Friday 26 July 2019

முதலாளித்துவத்தின் பொது நெருக்கடி – கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்


முதலாளித்துவ முரண்பாடுகள் கூர்மையடைதல்

உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான மோதல் தான் வரலாற்று நிகழ்ச்சிப் போக்கின் உந்து சக்தியாக, ஒரு உற்பத்தி முறையிலிருந்து வேறு முறைக்கு மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய சமூகப் புரட்சிகளின் பொருளாதார அடிப்படையாக விளங்குகிறது. நமது கண்களின் முன்னே கூர்மையடைந்து வரக்கூடிய உற்பத்தியின் சமுதாயத் தன்மைக்கும் தனி முதலாளித்துவ அபகரிப்பு முறைக்கும் இடையிலுள்ள முரண்பாடு இத்தகைய மோதலின் உதாரணமாகத் திகழுகிறது. இந்த முரண்பாடுதான் முதலாளித்து வத்தின் முக்கிய முரண்பாடாகும்.

இந்தப் பகைமையான, சமரசப்படுத்த இயலாத முரண்பாடு இப்போது பெரிதும் கடுமையாக உள்ளது. அரசு- ஏகபோக முதலாளித்துவம் சோஷலிசத்தை நோக்கிய மாற்றத்திற்கான எல்லாப் பொருளாயத முன்தேவைகளையும் தயார்படுத்தியுள்ளது. பெரும் இயந்திரத் தொழில் துறையும் உற்பத்தியை மிக உயர்வான அளவில் பொதுமயப்படுத்தியதும் அராஜகத் தன்மைக்கும் நெருக்கடிகளுக்கும் முடிவுகட்டவும் சமுதாயம் முழுவதன் நலன்களுக்காக உற்பத்திச் சக்திகளின் நட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகோலவும் தேவையான சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கின்றன, ஆனால் இதற்கு முதலாவதாக உற்பத்திச் சாதனங்களின் மீதான தனிச் சொத்துடைக்கு முடிவு கட்ட வேண்டும்.

ஏகாதிபத்தியம் அழிந்து வரக் கூடிய முதலாளித்துவம் என்பதற்கு, அது தானாகவே, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான வெகுஜனங்களின் தீர்மான கரமான போராட்ட மின்றி அழிந்துவிடும் என்பது பொருளல்ல, வி.இ.லெனின் ஏகாதிபத்தியத்தை சோஷலிசப் புரட்சியின் முன்னணைப் பொழுது என்று குறிப்பிட்டார். நிச்சயமாக ஏகபோக முதலாளி வர்க்கம் போராட்டமின்றி விட்டுக் கொடுக்காது, முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்க அது சக்திகள் அனைத்தையும் செல்விடும். ஆனால் தவிர்க்க இயலாததை அதனால் தடுக்க முடியாது. முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் மேன்மேலும் கூர்மையடைந்து அதன் அழிவிற்கு இட்டுச் செல்லுகின்றன.

உழைப்பாளிகளைச் சுரண்டுவதன் மூலம் தனது செல்வங்களைப் பெருக்கும் ஏகபோக முதலாளி வர்க்கம் இவர் களுடைய வளர்ந்து வரும் எதிர்ப்பைச் சந்திக்கிறது. முதலாளித்துவ ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் சமுதாயத்தின் சோஷலிச மாற்றத்திற்காகவும் தொழிலாளி வர்க்கமும் மக்கள் திரளினரும் நடத்தும் புரட்சிகர இயக்கம் வளர்ந்து மேன்மேலும் பலமடைகிறது.

காலனிகளின் மக்களை அடிமைப்படுத்தி, பின் அவர்களைப் பொருளாதார சார்புநிலை எனும் வலையில் சிக்கவைத்த ஏகபோக முதலாளி வர்க்கம் அவர்களது தேசியச் செல்வத்தைக் கொள்ளையடிப்பதன் மூலம் தொடர்ந்து லாபம் சம்பாதிக்கிறது. இதனால் ஏகாதிபத்திய அடிமை முறைக்கு எதிரான மக்களின் தேசிய விடுதலை இயக்க அலை வளர்ந்து வருகிறது.

அடக்குமுறையைப் பின்பற்றி யுத்தங்களைக் கட்டவிழ்த்து விட்டு ஏகபோக முதலாளி வர்க்கம் தனது சுய நலன்களுக்காகப் பல லட்சக்கணக்கான மனித உயிர்களைப் பழிவாங்குகிறது. பல்லாண்டு மனித உழைப்பால் தோற்றுவிக்கப்பட்ட செல்வங்களைப் போராட்டச் சுவாலையில் இட்டுப் பொசுக்குகிறது. இதனால் ஜனநாயகத்திற்கும் சமாதானத்திற்குமான மக்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது.

