Monday 7 October 2019

முதலாளித்துவ உற்பத்தி முறையில் சமூகமயமாகி விட்ட பொருளுற்பத்திக்கும் முதலாளித்துவ சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு தொடர்ந்து வளர்ச்சியடைதல்- எங்கெல்ஸ்


(முதலாளித்துவ உற்பத்தி முறையில் சமூகமயமாகி விட்ட பொருளுற்பத்திக்கும் முதலாளித்துவ சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, முதலாளித்துவ உற்பத்தி முறையின் வளர்ச்சியோடு முரணும் முற்றுகிறது. தனிச் சொத்துடமையின் விளைவாய் ஏற்படும் இந்த முரண்பாடு பொதுச்சொத்தாகும் வரை தீராது.)

“தனிப்பட்ட உற்பத்தியாளர் தமக்குச் சொந்தமானதும், பொதுவாய்த் தாமே தயாரித்ததுமான மூலப் பொருளைக் கொண்டு தமது சொந்தக் கருவிகளை உபயோகித்து, தமது கரங்களது உழைப்பாலோ, தமது குடும்பத்தாரின் உழைப்பாலோ அதை உற்பத்தி செய்வது தான் வழக்கமாக இருந்தது. இந்த உற்பத்தியாளர் இந்தப் புதிய உற்பத்திப் பொருளைச் சுவீகரிக்கத் தேவையில்லை. இயற்கையாகவே அது முற்றிலும் அவருக்கே உரியதாகி விட்டது. ஆகவே இந்த உற்பத்திப் பொருளில் அவருக்கிருந்த உடைமை அவருடைய சொந்த உழைப்பை அடிப்படையாய்க் கொண்டிருந்தது. வெளியார் உதவி உபயோகிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பங்களிலும் கூட வழக்கமாய் அது அதிக முக்கியத்துவம் பெறவில்லை; கூலிக்கும் கூடுதலாகப் பிற வகையில் அதற்கு ஈடு செய்வதே வழக்கமாக இருந்தது. கில்டுகளில் வேலை பழகிக் கொண்டோரும் துணையாளர்களும் வேலை செய்தது தாமும் உரிமை பெற்ற கைவினைஞர்களாகும் பயிற்சி பெறுவதற்கே அன்றி சாப்பாட்டுடனான தங்கும் வசதி மற்றும் கூலி பெறுவதற்கோ அல்ல.

பிறகு உற்பத்தி சாதனங்களும் (மற்றும் உற்பத்தியாளர்களும்) பெரிய தொழிலகங்களிலும் பட்டறைகளிலும் குவிந்து செறிந்து மெய்யாகவே சமூகமயமான உற்பத்தி சாதனங்களாக (சமூகமயமான உற்பத்தியாளர்களாக) மாற்றமடை வது நிகழ்ந்தது. ஆனால் இந்த (சமூகமயமான உற்பத்தியாளர்களும்) உற்பத்தி சாதனங்களும் மற்றும் அவற்றின் உற்பத்திப் பொருட்களும் இந்த மாற்றத்துக்குப் பிற்பாடும் முன்பு போலவே இருப்பதாய், அதாவது தனி ஆட்களின் உற்பத்தி சாதனங்களாகவும் உற்பத்திப் பொருள்களாகவும் இருப்பதாய்க் கொள்ளப்பட்டுக் காரியங்கள் நடைபெற்றன இது காறும் உழைப்புச் சாதனங்களின் உடைமையாளர் உற்பத்திப் பொருட்களையும் தாமே சுவீகரித்துக் கொண்டிருந்தார், ஏனெனில் பொதுவாக அது அவரது உற்பத்திப் பொருளாகவே இருந்தது, ஏனையோருடைய உதவி விதிவிலக்காகவே இருந்தது.

இப்பொழுது உழைப்புச் சாதனங்களின் உடைமையாளர் உற்பத்திப் பொருள் தம்முடைய உற்பத்திப் பொருளாய் இல்லாமல் முற்றிலும் ஏனையோர் உழைப்பின் உற்பத்திப் பொருளாய் இருந்த போதிலும் அதைத் தாமே தொடர்ச்சியாகச் சுவீகரித்துக் கொண்டார். இவ்வாறாக, இப்பொழுது சமூக முறையில் உற்பத்தி செய்யப்பட்ட இந்தப் பொருட்கள், உண்மையில் உற்பத்தி சாதனங்களை இயக்கிப் பரிவர்த்தனைப் பொருட்களை உற்பத்தி செய்தோரால் சுவீகரிக்கப் படவில்லை ஆனால் முதலாளிகளால் சுவீகரிக்கப்பட்டன.

உற்பத்தி சாதனங்களும் மற்றும் பொருளுற்பத்தியும் சாராம்சத்தில் சமூகமயமாகி விட்டன. ஆயினும், தனி ஆட்களது தனியார் பொருளுற்பத்தி இருப்பது போலவும் ஆகவே இதன்படி ஒவ்வொருவரும் தமது உற்பத்திப் பொருளுக்குத் தாமே உடைமையாளராய் இருந்து அதைச் சந்தையில் விற்பனை செய்வது போலவும் அமைந்த சுவீகரிப்பு முறைக்கு இந்த உற்பத்தி சாதனங்களும் பொருளுற்பத்தியும் உட்படுத்தப்பட்டன. பொருளுற்பத்தி முறையானது இந்த சுவீகரிப்பு முறைக்கு ஆதாரமாயமைந்த நிலைமைகளை ஒழித்திட்ட போதிலும் அது இம்முறைக்கு உட்படுத்தப்படுகிறது.

புதிய பொருளுற்பத்தி முறைக்கு அதன் முதலாளித்துவத் தன்மையை அளித்திடும் இந்த முரண்பாட்டில் இன்றையச் சமூகப் பகைமைகள் முழுவதன் கரு அடங்கியிருக்கிறது. எல்லா முக்கிய உற்பத்தித் துறைகளிலும் பொருளாதாரத் துறையில் நிர்ணயமான நாடுகள் அனைத்திலும் புதிய பொருளுற்பத்தி முறை எவ்வளவுக்கெவ்வளவு ஆக்கம் பெற்றதோ தனி ஆள் பொருளுற்பத்தியை எவ்வளவுக்கெவ்வளவு சுருங்கச் செய்து அற்பசொற்பமாக்கியதோ அவ்வளவுக்கவ்வளவு, சமூகமயப் பொருளுற்பத்திக்கு முதலாளித்துவ சுவீகரிப்பு ஒவ்வாதென்பது தெளிவாய்ப் புலப்படுத்திக் காட்டப்பட்டது.

முதன் முதலில் தோன்றிய முதலாளிகள் ஏற்கெனவே நாம் கூறியது போல, (பிற உழைப்பு வடிவங்களுடன் கூடவே] கூலியுழைப்பு (சந்தையில்) தமக்குத் தயார் நிலையில் இருப்பதைக் கண்டனர். ஆனால் இது விதிவிலக்காகவும், துணைக் கூறாகவும், இரண்டாந்தரமாகவும், தற்காலியமானதுமான கூலி உழைப்பாக இருந்தது. விவசாயத் தொழிலாளி சில சமயம் நாட்கூலியாய் வேலைக்கு வந்த போதிலும் அவன் எப்படியோ ஒருவாறு பிழைப்பை நடத்துவதற்கான சில ஏக்கர் சொந்த நிலம் வைத்திருந்தான். கைவினைச் சங்க ஒழுங்கமைப்பில் இன்று சங்கத் துணைவினைஞனாக இருந்தவர் நாளை சங்கக் கைவினைஞராக முடிந்தது.

 ஆனால் உற்பத்தி சாதனங்கள் சமூகமயமாகி அவை முதலாளிகள் கைகளில் திரண்டு குவிந்ததும் இவையாவும் மாறலாயின. தனிப்பட்ட உற்பத்தியாளருடைய உற்பத்தி சாதனங்களும் மற்றும் உற்பத்திப் பொருள்களின் மதிப்பும் மேலும் மேலும் குறைந்து போயின; முதலாளியிடம் வேலை செய்யும் கூலித் தொழிலாளியாக மாறுவதைத் தவிர அவருக்கு வேறு வழி ஏதும் இல்லை. இதற்கு முன் விதிவிலக்காகவும் இரண்டாந்தரமாகவும் இருந்த கூலி உழைப்பு இப்பொழுது பொருளுற்பத்தி அனைத்தின் விதி முறையும் அடித்தளமுமாயிற்று; இதன் முன் துணைக் கூறாக இருந்த இது, இப்பொழுது தொழிலாளியின் எஞ்சி நின்ற ஒரே பணியாகி விட்டது. இடையிடையே சிறிது காலம் கூலித் தொழிலாளியாய் வேலை செய்து வந்தவர் வாழ்நாள் முழுதுக்குமே கூலித் தொழிலாளியாகி விட்டார்.

இதே காலத்தில் நிகழ்ந்த பிரபுத்துவ அமைப்பின் தகர்வாலும், பிரபுத்துவக் கோமான்களின் பணியாட்களின் குழுக்கள் கலைக்கப் பட்டதாலும், விவசாயிகள் உடைமை நீக்கம் செய்யப்பட்டுத் தமது குடும்ப நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதாலும் இன்ன பிறவற்றாலும் இந்த நிரந்தரக் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் பிரம்மாண்டமாக அதிகரித்தது. ஒரு புறம் தமது கைகளில் உற்பத்தி சாதனங்கள் திரண்டு குவிந்திருந்த முதலாளிகளுக்கும், மறுபுறம் தமது உழைப்புச் சக்தி அன்றி வேறு எந்த உடைமையும் இல்லாத உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான பாகுபாடு முழு நிறைவாக்கப் பட்டது. சமூகமயமாகி விட்ட பொருளுற்பத்திக்கும், முதலாளித்துவச் சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையாய்த் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

தமது உற்பத்திப் பொருள்களின் பரிவர்த்தனையைத் தம்மிடையிலான சமூகப் பந்தமாய் கொண்ட பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தியாளர்கள், தனிப்பட்ட உற்பத்தியாளர்களின் சமுதாயத்தினுள் முதலாளித்துவப் பொருள் உற்பத்திமுறை புகுந்து தனக்குப் பாதை வகுத்துக் கொண்டதை நாம் கண்டோம். ஆனால் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தியை அடிப்படையாய்க் கொண்ட ஒவ்வொரு சமுதாயத்திற்குமுரிய விசேஷ இயல்பு என்னவெனில் உற்பத்தியாளர்கள் தமது சொந்த சமூக இடையுறவுகள் மீதான கட்டுப்பாட்டை இழந்து விட்டார்கள் என்பதே. ஒவ்வொருவரும் தம்மிடம் இருக்கும் படி வாய்த்துள்ள உற்பத்தி சாதனங்களைக் கொண்டு தமக்காகவும், தமது எஞ்சிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு அவசியமான பரிவர்த்தனைக்காகவும் உற்பத்தி செய்கிறார்.

