலும் மாறுப்பட்டதாகும்.

தொழிலாளியினுடைய உழைப்புச் சக்தியின் மதிப்பை வரையறுக்கும் உழைப்பின் அளவு, அவனுடைய உழைப்புச் சக்தி ஆற்றக்கூடிய உழைப்பின் அளவுக்கு எவ்வகையிலும் வரம்பிடுவதில்லை.

நெசவாளியின் உழைப்புச் சக்திக்கான மதிப்பை நாளொன்றுக்கு கொடுத்துவிடுவதன் மூலம், முதலாளி, அவனுடைய உழைக்கும் சக்தியை முழு நாளைக்கு பயன்படுத்திக் கொள்ளும் உரிமையைப் பெற்றிருக்கிறார்.

முதலாளி தொழிலாளியை ஒவ்வொரு நாளும் பன்னிரெண்டு மணி நேரம் வேலை செய்ய வைக்கிறார். தொழிலாளி தனக்கு கொடுக்கப்பட்ட கூலியை அதாவது தனது உழைப்புச் சக்தியின் மதிப்பை ஈடுசெய்வதற்குத் தேவையான ஆறு மணி நேரத்தைத் தவிர மேலும் கூடுதலாக ஆறு மணி நேரம் தொழிலாளி வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

இதனை மார்க்ஸ் உபரி உழைப்பு மணி நேரம் என்று அழைக்கிறார். இந்த உபரி உழைப்பு, உபரி மதிப்பாகப் பரிணமிக்கிறது. நமது நெசவாளி தமது பன்னிரெண்டு மணிநேரத்தில் ஆறு மணிநேர உழைப்பின் மூலம் ரூபாய் 500/- மதிப்பை, அதாவது தமது கூலிக்கு ஈடான மதிப்பைப் பஞ்சின் மீது கூட்டுவதோடு, கூடுதலான ஆறு மணிநேரம் உழைத்து மேலும் கூடுதல் மதிப்பைக் (ரூபாய் 500/-) கூட்டுகிறார்.

உற்பத்தியின் போது தோன்றிய மதிப்பான ரூபாய் 1000/-யில் உழைப்பாளியின் உழைப்புச் சக்கிக்கு ரூபாய் 500/- முதலாளி கொடுத்துவிடுகிறார். மீதமுள்ள ரூபாய் 500/- உபரி மதிப்பாக முதலாளிக்கு சென்றுவிடுகிறது.

தொழிலாளி தமது உழைப்புச் சக்தியை முதலாளிக்கு விற்றுவிட்டதால், அவரால் படைக்கப்படும் முழு மதிப்பும் முதலாளிக்கே சொந்தமாகிவிடுகிறது.

இது போன்ற பரிவர்த்தனை தொடர்ச்சியாகத் தொழிலாளியைத் தொழிலாளியாகப் மறுவுற்பத்தி செய்யவும், முதலாளியை முதலாளியாகப் மறுவுற்பத்தி செய்யவும் காரணமாக இருக்கிறது.

மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையே இவ்வகையான பரிவர்த்தனை மீதுதான் முதலாளித்துவ உற்பத்தி அல்லது கூலி அமைப்பு முறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கூலியின் தொகை திண்ணமாக நிர்ணயிக்கப்பட்டது, கூலி உயர்வால் தொழிலாளர்களே பாதிக்கப்படுவர் என்கிற வேஸ்டன் கூற்று தவறானது என்பதை மார்க்ஸ் இவ்வறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், இந்தக் கூலிக்கான போராட்டத்தோடு தொழிலாளர்கள் நின்றுவிடக் கூடாது. கூலி உயர்வுக்கான போராட்டம், விளைவுகளை எதிர்த்து நடத்துகிற போராட்டமே தவிர, தம்மை விடுவிக்கும் போராட்டம் இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

  "விளைவுகளை எதிர்த்து அவர்கள் (தொழிலாளர்கள்) போராட்டம் நடத்துகிறார்களே தவிர, அந்த விளைவுகளுக்கான காரணங்களை எதிர்த்தல்ல, தங்களது நிலைமையை மோசமாக்கும் போக்கை அவர்கள் தடுத்து நிறுத்துகிறார்களே தவிர, அதன் திசை வழியை மாற்றவில்லை, அவர்கள் நோயின் கடுமையைத் தணித்துக் கொள்கிறார்களே தவிர, நோயை குணப்படுத்திக் கொள்ளவில்லை. இவற்றைத் தொழிலாளி வர்ககம் மறந்துவிடக்கூடாது" (1.கூலி, விலை, லாபம் பக்கம்- 136) என்கிறார் மார்க்ஸ்.


   கூலி உயர்வுக்கான போராட்டம், கூலி அமைப்பு முறைக்கு எதிரான போரட்டமாக உயரவேண்டும். பொருளாதாரத்துக்கான போராட்டம், அரசியல் போராட்டமாக, சமூக விடுதலைக்கான போராட்டமாக மாற்றவேண்டும்.