இந்த மகத்தான சக்திகள் அனைத்தும் ஒரே பெருக்காக ஒன்றுசேர்ந்து ஏகாதிபத்தியத்தை அழிக்கின்றன. முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க இயலாத மறைவு கட்டம், முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்தை நோக்கி மாறும் கட்டம் வருகிறது.

முதலாளித்துவம் சமமின்றி வளர்ந்து வருவதால் சோஷலிசத்திற்குச் சமுதாயம் மாறுவதும் ஒரே நேரத்தில் நடைபெறாது. முதலாளித்துவத்தின் அழிவும் சோஷலிசத்தின் வெற்றியும் ஒரு சகாப்தம் முழுவதும் நீடிக்கக் கூடிய நீண்ட நிகழ்ச்சிப் போக்காகும். இச்சகாப்தம் முதலாளித்துவத்தின் பொது நெருக்கடி சகாப்தம்.

முதலாளித்துவ பொது நெருக்கடியின் கட்டங்கள்

முதலாளித்துவத்தின் பொது நெருக்கடிக் காலகட்டத்தில், தனிப்பட்ட நாடுகளைத் தனது ஆதிக்கத்தின் கீழ் இனிமேலும் முதலாளித்துவ அமைப்பு வைத்திருக்க இயலாத அள்விற்கு இதன் உள் முரண்பாடுகள் கூர்மையடைகின்றன; இந்த நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக இதிலிருந்து விலகி சோஷலிசப் பாதைக்கு வருகின்றன. மறு புறத்தில் சோஷலிச அமைப்பின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் பலப்படுத்தலும் ஏகாதிபத்தியத்தின் சிதைவை மேலும் அதிகமாகத் துரிதப்படுத்துகின்றன.

முதலாளித்துவ பொது நெருக்கடியின் முதல் கட்டம் முதல் உலக யுத்தத்தையடுத்து, குறிப்பாக அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் வெற்றியோடு துவங்கியது. அக்டோபர் புரட்சி தொழிலாளர் மற்றும் தேசிய விடுதலை இயக்கத்தின் மீது பெரும் செல்வாக்கு செலுத்தியது, சமுதாய வளர்ச்சி முழுவதற்கும் பெரும் உந்து சக்தியை அளித்தது. சோஷலிசம் தத்துவத்திலிருந்து நடைமுறையாகியது, முதலாளித்துவத்தின் தவிர்க்க இயலாத அழிவைப் பற்றியும் அதைப் புதிய சமுதாய அமைப்பால் மாற்றுவதைப் பற்றியும் மார்க்சிய-லெனினியப் போதனை கூறிய ஆரூடத்தின் உண்மை முதன் முதலாக மெய்ப்பிக்கப்பட்டது.

இரண்டாவது உலக யுத்தம் முதலாளித்துவத்தின் பொது நெருக்கடியைக் கூர்மையாக்கி ஆழப்படுத்தியது; ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பல நாடுகள் முதலாளித்துவ அமைப்பிலிருந்து விலகியதையடுத்து இந்த நெருக்கடியின் இரண்டாவது கட்டம் துவங்கியது. சோஷலிசம் ஒரு நாட்டின் வரம்பை விட்டு வெளியேறி உலக அமைப்பாக மாறியது. அதே பொழுது தேசிய விடுதலைப் புரட்சிகள், பல முந்தைய காலனிகள் மற்றும் அரைக் காலனிகளின் இடத்தில் சுயமான அரசுகளைத் தோற்றுவித்தன.

50ம் ஆண்டுகளின் இரண்டாம் பாதியிலிருந்து முதலாளித்துவ பொது நெருக்கடியின் மூன்றாவது கட்டம் ஆரம்பமாகியது, இது உலக யுத்தத்தோடு தொடர்பின்றி துவங்கியது என்பதில் தான் இதன் சிறப்பியல்பு அடங்கியுள்ளது. முன்பு சமாதானக் காலத்தில் உழைப்பாளிகளின் சோஷலிச இயக்கத்தையும் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் தேசிய விடுதலை இயக்கத்தையும் நசுக்கக் கூடிய அளவிற்கு முதலாளித்துவம் சக்தி வாய்ந்ததாக இருந்தது; பரஸ்பர வேறுபாடுகளால் பலவீனமடைந்து, அவர்களாலேயே மூட்டி விடப்பட்ட உலக யுத்தங்களில் மும்முரமாயிருந்ததால் தான் ஏகாதிபத்தியவாதிகளால் விடுதலை இயக்கங்களின் பெரும் வெற்றிகளுக்குத் தடைவிதிக்க இயலவில்லை.