குறிப்பிட்ட தனது பண்டம் எந்தளவு சந்தைக்கு விற்பனைக்கு வரும், எந்தளவில் அதற்குத் தேவை இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. தாம் உற்பத்தி செய்யும் பண்டத்திற்கு உள்ள படியே தேவை இருக்குமா, அவர் தமது உற்பத்திச் செலவை ஈடு செய்து கொள்ள முடியுமா என்றோ அல்லது தமது பண்டத்தை விற்க முடியப் போகிறதா என்றோ கூடயாருக்கும் தெரியாது. சமூகமயமாகி விட்ட பொருளுற்பத்தியில் அராஜகம் தலைவிரித்தாடுகிறது.

ஆயினும் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தி, வேறு எந்த வகையான உற்பத்தியையும் போலவே அதற்கே உரியவையான உள்ளியல்பான விதிகளை, அதனின்று தனியே பிரிக்க முடியாத விதிகளைப் பெற்றிருக்கிறது. அராஜகத்தையும் மீறி இந்த விதிகள் அராஜகத்தினுள்ளும் அதன் வாயிலாகவும் செயல்படுகின்றன. சமூகப் பரஸ்பர உறவுகளின் விடாப்பிடியான ஒரே வடிவத்தில், அதாவது பரிவர்த்தனையில், இவ்விதிகள் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன. இங்கு இவை போட்டியின் கட்டாய விதிகளாய்த் தனிப்பட்ட உற்பத்தியாளர்களைப் பாதிக்கின்றன.

ஆரம்பத்தில் இவை இந்த உற்பத்தியாளர்களுக்கே தெரியாத விதிகளாய் இருக்கின்றன. இவர்கள் இவற்றைச் சிறிது சிறிதாகவும் அனுபவத்தின் வாயிலாகவும் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே இவை உற்பத்தியாளர்களைச் சாராது எதேச்சையாகவும் அவர்களுக்கு எதிராகவும் அவர்களது தனிவகைப் பொருளுற்பத்தி முறையின் இரக்கமற்ற இயற்கை விதிகளாய்ச் செயல்படுகின்றன. உற்பத்திப் பொருளானது உற்பத்தியாளர்களை ஆட்சி புரிகிறது.”
(டூரிங்குக்கு மறுப்பு – பக்கம் 470-474)

Sunday 6 October 2019

முதலாளித்துவ உற்பத்தி முறையினுடைய உள்முரண்பாட்டு பற்றியும் அதை நவீனப் பாட்டாளி வர்க்கம் அதனை வீழ்த்துவதின் வரலாற்றுக் பணியை வெளிப்படுத்துவதே விஞ்ஞான சோஷலிசத்தின் கடமை என்பது பற்றியும் எங்கெல்ஸ்:-


“முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை வரலாற்றில் உதித்தெழுந்தது முதலாகவே, உற்பத்திச் சாதனங்கள் யாவும் சமுதாயத்தால் சுவீகரிக்கப்பட வேண்டும் என்பதை வருங்காலத்துக்குரிய ஒரு இலட்சியமாகத் தனி மனிதர்களும் குழுவினர்களும் தெளிவற்ற முறையில் கனவு கண்டு வந்துள்ளனர். ஆனால் இது சித்தி பெறுவதற்கு வேண்டிய எதார்த்த நிலைமைகள் தோன்றிய பிறகே இது சாத்தியமாக முடியும், வரலாற்று அவசியமாக முடியும். ஏனைய எந்த ஒரு சமூக முன்னேற்றத்தையும் போலவே இது வர்க்கங்கள் இருப்பது நீதிக்கும் சமத்துவத்துக்கும் இன்ன பிறவற்றுக்கும் முரணாகும் என்று மனிதர்கள் உணர்வதாலோ, அல்லது இந்த வர்க்கங்களை ஒழிக்க வேண்டும் என்று வெறுமனே விரும்புவதாலோ நடைமுறை சாத்தியமாகவில்லை, மாறாக சில குறிப்பிட்ட புதிய பொருளாதார நிலைமைகளின் காரணமாகவே நடை முறை சாத்தியமாகிறது.

சுரண்டும் வர்க்கமாகவும் சுரண்டப் படும் வர்க்கமாகவும், ஆளும் வர்க்கமாகவும் ஒடுக்கப்படும் வர்க்கமாகவும் சமுதாயம் பிளவுண்டதானது முற்காலங்களில் பொருளுற்பத்தியின் வளர்ச்சி பற்றாக்குறையாகவும் குறுகிய வரம்புக்குட்பட்டதாகவும் நிலவியதால் ஏற்பட்டதன் தவிர்க்க முடியாத விளைவாகும். மொத்த சமூக உழைப்பால் கிடைக்கும் உற்பத்திப் பொருட்கள் எல்லோருடைய உயிர் வாழ்வுக்கும் வேண்டிய அத்தியாவசிய அளவைக்காட்டிலும் சொற்ப அளவே அதிகமாய் இருக்கும் வரை, இதன் காரணமாய்ச் சமுதாயத்தின் உறுப்பினர்களில் மிகப் பெருவாரியானோரின் முழு நேரமும் அல்லது அனேகமாய் முழு நேரமும் உழைப்புக்காக ஈடுபடுத்த வேண்டியிருக்கும் வரையில் இந்தச் சமுதாயம் தவிர்க்க முடியாதவாறு வர்க்கங்களாய்ப் பிளவுற்றிருக்க வேண்டியதாகிறது.

முற்றிலும் உழைப்பிலே மட்டும் ஈடுபட வேண்டிய கொத்தடிமைகளான மிகப் பெருவாரியுடன் கூடவே நேரடியான பொருளுற்பத்திக்குரிய உழைப்பில் இருந்து விடுபட்ட ஒரு வர்க்கம் தோன்றி உழைப்பை நெறிப்படுத்தல், அரசு, சட்டம், விஞ்ஞானம், கலை விவகாரங்கள் போன்ற சமுதாயத்தின் பொது அலுவல்களைக் கவனித்து வருகிறது. ஆகவே உழைப்புப் பிரிவினை விதிதான் வர்க்கப் பிரிவினைக்கு அடிப்படையாய் அமைகிறது. ஆனால் இந்த வர்க்கப் பிரிவினை பலாத்காரம், கொள்ளை, சூழ்ச்சி மற்றும் மோசடி மூலம் செயல்படுத்தப்படுவதை இது தடுக்கவில்லை. ஆதிக்க நிலை பெற்றதும் ஆளும் வர்க்கம் தொழிலாளி வர்க்கத்துக்குப் பிரதி கூலமாக தனது ஆதிக்கத்தை உறுதியாக வலுப்படுத்திக் கொள்வதையோ, சமுதாயத்தில் தனக்கிருந்த தலைமையினைப் பெருந்திரளான மக்களை [மேலும் கடுமையாக) சுரண்டுவதற்காக மாற்றிக் கொள்வதையோ இது தடுக்கவில்லை.

ஆனால் வர்க்கப் பிரிவினைக்கு இந்த விதத்தில் வரலாற்று வழியில் ஓரளவு நியாயம் உண்டெனில், இது குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே குறிப்பிட்ட சமூக நிலைமைகளின் கீழ் மட்டுமே உள்ளதாகும். இதற்குப் பொருளுற்பத்தியின் போதாமையே அடிப்படையாக இருந்தது. இது நவீன உற்பத்தி சக்திகளுடைய முழு வளர்ச்சியால் துடைத்தெறியப் பட்டுவிடும். உண்மையில் சமுதாயத்தில் வர்க்கங்கள் ஒழிக்கப் படுவதற்கு வரலாற்று வழியிலான பரிணாம வளர்ச்சி குறிப்பிட்ட ஓர் அளவுக்கு இருப்பது முன் நிபந்தனை யாகும். இந்தப் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டதும், குறிப்பிட்ட இந்த அல்லது அந்த ஆளும் வர்க்கம் மட்டுமன்றி, ஆளும் வர்க்கம் என்பதாய் எதுவும் இருப்பதும், ஆகவே வர்க்கப் பாகுபாடு இருப்பதும் காலங்கடந்து போய்ச் சிறிதும் ஒவ்வாதனவாகி விடும்.

சமுதாயத்தின் எந்த வர்க்கமும் உற்பத்தி சாதனங்களையும் உற்பத்திப் பொருட்களையும் சுவீகரித்துக் கொள்வதும், அதோடு கூட அரசியல் ஆதிக்கம் செலுத்துவதும், கலாசார ஏகபோகமும் அறிவுத் துறை தலைமையும் வகிப்பதும் தேவையற்றதாவதுடன் வளர்ச்சிக்குப் பொருளாதார வழியிலும் அரசியல் வழியிலும் அறிவுத்துறை வழியிலும் இடையூறாகி விடும்படியான அளவுக்குப் பொருளுற்பத்தி வளர்ச்சியுறுவது வர்க்கங்கள் ஒழிக்கப்படுவதற்குரிய முன் நிபந்தனையாகும்.

இந்த வளர்ச்சி நிலை தற்போது எய்தப்பட்டுவிட்டது. அரசியல் துறையிலும் அறிவுத் துறையிலும் முதலாளித்துவ வர்க்கம் வக்கிழந்து வகையிழந்து விட்டது என்பது முதலாளித்துவ வர்க்கத்துக்கே இனி ஓர் இரகசியமாய் இருப்பதாய்க் கூற முடியாது. இவ்வர்க்கத்தாரின் பொருளாதாரத்திலான வக்கிழந்த வகையிழந்த தன்மை [bankruptcy] பத்தாண்டுக்கு ஒரு தரம் முறையாய் மீண்டும் வெளிப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தரமும் நெருக்கடியின் போது சமுதாயம் அதனுடைய உற்பத்தி சக்திகள், உற்பத்திப்பொருள்களது சுமையின் கீழ் திணறித் திக்குமுக்காடுகிறது.

