Friday 26 July 2019

முதலாளித்துவத்தின் பொது நெருக்கடி – கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்


முதலாளித்துவ முரண்பாடுகள் கூர்மையடைதல்

உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான மோதல் தான் வரலாற்று நிகழ்ச்சிப் போக்கின் உந்து சக்தியாக, ஒரு உற்பத்தி முறையிலிருந்து வேறு முறைக்கு மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய சமூகப் புரட்சிகளின் பொருளாதார அடிப்படையாக விளங்குகிறது. நமது கண்களின் முன்னே கூர்மையடைந்து வரக்கூடிய உற்பத்தியின் சமுதாயத் தன்மைக்கும் தனி முதலாளித்துவ அபகரிப்பு முறைக்கும் இடையிலுள்ள முரண்பாடு இத்தகைய மோதலின் உதாரணமாகத் திகழுகிறது. இந்த முரண்பாடுதான் முதலாளித்து வத்தின் முக்கிய முரண்பாடாகும்.

இந்தப் பகைமையான, சமரசப்படுத்த இயலாத முரண்பாடு இப்போது பெரிதும் கடுமையாக உள்ளது. அரசு- ஏகபோக முதலாளித்துவம் சோஷலிசத்தை நோக்கிய மாற்றத்திற்கான எல்லாப் பொருளாயத முன்தேவைகளையும் தயார்படுத்தியுள்ளது. பெரும் இயந்திரத் தொழில் துறையும் உற்பத்தியை மிக உயர்வான அளவில் பொதுமயப்படுத்தியதும் அராஜகத் தன்மைக்கும் நெருக்கடிகளுக்கும் முடிவுகட்டவும் சமுதாயம் முழுவதன் நலன்களுக்காக உற்பத்திச் சக்திகளின் நட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகோலவும் தேவையான சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கின்றன, ஆனால் இதற்கு முதலாவதாக உற்பத்திச் சாதனங்களின் மீதான தனிச் சொத்துடைக்கு முடிவு கட்ட வேண்டும்.

ஏகாதிபத்தியம் அழிந்து வரக் கூடிய முதலாளித்துவம் என்பதற்கு, அது தானாகவே, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான வெகுஜனங்களின் தீர்மான கரமான போராட்ட மின்றி அழிந்துவிடும் என்பது பொருளல்ல, வி.இ.லெனின் ஏகாதிபத்தியத்தை சோஷலிசப் புரட்சியின் முன்னணைப் பொழுது என்று குறிப்பிட்டார். நிச்சயமாக ஏகபோக முதலாளி வர்க்கம் போராட்டமின்றி விட்டுக் கொடுக்காது, முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்க அது சக்திகள் அனைத்தையும் செல்விடும். ஆனால் தவிர்க்க இயலாததை அதனால் தடுக்க முடியாது. முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் மேன்மேலும் கூர்மையடைந்து அதன் அழிவிற்கு இட்டுச் செல்லுகின்றன.

உழைப்பாளிகளைச் சுரண்டுவதன் மூலம் தனது செல்வங்களைப் பெருக்கும் ஏகபோக முதலாளி வர்க்கம் இவர் களுடைய வளர்ந்து வரும் எதிர்ப்பைச் சந்திக்கிறது. முதலாளித்துவ ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் சமுதாயத்தின் சோஷலிச மாற்றத்திற்காகவும் தொழிலாளி வர்க்கமும் மக்கள் திரளினரும் நடத்தும் புரட்சிகர இயக்கம் வளர்ந்து மேன்மேலும் பலமடைகிறது.

காலனிகளின் மக்களை அடிமைப்படுத்தி, பின் அவர்களைப் பொருளாதார சார்புநிலை எனும் வலையில் சிக்கவைத்த ஏகபோக முதலாளி வர்க்கம் அவர்களது தேசியச் செல்வத்தைக் கொள்ளையடிப்பதன் மூலம் தொடர்ந்து லாபம் சம்பாதிக்கிறது. இதனால் ஏகாதிபத்திய அடிமை முறைக்கு எதிரான மக்களின் தேசிய விடுதலை இயக்க அலை வளர்ந்து வருகிறது.

அடக்குமுறையைப் பின்பற்றி யுத்தங்களைக் கட்டவிழ்த்து விட்டு ஏகபோக முதலாளி வர்க்கம் தனது சுய நலன்களுக்காகப் பல லட்சக்கணக்கான மனித உயிர்களைப் பழிவாங்குகிறது. பல்லாண்டு மனித உழைப்பால் தோற்றுவிக்கப்பட்ட செல்வங்களைப் போராட்டச் சுவாலையில் இட்டுப் பொசுக்குகிறது. இதனால் ஜனநாயகத்திற்கும் சமாதானத்திற்குமான மக்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது.