இப்போது அவர்களால் சமாதானக் காலத்திலும் கூட இதைச் செய்ய இயலவில்லை. காலனியாதிக்க முறையின் சிதைவு இதைத் தெளிவாக நிரூபிக்கிறது.”
(சமூக விஞ்ஞானம் – முன்னேற்றப் பதிப்பகம் -1985- பக்கம் 169 - 172)


உபரி மதிப்பு – கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்


“முதலாளிகளைச் செல்வந்தர்களாக ஆக்குவது தான் முதலாளித்துவ உற்பத்தியின் ஒரே நோக்கம். யாரைப் பலி கொடுத்து இது அடையப்படுகிறது?

சந்தையில் பண்டங்களை விற்று பணம் சம்பாதிக்கும் முன்பாக இவற்றை உற்பத்தி செய்ய வேண்டும், உழைப்பால் மட்டுமே மதிப்பைத் தோற்றுவிக்க இயலும். முதலாளி அடிமைச் சொந்தக்காரனோ, நிலப்பிரபுவோ இல்லை, தனது சொத்தாகப் பாவிக்கக் கூடிய அடிமைகளோ, பண்ணையடிமைகளோ அவனிடம் இல்லை. ஆனால் அவனிடம் உற்பத்திச் சாதனங்கள் உள்ளன, சமுதாயத்தில் இவை மறுக்கப் பட்ட பாட்டாளி வர்க்கம் உள்ளது. தொழிலாளி முதலாளியைத் தனிப்பட்ட முறையில் சார்ந்திருக்கவில்லை, ஆனால்  வாழ்வதற்காக அவன் தனது உழைப்புச் சக்தியை விற்க வேண்டியவனாகிறான். இதனை வாங்கும் முதலாளி மதிப்பை உருவாக்க வல்ல ஓரே பண்டத்தைப் பெறுகிறான்.

பண்டம் என்ற முறையில் உழைப்புச் சக்தி குறிப்பிட்ட ஒரு மதிப்பிற்கு விற்கப்படுகிறது. மனிதனின் அவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால் தான் அவனால் உழைக்க இயலும். ஒரு நாளில் தொழிலாளி குறிப்பிட்ட அளவு ரொட்டி, இறைச்சி, வெண்ணெய், சர்க்கரையைப் பயன் படுத்துகிறான், ஆடைகள், காலணிகளை அணிந்து அவற்றை குறிப்பிட்ட அளவு தேய்மானம் அடையச் செய்கிறான், வீட்டு வாடகைக்காகக் குறிப்பிட்ட அளவு பணத்தைச் செலவழிக்கிறான்; முதலாளிக்கான புதிய உயிருள்ள "பண்டம்” வளர்ந்து வரும் குடும்பத்தை அவன் பராமரிக்க வேண்டும். இதிலிருந்து உழைப்புச் சக்தியின் மதிப்பு, தொழிலாளியையும் அவனது குடும்பத்தையும் பராமரிப்பதற்கு அவசியமான வாழ்க்கைச் சாதனங்களின் மதிப்பிற்குச் சமமானது.

உழைப்புச் சக்தியின் மதிப்பின் முழுமுதல் அளவு பல்வேறு நாடுகளில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மாதிரியானது. இது இயற்கைச் சூழ்நிலைகளையும் வரலாற்று ரீதியாக உருவாகியுள்ள உழைப்பாளிகளின் வாழ்க்கைத் தரத்தையும் பொறுத்தது. உற்பத்தியின் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் போன்ற பொருளாதாரக் காரணங்களும் இதைப் பாதிக்கின்றன. ஒரு புறம் உழைப்பின் உற்பத்தித் திறன் வளர்ச்சி தொழிலாளர்களுடைய வாழ்க்கைச் சாதனங்களின் மதிப்பைக் குறைப்பதால் உழைப்புச் சக்தி மதிப்பைக் குறைக்கிறது. மறு புறம் நகரங்கள் வளர்ந்து வருவதால் போக்குவரத்துச் செலவினங்கள் அதிகமாகின்றன, எரிவாயு, தொலைபேசி போன்ற புதிய வீட்டு வசதிகளுக்கான செலவுகள் கூடுதலாகின்றன. புதிய கலாச்சாரத் தேவைகள் தோன்றுகின்றன. வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலுள்ள நவீன தொழிலாளியால் பத்திரிககைகள், திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி இல்லாமல் இருக்க இயலாது. தொழிலாளியின், அவனது குடும்பத்தின் தேவைகள் வளருகின்றன என்றால் உழைப்புச் சக்தியின் மதிப்பு கூடுதலவாகிறது.

தமது நிலைமையை மேம்படுத்துவதற்காக முகலாளிகளுக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் நடத்தும் வர்க்கப்போராட்டமும் உழைப்புச் சக்தியின் மதிப்பின் அளவு மீது தாக்கம் செலுத்துகிறது.