இந்த உற்பத்தி சக்திகளையும் உற்பத்திப் பொருட்களையும் சமுதாயத்தால் உபயோகித்துக் கொள்ள முடியவில்லை; உற்பத்தியாளர்களுக்கு நுகர ஏதுமில்லை, ஏனென்றால் நுகருவோர் போதியளவு இல்லை என்னும் இந்த அபத்த முரண்பாட்டின் முன்னால் சமுதாயம் ஒன்றும் செய்ய இயலாததாய் நிற்கிறது. உற்பத்தி சாதனங்களுடைய விரிவகற்சியின் வலிமை முதலாளித்துவ உற்பத்தி முறை அவற்றின் மீது திணித்துள்ள கட்டுக்களை உடைத்தெறிகிறது. இந்தக் கட்டுக்களிலிருந்து உற்பத்தி சாதனங்கள் விடுதலை பெறுவது உற்பத்தி சக்திகள் இடைமுறிவு இன்றி இடையறாது துரித வேகத்தில் வளர்ச்சி பெறுவதற்கும் இவ்விதம் பொருளுற்பத்தி அனேகமாய் வரம்பின்றிப் பெருகிச் செல்வதற்குமான ஒரேயொரு முன் நிபந்தனையாகும்.

இது மட்டுமல்ல. உற்பத்தி சாதனங்களைச் சமுதாயம் சுவீகரித்துக் கொள்வதானது தற்போது - பொருளுற்பத்திமீது இருந்து வரும் செயற்கையான தடைகளை - ஒழித்துக் கட்டுவதோடு கூட இன்று பொருளுற்பத்தியின் - தவிர்க்க முடியாத உடனிணைவுகளாகி நெருக்கடிகளின் போது உச்ச நிலைக்கு உக்கிரமாகிவிடும் உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்திப் பொருள்களின் அப்பட்டமான விரயத்துக்கும் அழிவுக்கும் முடிவு கட்டிவிடும். தவிரவும் இன்றைய ஆளும் வர்க்கங்களும் அவற்றின் அரசியல் பிரதிநிதிகளும் புரிந்து வரும் அர்த்தமற்ற ஊதாரித்தனத்துக்கு முடிவு கட்டுவது மூலம் அது பொதுவில் சமுதாயத்துக்குப் பெரிய அளவில் உற்பத்தி சாதனங்களையும் உற்பத்திப் பொருள்களையும் விடுவித்துக் கொடுக்கும்.

சமூகமயமான பொருளுற்பத்தி மூலம் சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பொருளாயத நிலையில் முற்றிலும் போதுமானதும் நாளுக்குநாள் மேலும் பூரணமாகி வருவதுமான வாழ்வை மட்டுமன்றி எல்லோருக்கும் தமது உடல் ஆற்றல்களும் உள்ளத்து ஆற்றல்களும் தங்கு தடையின்றி வளர்ச்சியடைவதற்கும் செயல்படுவதற்கும் உத்தரவாதம் செய்யும் வாழ்வையும் கிடைக்கச் செய்வதற்கான சாத்தியப்பாடு இப்பொழுது இருப்பதோடு, கை வரப் பெறவும் செய்கிறது.

உற்பத்தி சாதனங்களைச் சமுதாயம் கைப்பற்றிக் கொண்டதும், பரிவர்த்தனைப் பண்ட உற்பத்திக்கு முடிவுகட்டப்பட்டு விடுகிறது. இதனுடன் கூடவே உற்பத்தியாளரை உற்பத்திப் பொருள் அடக்கி ஆண்மை செலுத்துவதும் ஒழிந்து விடுகிறது. சமூகப் பொருளுற்பத்தியில் அராஜகம் ஒழிக்கப்பட்டு, திட்டப் பொருத்தமுடைய, உணர்வு பூர்வமான ஒழுங்கமைப்பு உண்டாக்கப்படுகிறது. தனி மனிதனின் பிழைப்புப் போராட்டம் மறைகிறது, இதன்பின் முதன் முதலாய் மனிதன் ஒரு வகை அர்த்தத்தில் விலங்கின உலகிலிருந்து முடிவாய்த் துண்டித்துக் கொண்டு விலங்கின வாழ் நிலைமைகளிலிருந்து வெளிப்பட்டு மெய்யான மனித வாழ் நிலைமைகளினுள் பிரவேசிக்கிறான். மனிதனது சுற்றுச் சார்பாய் அமைந்து, இது காறும் மனிதனை ஆட்சி செய்து வந்த வாழ் நிலைமைகள் இப்பொழுது மனிதனுடைய ஆதிக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டு விடுகின்றன; முதன் முதலாய் மனிதன் இயற்கையின் மெய்யான உணர்வு பூர்வமான அதிபதி ஆகின்றான். ஏனெனில் இப்பொழுது அவன் தனது சமூக ஒழுங்கமைப்பை ஆட்சி புரியும் எஜமானன் ஆகிவிடுகிறான்.

அவனுடைய சமூகச் செயற்பாடுகளின் விதிகள், இது காறும் இயற்கை விதிகளாய் அவனுக்கு அன்னியமாய் இருந்து ஆதிக்கம் செலுத்தி அவனை ஆட்டிப் படைத்த இந்த விதிகள், இனி அவனால் பூரணமாய் உணரப்பட்டுப் பயன்படுத்திக் கொள்ளப்படும்; ஆகவே மனிதன் இவற்றின் மீது ஆண்மை செலுத்துகிறவன் ஆகிவிடுவான். இதுகாறும் இயற்கை மற்றும் வரலாற்றால் தவிர்க்க முடியாதது என்று மனிதனுக்கு எதிராகத் திணிக்கப்பட்டு வந்த மனிதனது சொந்த சமூக ஒழுங்கமைப்பானது இப்போது அவனது கட்டற்ற செயல்பாட்டின் விளைவாகிறது. இதுவரை வரலாற்றை ஆளுமை செய்த அயலான புறநிலை சக்திகள் நேரடியாய் மனிதனது கட்டுப் பட்டின் கீழ்வருகின்றன. அது முதல் தான் மனிதன் முழு உணர்வுடன் தனது சொந்த வரலாற்றைத் தானே படைப்பவனாவான்; அது முதல் தான் அவனால் இயக்குவிக்கப்பட்ட சமுதாய நோக்கங்கள் பிரதானமாயும் இடையறாத அதிகரித்த அளவிலும் அவன் உத்தேசித்த விளைவுகளை அடையும். அவசியத்தின் ஆட்சியிலிருந்து சுதந்திரத்தின் ஆட்சிக்கு மனிதன் வளர்ந்து உயருவதை இது குறிப்பதாகும்.

[வரலாற்றுப் பரிணாம வளர்ச்சி குறித்து நாம் கூறியதைச் சுருக்கமாய்த் தொகுத்தளிப்போம்.

1.மத்திய காலச் சமுதாயம் - தனிப்பட்டோரது சிறு வீதப் பொருளுற்பத்தி. உற்பத்திச் சாதனங்கள் தனிப்பட்டோரது உபயோகத்துக்கு ஏற்றனவாய் இருக்கின்றன; ஆகவே புராதனமாய், செப்பமற்றனவாய், சின்னஞ்சிறியன்வாய், செயலில் சிறுதிறத்தனவாய் இருக்கின்றன. நேரே உற்பத்தியாளர் அல்லது அவரது பிரபுத்துவக் கோமானது உடனடி நுகர்வுக்காகப் பொருளுற்பத்தி நடை பெறுகிறது. இந்த நுகாவுக்கும் கூடுதலாய் உற்பத்தி செய்யப்படும் போது தான் இந்த உபரிப் பொருள் விற்கப்படுகிறது. பரிவர்த்தனைக்கு வருகிறது. ஆகவே - பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தி பிள்ளைப் பருவத்திலே தான் இருக்கிறது. ஆனால் பொதுவில் சமுதாயத்தின் பொருளுற்பத்தியிலான அராஜகத்தை அது ஏற்கெனவே தன்னுள் கரு வடிவில் கொண்டுள்ளது.

2.முதலாளித்துவப் புரட்சி - தொழில் துறை மாற்றி யமைக்கப்படுதல்; முதலில் எளிய கூட்டுறவு அமைப்பு மற்றும் பட்டறைத் தொழில் இவற்றின் மூலம் இது நடைபெறுகிறது. இது காறும் சிதறிக்கிடந்த உற்பத்தி சாதனங்கள் பெரிய தொழிலகங்களாய் ஒன்று குவிகின்றன. தனி ஆட்களது உற்பத்தி சாதனங்களாய் இருந்தவை இதன் விளைவாய் சமூக உற்பத்திச் சாதனங்களாய் மாற்றப்படுகின்றன. ஆனால் இந்த மாற்றத்தால் மொத்தத்தில் பரிவர்த்தனையின் வடிவம் பாதிக்கப்பட்டு விடவில்லை. பழைய சுவீகரிப்பு முறைகள் மாற்றமின்றி அப்படியே செயல்பட்டு வருகின்றன. முதலாளி தோற்றமளிக்கிறார். உற்பத்திச் சாதனங்களுடைய உடைமையாளர் என்ற முறையில் உற்பத்திப் பொருள்களை அவர் தாமே அபகரித்துக் கொண்டு அவற்றைப் பரிவர்த்தனைப் பண்டங்களாக மாற்றி விடுகிறார். பொருளுற்பத்தி சமூகச் செயலாகி விட்டது. பரிவர்த்தனையும் சுவீகரிப்பும் தொடர்ந்து தனி ஆள் செயல்களாய், தனிப்பட்டோரது செயல்களாய் நீடிக்கின்றன. சமூக உழைப்பினாலான உற்பத்திப் பொருள் தனிப்பட்ட முதலாளியால் சுவீகரித்துக் கொள்ளப்படுகிறது. இந்த அடிப்படை முரண்பாட்டில் இருந்து தான் நமது இன்றைய சமுதாயத்துக்கு உரியவையான எல்லா முரண்பாடுகளும் நவீனத் தொழில் துறையால் பகிரங்கமாக்கப்படும் இந்த எல்லா முரண்பாடுகளும் எழுகின்றன.

அ) உற்பத்தியாளர் உற்பத்திச் சாதனங்களிலிருந்து துண்டித்து விலக்கப்படுதல், தொழிலாளி ஆயுள் முழுதும் கூலி உழைப்பில் உழலும் சாபக்கேட்டுக்கு ஆளாவது. பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான பகைமை.