இந்த மகத்தான சக்திகள் அனைத்தும் ஒரே பெருக்காக ஒன்றுசேர்ந்து ஏகாதிபத்தியத்தை அழிக்கின்றன. முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க இயலாத மறைவு கட்டம், முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்தை நோக்கி மாறும் கட்டம் வருகிறது.

முதலாளித்துவம் சமமின்றி வளர்ந்து வருவதால் சோஷலிசத்திற்குச் சமுதாயம் மாறுவதும் ஒரே நேரத்தில் நடைபெறாது. முதலாளித்துவத்தின் அழிவும் சோஷலிசத்தின் வெற்றியும் ஒரு சகாப்தம் முழுவதும் நீடிக்கக் கூடிய நீண்ட நிகழ்ச்சிப் போக்காகும். இச்சகாப்தம் முதலாளித்துவத்தின் பொது நெருக்கடி சகாப்தம்.

முதலாளித்துவ பொது நெருக்கடியின் கட்டங்கள்

முதலாளித்துவத்தின் பொது நெருக்கடிக் காலகட்டத்தில், தனிப்பட்ட நாடுகளைத் தனது ஆதிக்கத்தின் கீழ் இனிமேலும் முதலாளித்துவ அமைப்பு வைத்திருக்க இயலாத அள்விற்கு இதன் உள் முரண்பாடுகள் கூர்மையடைகின்றன; இந்த நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக இதிலிருந்து விலகி சோஷலிசப் பாதைக்கு வருகின்றன. மறு புறத்தில் சோஷலிச அமைப்பின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் பலப்படுத்தலும் ஏகாதிபத்தியத்தின் சிதைவை மேலும் அதிகமாகத் துரிதப்படுத்துகின்றன.

முதலாளித்துவ பொது நெருக்கடியின் முதல் கட்டம் முதல் உலக யுத்தத்தையடுத்து, குறிப்பாக அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் வெற்றியோடு துவங்கியது. அக்டோபர் புரட்சி தொழிலாளர் மற்றும் தேசிய விடுதலை இயக்கத்தின் மீது பெரும் செல்வாக்கு செலுத்தியது, சமுதாய வளர்ச்சி முழுவதற்கும் பெரும் உந்து சக்தியை அளித்தது. சோஷலிசம் தத்துவத்திலிருந்து நடைமுறையாகியது, முதலாளித்துவத்தின் தவிர்க்க இயலாத அழிவைப் பற்றியும் அதைப் புதிய சமுதாய அமைப்பால் மாற்றுவதைப் பற்றியும் மார்க்சிய-லெனினியப் போதனை கூறிய ஆரூடத்தின் உண்மை முதன் முதலாக மெய்ப்பிக்கப்பட்டது.

இரண்டாவது உலக யுத்தம் முதலாளித்துவத்தின் பொது நெருக்கடியைக் கூர்மையாக்கி ஆழப்படுத்தியது; ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பல நாடுகள் முதலாளித்துவ அமைப்பிலிருந்து விலகியதையடுத்து இந்த நெருக்கடியின் இரண்டாவது கட்டம் துவங்கியது. சோஷலிசம் ஒரு நாட்டின் வரம்பை விட்டு வெளியேறி உலக அமைப்பாக மாறியது. அதே பொழுது தேசிய விடுதலைப் புரட்சிகள், பல முந்தைய காலனிகள் மற்றும் அரைக் காலனிகளின் இடத்தில் சுயமான அரசுகளைத் தோற்றுவித்தன.

50ம் ஆண்டுகளின் இரண்டாம் பாதியிலிருந்து முதலாளித்துவ பொது நெருக்கடியின் மூன்றாவது கட்டம் ஆரம்பமாகியது, இது உலக யுத்தத்தோடு தொடர்பின்றி துவங்கியது என்பதில் தான் இதன் சிறப்பியல்பு அடங்கியுள்ளது. முன்பு சமாதானக் காலத்தில் உழைப்பாளிகளின் சோஷலிச இயக்கத்தையும் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் தேசிய விடுதலை இயக்கத்தையும் நசுக்கக் கூடிய அளவிற்கு முதலாளித்துவம் சக்தி வாய்ந்ததாக இருந்தது; பரஸ்பர வேறுபாடுகளால் பலவீனமடைந்து, அவர்களாலேயே மூட்டி விடப்பட்ட உலக யுத்தங்களில் மும்முரமாயிருந்ததால் தான் ஏகாதிபத்தியவாதிகளால் விடுதலை இயக்கங்களின் பெரும் வெற்றிகளுக்குத் தடைவிதிக்க இயலவில்லை.

இப்போது அவர்களால் சமாதானக் காலத்திலும் கூட இதைச் செய்ய இயலவில்லை. காலனியாதிக்க முறையின் சிதைவு இதைத் தெளிவாக நிரூபிக்கிறது.”
(சமூக விஞ்ஞானம் – முன்னேற்றப் பதிப்பகம் -1985- பக்கம் 169 - 172)


No comments:

Post a Comment