உழைப்புச் சக்தியை வாங்கிய முதலாளி இதை உற்பத்திச் சாதனங்களுடன் ஒன்றிணைக்கிறான், ஆலைகள் கட்டப்பட்டு மூலப்பொருள் கொணரப்பட்டு தொழிலாளி இயந்திரத்தின் முன் நின்றதும் காரியம் துவங்குகிறது.

உழைப்புச் சக்தியின் பங்கும் உற்பத்திச் சாதனங்களின் பங்கும் வெவ்வேறானவை. உழைப்புச் சக்தி புதிய மதிப்பைத் தோற்றுவிக்கிறது. ஆனால் உற்பத்திச் சாதனங்களால் எந்தவித மதிப்பையும் தோற்றுவிக்க இயலாது. உற்பத்திச் சாதனங்களின் மதிப்பு தொழிலாளிகளின் உழைப்பால் தக்க வைக்கப்பட்டு, இந்தச் சாதனங்கள் தேய்மானம் அடைவதைப் பொறுத்து புதிதாக உற்பத்தி செய்யப்படும் பண்டங்களுக்கு மாற்றப்படுகிறது. உதாரணமாக, ஒரு இயந்திரத்தால் 10 ஆண்டுகள் வேலை செய்ய முடியுமெனில் ஒவ்வொரு ஆண்டும் இது தனது மதிப்பில் பத்திலொரு பங்கை இழக்கிறது, இந்தப் பகுதி புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட பண்டத்தின் மேல் மாற்றப்படுகிறது. மூலப் பொருள், உதாரணமாக பருத்தி தயாரான வடிவத்தில் புதிய பொருளாகிய பருத்தித் துணியில் முற்றிலுமாக இடம் பெறுகிறது, பருத்தியின் மதிப்பு முழுவதும் துணியின் மதிப்பிற்கு மாற்றப்படுகிறது.

குளிர்கால மேலாடைக்குத் தேவையான துணி, உள்துணி, பொத்தான்கள் போன்றவற்றின் விலை 50 டாலர்கள், தையற்கூலி 30 டாலர்கள் என்றால் தயாரான இந்த மேலாடையின் விலை 80 டாலர்களாயிருக்கும். 50 டாலர்களுக்குச் சமமான பழைய மதிப்பு தையற்காரனால் தக்கவைக்கப்பட்டு மேலாடைக்கு மாற்றப்பட்டது. குறிப்பிட்ட உழைப்பின் போக்கில் தையற்காரனால் உருவாக்கப்பட்ட புதிய மதிப்பு 30 டாலர்களாகும்.

முதலாளித்துவ உற்பத்திப் போக்கில் தொழிலாளியால் தோற்றுவிக்கப்படும் புதிய மதிப்பு தனது அளவில் அவனது உழைப்புச் சக்தியின் மதிப்பைவிட அதிகமாயிருக்கிறது.

ஒரு மணி நேரத்தில் தொழிலாளி 2 டாலர்களுக்குச் சமமான புதிய மதிப்பைத் தோற்றுவிக்கிறான், ஒரு நாள் உழைப்புச் சக்தியின் மதிப்பு 10 டாலர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்படிப்பட்ட நிலையில் அவன் இதை ஈடு செய்வதற்காக 5 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஆனால் தொழிலாளி ஏதோ ஒரு அளவு உழைப்பை விற்கவில்லை, மாறாக தனது உழைப்புச் சக்தியை விற்கிறான், இதை வாங்குபவன் இதை விருப்பப்படி பயன்படுத்துகிறான். எனவே பாட்டாளி வேலை நாள் முழுவதும் உழைக்கிறான். இந்த வேலை நாள் 8 மணி நேரம் நீடிக்கும் என்றால் தொழிலாளி . இந்நேரத்தில் 16 டாலர்களுக்குச் சமமான புதிய மதிப்பைத் தோற்றுவிக்கிறான். இவ்வாறாக உற்பத்திப் போக்கில் தொழிலாளி தனது உழைப்பின் மூலம் தனது உழைப்புச் சக்தியின் மதிப்பைவிட அதிக மதிப்பைத் தோற்றுவிக்கிறான்.

முதலாளியால் இலவசமாக அபகரிக்கப்படும் இந்த வித்தியாசம் தான்--உபரி மதிப்பு-அவனது செல்வத்தின் மூல ஊற்றகும்.

இவ்வாறாக உபரி மதிப்பை உற்பத்தி செய்து அதை முத லாளிகள் அபகரிப்பதில்தான் முதலாளித்துவச் சுரண்டலின் சாரம் அடங்கியுள்ளது. எனவே கூலியுழைப்பு முறை என்பது கூலி அடிமை முறையாகும்.”
(சமூக விஞ்ஞானம் – முன்னேற்றப் பதிப்பகம் -1985- பக்கம் 144 - 147)