ஆ) பரிவர்த்தனைப் பண்டங்களின் உற்பத்தியை ஆளுமை செய்யும் விதிகள் மென்மேலும் தலைமை ஆதிக்கம் பெறு தலும், மேலும் அதிகரித்த பயனுறுதி கொண்டனவாதலும். கட்டுக் கடங்காத போட்டா போட்டி. தனிப்பட்ட ஆலையில் பொருளுற்பத்தியின் சமூகமயமாக்கப்பட்ட ஒழுங்கமைப்புக்கும் பொதுவில் பொருளுற்பத்தியிலான சமூக அராஜகத்துக்கும் இடை பிலான முரண்பாடு.

இ) ஒரு புறத்தில் தனிப்பட்ட ஆலை அதிபர் ஒவ்வொருவருக்கும் போட்டா போட்டியினால் இயந்திர சாதனங்கள் மேலும் மேலும் செம்மை செய்யப்படுதல் கட்டாயமாதலும் இதைத் தொடர்ந்து மேலும் மேலும் அதிகமான தொழிலாளர்கள் வேலையில்லாதாராய் ஆக்கப்படுதலும் - தொழில் துறை ரிசர்வ் பட்டாளம் உருவாதலும் மறுபுறத்தில் பொருளுற்பத்தி வரம்பின்றிப் பெருகிச் செல்லுதல் - இதுவும் போட்டா போட்டியின் கீழ் ஒவ்வொரு ஆலை அதிபருக்கும் கட்டாயமாகி விடுகிறது. இப்படி இரு வழிகளிலும் உற்பத்தி சக்திகள் என்றுமில்லாதபடி வளர்ச்சியடைந்து ஓங்குதல், தரவை சந்தைத் தேவைக்கு விஞ்சியதாகி உபரியாதல், மிகை உற்பத்தி, பண்டங்கள் குவிந்து சந்தைகளில் தேவைக்கு மேல் தேங்கி வழிதல், பத்தாண்டுக்கு ஒரு தரம் நெருக்கடி, நச்சுச் சூழல் - இங்கே உற்பத்திச் சாதனங்களும் உற்பத்திப் பொருள்களும் அமிதமாகி விட்டன; அங்கே தொழிலாளர்கள் அமிதமாக வேலை இன்றி பிழைப்புச் சாதனங்கள் இன்றித் திண்டாடுகின்றனர்.

பொருளுற்பத்திக்கும் மற்றும் சமுதாயத்தின் நல்வாழ்வுக்குமான இந்த இரு நெம்புகோல்களும் ஒன்று சேர்ந்து செயல்பட முடியவில்லை, காரணம் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை முதலில் உற்பத்திப் பொருள்கள் மூலதனமாக மாற்றப்படா விட்டால் உற்பத்தி சக்திகள் செயல்படுவதையும், உற்பத்திப் பொருள்களைப் புழங்க விடாமலும் தடுக்கிறது ஆனால் அவற்றின் அதீத அபரிமிதமே அவற்றை மூலதனமாய் மாறமுடியாதபடி தடுக்கின்றது. இந்த முரண்பாடு ஓர் அபத்தமாய் வளர்ந்து விட்டது: பொருளுற்பத்தி முறை -- பரிவர்த்தனை முறையை எதிர்த்துக் கலகம் புரிகின்றது. முதலாளித்துவ வீர்க்கம் தனது சொந்தப் பொருளுற்பத்தி சக்திகளை நிர் வகிக்கத் திறனற்றதாகி விட்டது என்பது நிரூபிக்கப்பட்ட தீர்ப்பாகி விட்டது.

ஈ) உற்பத்தி சக்திகளுடைய சமூக இயல்பைப் பகுதி அளவுக்கு அங்கீகரிக்கும் படியான பலவந்தம் முதலாளிகளுக்கே ஏற்படுகிறது. பொருளுற்பத்திக்கும் போக்குவரத்துக்குமான மாபெரும் நிலையங்கள் முதலில் கூட்டுப் பங்குக் கம்பெனிகள் பிறகு டிரஸ்டுகள், பிறகு அரசு ஆகியவற்றின் சொத்தாய் மாற்றப்படுதல். முதலாளித்துவ வர்க்கம் தேவையற்ற வர்க்கம் என்பது கண்கூடாக்கப்படுகிறது. அதனுடைய சமூக வேலைகள் யாவும் இப்பொழுது சம்பளச் சிப்பந்திகளால் செய்யப்படுகின்றன.

3. பாட்டாளி வர்க்கப் புரட்சி -- முரண்பாடுகளுக்குத் தீர்வு ஏற்படுகின்றது. பாட்டாளி வர்க்கம் பொது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. முதலாளி வர்க்கத்தின் கைகளில் இருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்தி சாதனங்களை இவ்விதம் அது பொதுச் சொத்தாய் மாற்றுகின்றது. இந்தச் செயலின் மூலம் பாட்டாளி வர்க்கம் உற்பத்திச் சாதனங்களை அவை இது காறும் தாங்கி இருந்த மூலதன இயல்பிலிருந்து விடுவித்து, அவற்றின் சமூக இயல்பு செயல்படுவதற்கு முழுச் சுதந்திரம் அளிக்கின்றது. சமூகமயமான பொருளுற்பத்தி இனி முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் நடைபெறுவது சாத்தியமாகிறது. பொருளுற்பத்தியின் வளர்ச்சியானது சமுதாயத்தில் வெவ்வேறு வர்க்கங்கள் இருத்தலை இனிமேல் காலத்திற்கொவ்வாத தாக்குகிறது. சமூகப் பொருளுற்பத்தியில் அராஜகம் எவ்வளவுக்கு எவ்வளவு மறைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அரசின் அரசியல் அதிகாரம் மடிந்து போகிறது. முடிவில் தனக்கு உரித்தான சமூக ஒழுங் கமைப்பை ஆட்சி புரியும் எஜமானனாகிவிடும் மனிதன், அதே போதில் இயற்கையின் அதிபதியும் ஆகி, தானே தனக்கு எஜமானன் ஆகிறான்- சுதந்திரமடைகிறான்.)

உலகளாவிய இந்த விடுதலைப் பணியினைச் செய்து முடிப்பது நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையாகும். இந்தச் செயலுக்கான வரலாற்று நிலைமைகளையும் அதோடு கூடவே இதன் தன்மையையும் தீர்க்கமாய்ப் புரிந்து கொண்டு, தற்போது ஒடுக்கப்பட்டதாய் இருக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த நிலைமைகளையும் அது செய்து முடிக்க வேண்டிய சகாப்தகரச் சிறப்புடைத்த இந்தப் பணியின் முக்கியத்துவத்தையும் முழு அளவில் தெரியப் படுத்துவது தான் பாட்டாளி வர்க்கத்தின் கோட்பாட்டு வெளியீடாகிய விஞ்ஞான சோஷலிசத்தின் கடமை.”
(டூரிங்குக் மறுப்பு)


முதலாளித்துவத்தின் தோற்றமும் – வளர்ச்சியும் இறுதியில் அதன் அழிவும் பற்றி மார்க்ஸ்:-


“முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை தொடக்கத்திலிருந்தே அதற்கென்று உரித்தான இரு சிறப்பியல்புகளால் வேறுபடுத்திக் காட்டப்படுகிறது.

முதலாவது: அது உற்பத்திப் பொருள்களை சரக்குகளாக உற்பத்தி செய்கிறது. அது சரக்குகளை உற்பத்தி செய்கிறது என்ற உண்மை அதனை ஏனையப் பொருளுற்பத்தி முறைகளிலிருந்து வேறுபடுத்துவதில்லை; பார்க்கப் போனால், சரக்காய் இருத்தல் என்பதுதான் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையின் உற்பத்திப் பொருட்களுக்குரிய மேலோங்கிய சிறப்பியல்பும் நிர்ணயிக்கும் தனித்தன்மையும் ஆகும் என்ற உண்மைதான் அதனை அவ்வாறு வேறுபடுத்துகிறது. அனைத்துக்கும் முதலாவதாக இதன் பொருள் என்னவென்றால், தொழிலாளியே வெறும் சரக்கு விற்பவராகவும் இவ்விதம் சுதந்திரக் கூலித்தொழிலாளியாகவும் முன்னுக்கு வருகிறார். இதனால் உழைப்பு என்பதே பொதுவாகக் கூலி உழைப்பாய்த் தோற்றமளிக்கிறது.

ஏற்கெனவே கூறப்பட்டிருப்பதை கருத்தில் கொள்வோமானால், மூலதனத்துக்கும் கூலி உழைப்புக்கும் இடையிலான உறவுதான் பொருளுற்பத்தி முறையின் தன்மையனைத்தையும் நிர்ணயிக்கிறது என்பதை புதிதாக மெய்ப்பித்துக் காட்டுவது தேவையற்றது. இந்தப் பொருள் உற்பத்தி முறையின் முதன்மைச் செயலிகளான முதலாளியும் கூலித் தொழிலாளியும் அந்த வகையில் மூலதனம், கூலி உழைப்பு ஆகியவற்றின் உருக்கள் தான், ஆளுருவங்கள்தான்; சமுதாயப் பொருளுற்பத்தி நிகழ் முறையில் தனியாட்கள் மீது முத்திரையிடப்படும் திட்டவட்டமான சமூகச் சிறப்பியல்புகள்தான்; திட்டவட்டமான இந்தச் சமூக உற்பத்தி உறவுகளின் விளை பயன்கள்தான்.
… … …

மேலும், உற்பத்தியின் சமூகக்குணாம்சங்கள் பொருளுருவம் பெறுவதும் உற்பத்தியின் பொருளாயத அடித்தளங்கள் ஆளுருவம் பெறுவதும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை அனைத்திற்கும் உரிய சிறப்பியல்பாகிய இது -சரக்கிலேயே உட்கிடக்கையாகும்: சரக்கானது மூலதனத்தின் உற்பத்திப் பொருளாகும்போது இன்னுங்கூட அதிகமாகவே உட்கிடக்கையாகும்.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையை வேறுபடுத்திக் காட்டும் இரண்டாவது குணாம்சம் உபரி மதிப்பின் உற்பத்தியே பொருளுற்பத்தியின் நேரடிக்குறியும் நிர்ணயிக்கும் நோக்கமுமாய் இருப்பதாகும். அடிப்படையாகப் பார்த்தால் மூலதனம் மூலதனத்தை உற்பத்தி செய்கிறது; உபரி - மதிப்பை உற்பத்தி செய்யும் அளவுக்கே அது இவ்விதம் மூலதனத்தை உற்பத்தி செய்கிறது. ஒப்பீட்டு உபரி - மதிப்பை பரிசீலித்தபோதும், உபரி - மதிப்பு இலாபமாக மாற்றமடைவதைப் பரிசீலித்தபோதும், முதலாளித்துவக் காலத்திற்கே உரித்தான ஒரு பொருளுற்பத்தி முறை எப்படி இதன் அடிப்படையில் உருவாகிறது என்று பார்த்தோம் - உழைப்பின் சமுதாய உற்பத்தித் திறன்களது வளர்ச்சியின் தனிவடிவமாய் இருந்த போதிலும் இது மூலதனத்தின் சுயேச்சையான உற்பத்தித் திறன்களாகத் தொழிலாளியை எதிர் நோக்குகிறது, ஆகவே தொழிலாளியின் வளர்ச்சிக்கு நேரெதிராய் நிற்கிறது.

மதிப்புக்கும் உபரி - மதிப்புக்குமான உற்பத்தி என்பது ஒரு சரக்கை, அதாவது அதன் மதிப்பை உற்பத்தி செய்வதற்கு அவசியமான உழைப்பு நேரத்தை உள்ளபடியே நடப்பிலிருக்கும் சமுதாயச் சராசரிக்குக் கீழானதாய்க் குறைக்கும் போக்கு ஓயாமல் செயல்பட்டு வருவதைக் குறிக்கிறது என்று நமது பகுப்பாய்வின் போக்கில் தெளிவாக்கினோம். அடக்க விலையை அதன் குறைந்தபட்ச அளவாகக் குறைப்பதற்கான நெருக்குதல்தான் உழைப்பின் சமுதாய உற்பத்தித் திறனை உயர்த்துவற்கு மிகவலிய நெம்புகோல் ஆகிறது; ஆனால் உழைப்பின் உற்பத்தித்திறன் இவ்விதம் உயர்ந்தாலும் மூலதனத்தின் உற்பத்தித்திறன் ஓயாமல் உயருவதாகத்தான் இங்கு தோற்றமளிக்கிறது.

நேரடிப் பொருளுற்பத்தி நிகழ்முறையில் மூலதனத்தின் ஆளுருவம் என்ற முறையில் முதலாளி மேற்கொள்ளும் அதிகாரமானது, பொருளுற்பத்தியின் மேலாளர், ஆளுநர் என்ற பொறுப்பில் அவராற்றிடும் சமுதாயச் செயல்பாடானது அடிமைகள், பண்ணை யடிமைகள் முதலானவர்களைக் கொண்டு நடைபெறும் பொருளுற்பத்தியின் அடிப்படையில் செலுத்தப்படும் அதிகாரத்திலிருந்து சாராம்சத்தில் வேறுபட்டதாகும்.
… … …
உழைப்பு கூலியுழைப்பின் வடிவிலும் உற்பத்திச் சாதனங்கள் மூலதனத்தின் வடிவிலும் இருப்பதால் தான் - அதாவது இந்த இன்றியமையாத உற்பத்திக் காரணிகளின் இந்தப் பிரத்தியேகமான சமூக வடிவத்தின் காரணத்தால்தான் - மதிப்பில் (உற்பத்திப் பண்டத்தில்) ஒரு பகுதி உபரி - மதிப்பாகத் தோற்றமளிக்கிறது; இந்த உபரி - மதிப்பு இலாபமாக (வாடகையாக), முதலாளியின் ஆதாயமாக, பயன்படுத்திக் கொள்ளத் தயார்நிலையில் அவருக்குச் சொந்தமாய் இருக்கும் கூடுதல் செல்வமாகத் தோற்றமளிக்கிறது. ஆனால் இந்த உபரி-மதிப்பு இப்படி அவரது இலாபமாகத் தோற்றமளிப்பதால்தான், மறுவுற்பத்தியின் விரிவாக்கத்தை நோக்கமாய்க் கொண்டதும் இந்த இலாபத்தில் ஒரு பகுதியாக அமைவதுமான கூடுதல் உற்பத்திச் சாதனங்கள் புதிய கூடுதல் மூலதனமாகத் தோற்றமளிக்கின்றன; பொதுவாக மறுவுற்பத்தி நிகழ்முறை விரிவாவது முதலாளித்துவத் திரட்டல் நிகழ்முறையாகத் தோற்றமளிக்கிறது.

உழைப்பு கூலி உழைப்பாக வடிவெடுப்பது இந்நிகழ்முறை அனைத்தின் வடிவத்துக்கும் பிரத்தியேகமான பொருளுற்பத்தி முறைக்கும் தீர்மானகரமானது என்றாலும், மதிப்பை நிர்ணயிப்பது கூலி உழைப்பு அல்ல. மதிப்பு நிர்ணயிப்பில் பொதுவான சமுதாய உழைப்பு நேரம் எவ்வளவு என்பதே, சமுதாயம் பொதுவாகத் தன்வசம் வைத்துள்ள உழைப்பு எவ்வளவு என்பதே பிரச்சினையாகும். இந்த உழைப்பளவு பல்வேறு உற்பத்திப் பொருள்களாலும் ஒப்பளவில் கிரகிக்கப்படுவதாக அதனதன் சமுதாய - முக்கியத்துவத்தை நிர்ணயிக்கிறது எனலாம். சமுதாய உழைப்பு நேரம் சரக்குகளின் மதிப்பை நிர்ணயிப்பதில் தீர்மானகரப் பங்கு வகிப்பதன் குறிப்பிட்ட வடிவம் உழைப்பு கூலி உழைப்பாக வடிவெடுப்பதுடனும், இதற்கிணையாக உற்பத்திச் - சாதனங்கள் மூலமாக வடிவெடுப்பதுடனும் தொடர்புடையதாகும் என்பதில் ஐயமில்லை; ஏனென்றால் இந்த அடிப்படையில்தான் சரக்கு - உற்பத்தி பொருளுற்பத்தியின் பொது வடிவமாகிறது.

மேலும், விநியோக உறவுகள்; எனப்படுகிறவற்றையே பரிசீலித்தல் பார்ப்போம். கூலியுழைப்பை முன் தேவையாகக் கொண்டுள்ளது, இலாபம் மூலதனத்தை முன்தேவையாக்கிக் கொண்டுள்ளது. ஆகவே இந்தக் குறிப்பிட்ட விநியோக வடிவங்கள் உற்பத்திச் சாதனங்களின் குறிப்பிட்ட சமூகச் சிறப்பியல்புகளையும் உற்பத்திச் செயலிகளின் குறிப்பிட்ட சமூக உறவுகளையும் முன் தேவைகளாகக் கொண்டுள்ளன. பிரத்தியேகமான விநியோக உறவுகள் இவ்விதம் பிரத்தியேகமான வரலாற்று வழிப்பட்ட உற்பத்தி உறவுகளின் தெரிவிப்பாகுமே தவிர வேறல்ல.

இலாபத்தை எடுத்துக் கொள்வோம்; உபரி - மதிப்பின் இந்தப் பிரத்தியேக வடிவமானது உற்பத்திச் சாதனங்களின் புதிய படைப்பு முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் வடிவத்தில் நடை பெறுவதற்கான முன்னிபந்தனை ஆகும்; அதாவது இது மறுவுற்பத்தியை ஆளும் - உறவாகும்; மெய்யாகவே தமது இலாபமனைத்தையும் வருவாயாக நுகரமுடியும் என்பது போல் தனியொரு முதலாளிக்குத் தோன்றிய போதிலும் நிலைமை இதுவே. எப்படியானபோதிலும் தனியொரு முதலாளி காப்புறுதி மற்றும் சேமநிதிகள், போட்டியின் விதிகள் போன்றவற்றின் வடிவிலேயே கூட தடை மதில்களைச் சந்திக்கிறார்; இந்தத் தடை மதில்கள் அவருக்குத் தடை போடுகின்றன, இலாபமென்பது சொந்த முறையில் நுகரக்கூடிய உற்பத்திப் பண்டத்தின் வினியோகக் கருத்தினம் மட்டுமல்ல என்பதை அவருக்கு நடைமுறையில் நிரூபித்துக் காட்டுகின்றன.

மேலும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ்முறை அனைத்தும் உற்பத்திப் பொருட்களின் விலைகளால் ஆளப்படுகிறது. ஆனால் ஆளும் உற்பத்தி விலைகள் இலாபவீதத்தின் சமனமாக்கத்தாலும், இதற்கிணையாக பல்வேறு சமுதாயப் பொருளுற்பத்திக் கிளைகளிடையே மூலதனம் வினியோகமானதாலும் ஆளப்படுகின்றன. ஆக, இலாபமென்பது இங்கே உற்பத்திப் பொருட்களின் வினியோகத்தில் அல்லாமல் அவற்றின் உற்பத்தியிலேயே முக்கியக் காரணியாகத் தோற்ற மளிக்கிறது; மூலதனங்களும் உழைப்பும் பல்வேறு உற்பத்திக் கிளைகளிடையிலும் வினியோகமாவதில் ஒரு காரணியாகத் தோற்றமளிக்கிறது. இலாபம் முனைவு இலாபமாகவும் வட்டியாகவும் பிரிவது அதே வருவாயின் வினியோகமாகத் தோற்றமளிக்கிறது. ஆனால் தற்பெருக்கமடையும் மதிப்பாக, உபரி - மதிப்பின் படைப்பாளியாக மூலதனம் வளர்ச்சியடைவதிலிருந்தே, அதாவது நடப்பிலுள்ள பொருளுற்பத்தி நிகழ்முறையின் இந்தப் பிரத்தியேக சமூக வடிவத்திலிருந்தே தொடக்கத்தில் இப்பிரிவினை எழுகிறது. அது கடன் - செலாவணியையும் கடன் - செலாவணி - நிறுவனங்களையும் தனக்குள்ளிருந்தே வகுத்தமைக்கிறது. இவ்விதம் உற்பத்தி வடிவத்தையும் வகுத்தமைக்கிறது. வட்டி போன்றவற்றில், வெளிப்படையாகத் தெரியும் வினியோக வடிவங்கள் நிர்ணயிக்கும் உற்பத்திக் காரணிகளாக விலையில் சேருகின்றன.

… … …
ஆக, விநியோக உறவுகள் எனப்படுகிறவை பொருளுற்பத்தி நிகழ்முறையின் வரலாற்று வழியில் நிர்ணயமான சமூக வடிவங்களுக்கும், மனித வாழ்க்கையின் மறுவுற்பத்தி நிகழ்முறையில் மனிதர்கள் தமக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகளுக்கும் ஏற்ப அமைகின்றன, அவற்றிலிருந்து எழுகின்றன. இந்த விநியோக உறவுகளின் வரலாற்று வழிப்பட்ட தன்மை உற்பத்தி உறவுகளின் வரலாற்று வழிப்பட்ட தன்மையாகும்; உற்பத்தி உறவுகளின் பண்புக் கூறுகளில் ஒன்றுதான் விநியோக உறவுகளில் குறிக்கப்படுகிறது. முதலாளித்துவ விநியோகம் ஏனைய பொருளுற்பத்தி முறைகளில் லிருந்து எழும் விநியோக வடிவங்களிலிருந்து வேறுபடுகிறது; ஒவ்வொரு விநியோக வடிவமும் எந்த உற்பத்தி வடிவத்திலிருந்து அது எழுகிறதோ, எந்த உற்பத்தி வடிவத்துக்கு ஏற்ப அது அமைகிறதோ அந்த பிரத்தியேக உற்பத்தி வடிவத்துடன் சேர்ந்து மறைந்து விடுகிறது.

விநியோக உறவுகள் மட்டுமே வரலாற்று வழிப்பட்டவை, உற்பத்தி உறவுகள் அப்படி அல்ல என்ற கருத்தானது ஒருபுறம் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மீதான தொடக்க நிலைப்பட்ட - ஆனால் இன்னமும் அரைகுறையான - விமர்சனத்தின் பார்வையே ஆகும். மறுபுறம் இந்தக் கருத்து சமுதாய பொருளுற்பத்தி நிகழ்முறையையும் சாமான்ய உழைப்பு நிகழ்முறையையும் ஒன்றோடொன்று குழம்பிக் கொள்வதையும் இரண்டையும் ஒன்றாகக் கருதுவதையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது - சமான்ய உழைப்பு நிகழ்முறை என்பது இயல்பு மீறி - தனிமைப்பட்டுள்ள ஒரு மனிதப் பிறவியாலும் கூட சமுதாயத்தின் உதவியே இல்லாமல் செய்து முடிக்கக் கூடியதாகும். உழைப்பு நிகழ்முறையானது முழுக்க முழுக்க மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான நிகழ்முறையாக மட்டும் இருக்கும் அளவுக்கு அதன் சாமான்ய அடிக்கூறுகள் சமுதாய வளர்ச்சி வடிவங்கள் அனைத்திற்கும் பொதுவானவையாக இருந்து வருகின்றன.

ஆனால் இந் நிகழ்முறையின் பிரத்தியேக வரலாற்று வடிவம் ஒவ்வொன்றும் அதன் பொருளாயத அடித்தளங்களையும் சமூக வடிவங்களையும் மேலும் வளர்த்தெடுக்கிறது. குறிப்பிட்ட முதிர்ச்சிக்கட்டத்தை அடைந்துவிட்ட போதெல்லாம் பிரத்தியேகமான வரலாற்று வடிவம் களையப்பட்டு இன்னும் உயர்ந்த வரலாற்று வடிவத்துக்கு வழிவிடுகிறது. இப்படியொரு நெருக்கடி வந்து சேரும் தருணத்தை வெளிப்படுத்தும் அடையாளம் என்னவென்றால் ஒருபுறம் விநியோக உறவுகளுக்கும் இவ்விதம் அவற்றுக்குரிய உற்பத்தி உறவுகளின் பிரத்தியேக வரலாற்று வடிவத்துக்கும், மறுபுறம் உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தித் திறன்களுக்கும் அவற்றின் செயலிகளது வளர்ச்சிக்கும் இடையிலான முரண்பாடுகளும் பகைமைகளும் ஆழ அகலமும் பெறுவதாகும். அடுத்து மூள்வது பொருளுற்பத்தியின் பொருளாயத வளர்ச்சிக்கும் அதன் சமூக வடிவத்துக்கும் இடையிலொரு பூசல்"
(மூலதனம்- தொகுதி 3 – பக்கம் 1255-1262)

முதலாளித்துவத்தின் மேலோடு அதாவது பழைமைப்பட்டுப் போன முதலாளித்துவ உற்பத்தி உறவுகள்- உடைத்தெறியப்பட்டு முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கப்படுவதைப் பற்றி மார்க்ஸ்:-


“சுயேச்சையான தனித்த உழைப்பாளி அவரது உழைப்புச் சாதனங்களுடன் ஒன்றிக் கலப்பதன் அடிப்படையிலானதென்று சொல்லத்தக்க. சுயசம்பாத்தியத் தனியுடைமை போய், முதலாளித்துவத் தனியுடைமை வருகிறது; இது பிறர் உழைப்பின் - பெயரளவில் சுதந்தரமான உழைப்பின் - சுரண்டலை, அதாவது கூலியுழைப்பை ஆதாரமாய்க் கொண்டுள்ளது.

இந்த மாற்ற நிகழ்முறை பழைய சமூகத்தை அடி முதல் நுனி வரை போதுமான அளவு சிதைத்ததும், உழைப்பாளிகள் பாட்டாளி களாகவும் அவர்களது உழைப்புச் சாதனங்கள் மூலதனமாகவும் மாறியதும், முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை சொந்தக் காலில் நிற்கத் தொடங்கியதும். உழைப்பை மேலும் சமூகமயமாக்குதல் நிலத்தையும் ஏனைய உற்பத்திச் சாதனங்களையும் சமுதாய அளவில் பயன்படக்கூடிய, எனவே பொதுவிலான உற்பத்திச் சாதனங்களாக மேலும் மாற்றுதல், அதே போல் தனிச் சொத் துடைமையாளர்களின் உடைமையை மேலும் பறித்தல் ஆகியவை புது வடிவெடுக்கின்றன. இப்போது உடைமைப் பறிப்புக்கு ஆளாக வேண்டியது சொந்தத்துக்குப் பாடுபடும் உழைப்பாளியல்ல; பல உழைப்பாளிகளைச் சுரண்டும் முதலாளியே.

இந்த உடைமைப் பறிப்பை முதலாளித்துவப் பொருளுற்பத்தியினது உள்ளார்ந்த விதிகளின் செயற்பாடே, மூலதனத்தின் மையப்பாடே நிறைவேற்றுகிறது. எப்போதுமே ஒரு முதலாளி பல முதலாளிகளை விழுங்கி விடுகிறார். இந்த மையப்பாட்டுடன் கூடவே, அதாவது சில முதலாளிகள் பல முதலாளிகளை இவ்வாறு உடைமைப் பறிப்புக்கு ஆளாக்குவதுடன் கூடவே, உழைப்பு நிகழ்முறையின் கூட்டு வேலை வடிவமும், விஞ்ஞானத்தின் உணர்வுபூர்வமான தொழில் நுட்பப் பிரயோகமும், நிலத்தின் முறைவழிச் சாகுபடியும், உழைப்புக் கருவிகளைப் பொதுவில் மட்டுமே பயன்படுத்தக் கூடியவையாக மாற்றுவதும், எல்லா உற்பத்திச் சாதனங்களையும் ஒன்றிணைந்த. சமூகமயமான உழைப்பின் உற்பத்திச் சாதனங்களாக உபயோகிப் பதன் மூலம் அவற்றை சிக்கனப்படுத்துவதும், உலகச் சந்தை என்னும் வலையில் எல்லா மக்கள் சமூகங்களையும் சிக்க வைப் பதும். இத்துடன் முதலாளித்துவ ஆளுகையின் சர்வதேசத் தன்மையும் மேன்மேலும் அதிக அளவில் வளர்கின்றன. இந்த மாற்ற நிகழ்முறையின் அனுகூலங்களை எல்லாம் அபகரித்து ஏகபோகமாக்கிக் கொள்ளும் முதலாளித்துவத் திமிங்கலங்களின் தொகை தொடர்ந்து குறைந்து செல்வதோடு கூடவே, துன்ப துயரமும் ஒடுக்குமுறையும் அடிமைத்தனமும் சீரழிவும் சுரண்டலும் பெருகிச் செல்கின்றன. ஆனால், தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பும் வளர்ந்து செல்கிறது; இவ்வர்க்கம் தொகையில் தொடர்ந்து பெருகுகிறது. முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ்முறையின் இயங்கமைப்பே இவ்வர்க்கத்தைக் கட்டுப்பாடு மிக்கதாக்கி, ஒன்று படுத்தி, அமைப்பு வழியில் திரளச் செய்கிறது. மூலதனத்தின் ஏகபோகம், அதனோடு சேர்ந்தும் அதன் ஆளுகையிலும் பிறந்து வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்குப் பூட்டிய விலங்காகி விடுகிறது. முடிவில், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகி விடும் நிலை வருகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையிலிருந்து விளைவ தான முதலாளித்துவத் தனதாக்க முறை முதலாளித்துவத் தனியுடை மையைத் தோற்றுவிக்கிறது. உடைமையாளரின் உழைப்பை அடிப் படையாகக் கொண்ட தனியாள் - தனியுடைமையின் முதல் மறுப்பு இது. ஆனால், முதலாளித்துவப் பொருளுற்பத்தி இயற்கை விதிக் குரிய உறுதிப்பாட்டுடன் அதன் மறுப்பையே ஈன்றெடுக்கிறது. இது மறுப்பின் மறுப்பு. இது உற்பத்தியாளருக்குத் தனியுடைமையை மீண்டும் ஏற்படுத்தித் தருவதன்று; முதலாளித்துவ சகாப்தத்தால் வரப்பெற்றதாகிய கூட்டு வேலையின் அடிப்படையிலும், நிலமும் உற்பத்திச் சாதனங்களும் எல்லாருக்கும் பொதுவாய் இருப்பதன் அடிப்படையிலுமான தனியாள் உடைமையை அவருக்கு அளிப்பது ஆகும்.

தனியாள் உழைப்பிலிருந்து பிறக்கும் சிதறலான தனியுடைமையை முதலாளித்துவத் தனியுடைமையாக மாற்றுவது, ஏற்கெனவே நடைமுறையில் சமூகமயமாகி விட்ட பொருளுற்பத்தியை ஆதாரமாய்க் கொண்ட முதலாளித்துவத் தனியுடைமையை சமுதாயப் பொதுவுடைமையாக மாற்றுவதை விடவும் ஒப்பிட முடியாத அளவுக்கு நீண்ட நெடிய நிகழ்முறையாகும்; வன்முறை மலிந்த. கடினமான நிகழ்முறையாகும்; இது இயற்கைதான்.

முதலாவது மாற்றம் உடைமைப் பறிப்பாளர் ஒரு சிலர் மக்கட் பெருந்திரளின் உடைமையைப் பறிப்பதாகும். இரண்டாவது மாற்றம் மக்கட் பெருந்திரள் உடைமையாளர் ஒரு சிலரின் உடைமையைப் பறிப் பதாகும்.”
(மூலதனம்- தொகுதி 1 – பக்கம் – 1025-1027)

இன்றைய முதலாளித்துவ வளர்ச்சியை ஆய்வு செய்வதற்கு மார்க்ஸ் “மூலதனம்” நூலில் ஆய்வு செய்த “ஆய்வு முறையே” மார்க்சியர்களுக்கு இன்றும் வழிகாட்டியாகும். மார்க்ஸ் காட்டியபடியே இன்றைய வளர்ச்சியடைந்த முதலாளித்துவ உற்பத்தி முறையும் நெருக்கடிக்கு உள்ளாகிறது, இதற்கு தீர்வு மார்க்ஸ் “மூலதனம்” நூலில் கூறியதேயாகும்.:-


மார்க்ஸ் ஆய்வு செய்த முதலாளித்துவம் அன்றைக்கு உள்ள முதலாளித்துவம் தான். “மூலதனம்” நூல் மூன்றாம் தொகுதியை, எங்கெல்ஸ் வெளியிடும் போது மூலதனம் நூலில் சொல்லப்பட்ட முதலாளித்துவத்தைவிட அன்றைய முதலாளித்துவம் வளர்ந்து காணப்பட்டது. அந்நூலின்  பின்னுரையில் பங்கு சந்தையைப் பற்றி எங்கெல்ஸ் மூலதனம் நூலில் குறிப்பிட்டதற்கு மேலாக அன்றைய பங்கு சந்தையின் நிலைமை வளர்ந்துவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் முதலாளித்துவ வளர்ச்சியின் உள்முரண்பாடும், மறுவுற்பத்தியின் மூலம் அந்த முரண்பாடுகளும் வளர்ச்சி அடைவதைப் பற்றி மார்க்ஸ் கூறியுள்ளது  தனிவுடைமையை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவத்தின் அடிப்படையாகும். இந்த அடிப்படையின் மூலம் வளர்ச்சி அடைந்து கொண்ட செல்லும் முதலாளித்துத்தின் அழிவையும் அந்த அழிவில் இருந்து மீட்டு எடுப்பதற்கு சோஷலிச உற்பத்தி முறைக்கான சமூக மாற்றமே தீர்வு என்றும் மார்க்ஸ் தெள்ளத்தெளிவாக கூறியிருக்கிறார். இன்றைய பொருளாதார வளர்ச்சியும் அதன் நெருக்கடிகளும் மார்க்சின் ஆய்வு சரி என்பதையே தொடர்ந்து நிறுபித்துவருகிறது.

ஏகாதிபத்திய கட்டத்தினை ஆய்வு செய்ய லெனினுக்கு மார்க்சின் “மூலதனம்” நூலே வழிகாட்டியாக இருந்தது, இன்றைய உலகமயமாதல் கட்டத்திலும் அதுவே வழிகாட்டியாகும்.

மார்க்ஸ் வைத்த அவ்வப் போதைய “முழங்களை” மட்டும் மனப்பாடம் செய்துவிட்டு அது தான் மார்க்சியம் என்று கருதுபவர்கள், இன்றைய வளர்ச்சிக் கட்டத்திற்கு மார்க்சியம் பொருந்தவில்லை என்று ஊளையிடுகின்றனர். மார்க்சியம் வறட்டுச் சூத்திரவாதமல்ல, ஏகாதிபத்திய கட்டத்தில் லெனினியமாக வளர்ந்தது போல் அது வளர்ந்து கொண்டே இருக்கும். அதன் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும்வரை வளரும்.

மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை மூலதனம் நூலில் படித்து அறிவதற்கு சிரமப்படுபவர்கள் “டூரிங்குக்கு மறுப்பு” என்று எங்கெல்ஸ் எழுதிய நூலில் மார்க்சின் கருத்து தொகுக்கப்பட்டதைப் படித்தறியலாம். “டூரிங்குக்கு மறுப்பு” நூலில் “மூலதனம்” முதல் தொகுதியை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றவைகளைப் பற்றி குறிப்புகள் மட்டுமே காணப்படும். இருந்தாலும் முதலாளித்துவ உள்முரண்பாட்டையும் அதன் அழிவையும் மார்க்சிய வழியில் எங்கெல்ஸ் அருமையாக தொகுத்தளித்துள்ளார்.
************************************************************************************************************

1) முதலாளித்துவத்தின் மேலோடு அதாவது பழைமைப்பட்டுப் போன முதலாளித்துவ உற்பத்தி உறவுகள்- உடைத்தெளியப்பட்டு முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கப்படுவதைப் பற்றி மார்க்ஸ்:-
https://marxistpoliticaleconomy.blogspot.com/2019/10/blog-post_85.html

3) முதலாளித்துவஉற்பத்தி முறையினுடைய உள்முரண்பாட்டு பற்றியும் அதை நவீனப் பாட்டாளி வர்க்கம் அதனைவீழ்த்துவதின் வரலாற்றுக் பணியை வெளிப்படுத்துவதே விஞ்ஞான சோஷலிசத்தின் கடமை என்பதுபற்றியும் எங்கெல்ஸ்:-https://marxistpoliticaleconomy.blogspot.com/2019/10/blog-post_45.html

Tuesday 24 September 2019

முதலாளித்துவ உற்பத்தியில் ஏற்படுகிற பொருளாதார நெருக்கடிக்கு, வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகளினால் உருவான மிகை உற்பத்தியே காரணமாகும். குறைநுகர்வு என்பது இதற்கு கீழ்மட்ட நிலையில் அதாவது இரண்டாம் நிலை காரணமாகும் என்பது பற்றி லெனின்:-


"நாம் பேசிக்கொண்டிருக்கும் இவ்விரண்டு கோட்பாடுகள் நெருக்கடிகளைப் பற்றி முற்றிலும் வெவ்வேறான விளக்கங்கள் தருகின்றன. உற்பத்திக்கும் தொழிலாளி வர்க்கத்தின் நுகர்வுக்கும் இடையேயுள்ள முரண்பாட்டைக் கொண்டு முதல் கோட்பாடு நெருக்கடிகளை விளக்குகிறது, உற்பத்தியின் சமுதாயவகைப்பட்ட தன்மைக்கும் பறித்துடைமையாக்கிகொள்வதின் தனியுடைமை முறைக்கும் இடையேயுள்ள முரண்பாட்டைக் கொண்டு இரண்டாம் கோட்பாடு நெருக்கடிகளை விளக்குகிறது.

எனவே, முந்தைய கோட்பாடு நெருக்கடிக்குரிய வேர் உற்பத்திக்கு அப்பால் வெளியே இருப்பதாகக் காண்கிறது, பிந்தையத் கோட்பாடு நெருக்கடிக்குரிய வேர் உற்பத்தி நிலைமைகளிலேதான் இருப்பதாகக் காண்கிறது. மேலும் சுருங்கச் சொல்வதானால், முந்தைய கோட்பாடு குறைநுகர்வை கொண்டு நெருக்கடிகளை விளக்குகிறது, பிந்தைய கோட்பாடு உற்பத்தி உற்பத்தியின் அராஜகத்தன்மையைக் கொண்டு நெருக்கடிகளை விளக்குகிறது.

ஆக, இரு கோட்பாடுகளுமே பொருளாதார அமைப்புமுறைக்குள்ளேயேயுள்ள முரண்பாட்டைக் கொண்டு நெருககடிகளை விளக்குகிறபோதிலும், அந்த முரண்பாட்டின் தன்மை விஷயத்திலே அவ்விரண்டுமே முற்றிலும் வேறுபடுகின்றன. ஆனால் கேள்வி இதுதான், உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே முரண்பாடு என்கிற உண்மையை இரண்டாம் கோட்பாடு மறுக்கிறதா, குறைநுகர்வு என்கிற உண்மையை அது மறுக்கிறதா? கிடையவே கிடையாது. அது அந்த உண்மையை முற்றாக அங்கீகரிக்கிறது, ஆனால் அதை அதற்குரிய கீழ்மட்ட இடத்தில் வைக்கிறது, இந்த உண்மையால் நெருக்கடிகளை விளக்கமுடியாது என்று அது போதிக்கிறது, அந்த நெருக்கடிகளைத் தோற்றுவிப்பது இன்றையப் பொருளாதார அமைப்புமுறையில் அடிப்படையானதாக இருக்கும் மற்றொரு, மேலும் ஆழமான முரண்பாடு ஆகும். -அதாவது, உற்பத்தியின் சமுதாயவகைப்பட்ட தன்மைக்கும் பறித்துடைமையாக்கி கொள்வதின் தனியுடைமைத் தன்மைக்கும் இடையேயுள்ள முரண்பாடுதான்."
(“பொருளாதாரத் தன்னுணர்ச்சிவாதம் பற்றிய ஒரு பண்புரை” பக்கம் 61-62)
(A Characterization of Economic Romanticism)

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு குறைநுகர்வு காரணமல்ல – எங்கெல்ஸ்


(முதலாளித்துவ உற்பத்தி முறையின் விளைவாய் ஏற்படுகிற மிகை உற்பத்தியே பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகிறது, குறை-நுகர்வு பிரச்சினை என்பது முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முன்பே காணக்கூடியது. புதியதாகத் தோன்றிய பொருளாதார நெருக்கடிக்கு குறை-நுகர்வு காரணமாது)
*******************************************************************************************************************************
“ஹெர் டூரிங்கைப் பொருத்தவரை, சோஷலிசம், வரலாற்று வளர்ச்சியின் அவசியமான விளைவு அல்லவே அல்ல, மற்றும் முற்றிலும் வயிற்றை நிரப்பும் திசையில் நெறியாண்மை செய்யப்படும் இன்றைய படுமோசமான பொருளாயதத் தன்மை வாய்ந்த பொருளாதார நிலைமைகளின் விளைவும் அல்ல. இதை எல்லாம் அவர் மேலும் நல்ல முறையில் செய்து நிறைவேற்றியுள்ளார். அவரது சோஷலிசம் ஓர் இறுதியும் அறுதியுமான உண்மை;

அது “சமுதாயத்தின் இயற்கையான அமைப்பு'', இதன் வேர்கள் “நீதியின் சர்வப்பொதுக் கோட்பாட்டில் காணப்படுவன;

கடந்த காலத்தின் பாவகரமான வரலாறு சிருஷ்டித்த தற்போதைய நிலைமையைக் கவனிக்காமல் அவரால் தவிர்க்க முடியவில்லை என்றால், அதற்குப் பரிகாரம் காண்பதற்காக, இதை நீதியின் புனிதக் கோட்பாட்டுக்கு ஏற்பட்ட ஒரு துரதிருஷ்டம் என்றே கருதவேண்டும். ஹெர் டூரிங் மற்றவை எல்லாவற்றையும் போலவே தமது சோஷலிசத்தையும் தமது புகழார்ந்த இரு மனிதர்களை ஊடகமாக் கொண்டே உருவாக்குகிறார். சென்ற காலத்தில் இந்த இரு பொம்மைகளும் எஜமான், வேலையாள் என்ற பாத்திரங்களில் நடித்தது போலன்றி, மாறாக இந்தத் தடவையில், ஒரு மாறுதலுக்காக, உரிமைகளின் சமத்துவம் பற்றிய கதையினை நடிக்கின்றனர்-டூரிங்கின் சோஷலிசத்தின் அடித் தளங்கள் நிறுவப்பட்டுவிட்டன.

எனவே ஹெர் டூரிங்கைப் பொருத்தவரை, தொழில் துறையில் ஏற்படும் அலை வட்ட நெருக்கடிகளுக்கு நாம் கற்பித்துக் கூறுமாறு நிர்ப்பந்திக்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் எதுவுமே இல்லை என்பது கூறாமலே விளங்கும். அவரது கருத்துப்படி,

நெருக்கடிகள் “சகஜ நிலையில் இருந்து” எப்போதாவது ஏற்படும் திரிபுகள் மட்டுமே, மற்றும் அவை “மேலும் முறைப்படுத்தப்பட்ட ஓர் அமைப்பின் வளர்ச்சியை” மேம்படுத்தவே பெரும்பாலும் உதவுகின்றன என்பதாகும். மிகை உற்பத்தியால் தான் நெருக்கடிகள் ஏற்படுகின்றன என்று விளக்கும் “சாமான்ய முறை'' அவரது “விஷயங்கள் குறித்த மேலும் துல்லியமான கருத்தோட்டத்திற்கு” எவ்வகையிலும் போதுமானதல்ல. அத்தகைய விளக்கம் "குறிப்பிட்ட பகுதிகளிலான பிரத்தியேக நெருக்கடிகள் விஷயத்தில் அனுமதிக்கப்படலாம்'' என்பது வாஸ்தவம். உதாரணம்: “பெருமளவில் விற்பனை செய்யத் தகுதியுள்ள நூல்களைத் திடீரென மறுபதிப்பாக வெளியிட்டுப் புத்தக மார்க்கெட்டை விழுங்கிவிடுவது.''

அவரது அமரத்துவம் பெற்ற நூல்கள் இத்தகைய உலகப் பேரிடர் எதையும் என்றுமே கொண்டு வந்துவிடா என்ற மன ஆறுதல் உணர்வுடன் ஹெர் டூரிங் உறங்கச் செல்லலாம்.

பெரிய நெருக்கடிகளில் “தரவுக்கும் தேவைக்கும் இடையிலான பிளவை இத்தனை மோசமாக விரிவாக்குவதற்கு” மிகை உற்பத்தி காரணம் அல்ல என்றும், மாறாக “வெகுஜன நுகர்வு பின்தங்கி இருப்பதும்.., செயற்கையாக உருவாக்கப்படும் குறை-நுகர்வும்... மக்களின் தேவைகளின்" (!) “இயல்பான பெருக்கத்தில் தலையிடுவதுமே" காரணம் என்றும் வாதாடுகிறார்.

அவரது இந்த நெருக்கடிக் கோட்பாட்டுக்கு ஒரு சீடரைப் பெறும் நல்வாய்ப்பும் அவருக்குக் கிட்டியுள்ளது.

ஆனால் துரதிருஷ்டவசமாக வெகு ஜனங்களின் இந்தக் குறை- நுகர்வும், அவர்களது பராமரிப்பு மற்றும் இனப் பெருக்கத்துக்குத் தேவையான நுகர்வைக் கட்டுப்படுத்துவதும் ஒரு புதிய புலப்பாடன்று. சுரண்டும் மற்றும் சுரண்டப்படும் வர்க்கங்கள் இருந்தவரையில் இது தொடர்ந்து நிலவி வந்துள்ளது. வெகுஜனங்களின் நிலைமை விசேஷமாயும் சாதகமாக இருந்த அந்த வரலாற்றுக் காலகட்டங்களில் கூட, உதாரணமாக 15 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில், மக்கள் குறை-நுகர்வுக்கு இலக்காயிருந்தார்கள். தமது நுகர்வுக்குத் தமது ஒட்டு மொத்தமான வருடாந்த உற்பத்திப் பொருளைப் பயன்படுத்தும் உரிமை அவர்களுக்கு இருக்கவில்லை. எனவே குறை- நுகர்வு என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வரலாற்றில் ஓர் இடையறாத அம்சமாக இருந்து வந்துள்ளது.

அதே பொழுதில், உபரி உற்பத்தியின் விளைவாக ஏற்படும் நெருக்கடிகளால் மார்க்கெட் பொதுவாகச் சுருங்குவது என்பது கடந்த ஐம்பதாண்டுகளாக மட்டுமே இருக்கும் ஒரு புலப்பாடாகும்; எனவே இந்தப் புதிய மோதலை மிகை உற்பத்தி என்ற புதிய புலப்பாடு மூலம் அல்லாது ஆயிரமாண்டு பழமையான குறை-நுகர்வு என்ற புலப்பாடு மூலம் விளக்குவதற்கு ஹெர் டூரிங்கின் மேம்போக்கான கொச்சைப் பொருளியல் முழுதும் தேவைப்படுகிறது. இது, ஒரு கணிதவியலாளர் நிலையான ஒன்றும் மாற்றத்தக்க ஒன்றுமான இரு அளவுகளின் இடையிலான விகிதத்திலுள்ள வகை பிரிவினை மாறத்தக்க அளவைக் கொண்டு அல்லாமல் நிலையான அளவு மாற்றமடையாமல் இருக்கிறது என்ற உண்மையை வைத்து விளக்க முயல்வது போன்று உள்ளது.

வெகு ஜனங்களின் குறை- நுகர்வு சுரண்டலை அடிப்படையாக்கியதான எல்லா வடிவங்களிலு மான சமுதாயத்தின், இதன் பின்விளைவாக முதலாளித்துவ வடிவ சமுதாயத்தினதுமான அவசியமான நிபந்தனையாகும்; ஆனால் உற்பத்தியின் முதலாளித்துவ வடிவம்தான் முதலில் நெருக்கடிகளுக்குக் காரணமாக உள்ளது. எனவே வெகு ஜனங்களின் குறை- நுகர்வு நெருக்கடிகளுக்கான முன்தேவையான ஒரு நிபந்தனையுமாகும், மற்றும் இது நீண்ட காலமாக அங்கீகரிக்கப்பட்டு வந்த ஒரு பாத்திரத்தை அவற்றில் வகிக்கிறது. ஆனால் இது முன்னே ஏன் நெருக்கடிகள் நிலவவில்லை என்பதற்கு எவ்விதக் காரணமும் கூறாதது போலவே இன்று ஏன் நெருக்கடிகள் நிலவு கின்றன என்பதற்கும் எவ்விதக் காரணமும் கூறவில்லை.”
(டூரிங்குக்கு மறுப்பு- பொருளுற்பத்தி)

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு குறைநுகர்வு காரணமல்ல - மார்க்ஸ்


“பயன்திறனுள்ள நுகர்வு (effective consumption) அல்லது பயன் திறனுள்ள நுகர்வாளர் பற்றாக்குறையாகி விடுவதுதான் நெருக்கடிகளுக்குக் காரணம் என்கிறார்கள். கூறியதையே கூறும் சொற்புரட்டு ஆகுமே தவிர இது காரண விளக்கம் ஆகாது. பஞ்சையர் நுகர்வையும் மோசடிக்காரர் நுகர்வையும் ஒதுக்கி விட்டுப் பார்த்தால், முதலாளித்துவ அமைப்பானது பயன்திறனுள்ள நுகர்வைத் தவிர வேறு எந்த விதமான நுகர்வையும் அறியாதது. சரக்குகள் விற்பனையாகாமல் தேங்குகின்றன என்றால், விலை கொடுத்து வாங்கக் கூடியவர்கள், அதாவது பயன்திறனுள்ள நுகர்வாளர்கள் அவற்றுக்கு யாரும் கிடைக்கவில்லை என்றுதான் அர்த்தம். (ஏனெனில், இறுதியாகப் பார்க்கையில், திறனுடை நுகர்வுக்காகவோ சொந்த நுகர்வுக்காகவோதான் சரக்குகளை விலைக்கு வாங்குகிறார்கள்.)

தொழிலாளி வர்க்கம் உற்பத்தி செய்வதில் மிகச் சிறு பகுதியே அதன்கைக்குக் கிடைக்கிறது. இன்னும் கூடுதலான ஒரு பங்கு அதற்குக் கிடைக்குமானால், அதாவது அதற்குக்கிடைக்கும் கூலி உயருமானால், கேடு தீர்ந்து விடும் என்று வாதாடி. மேற்கூறிய சொற் புரட்டுக்கு நியாய விளக்கம் அளிக்க முயலுவார்களாயின், அவர்களுக்கு நாம் கூற விரும்புவது இதுதான்:

பொதுவாக எல்லாருக்கும் கூலி எப்போது உயர்ந்து செல்கிறதோ, சமுதாயத்தின் வருடாந்தரப் பொருளுற்பத்தியில் நுகர்வுக்கென அமையும் பகுதியில் தொழிலாளி வர்க்கத்துக்கு எப்போது உள்ளபடியே பெரியதொரு பங்கு கிடைக்கிறதோ, அந்தக் காலகட்டம்தான் எப்போதுமே நெருக்கடிகளுக்குத் தயாரிப்பு செய்யும் காலகட்டமாகிறது. குற்றங்குறையற்ற ''சர்வ சாதாரண" (!) அன்றாடப் பொது அறிவை ஆதாரமாய்க் கொண்டு வாதாடுவதாகக் கூறுகிற இவர்களது கண்ணோட்டத்தின் படி, இம்மாதிரியான ஒரு காலகட்டம் நெருக்கடி வராமல் அல்லவா தடுத்து நிறுத்த வேண்டும்?

ஆக முதலாளித்துவப் பொருளுற்பத்திக்கு அவசியமான நிலைமைகள் எப்படிப்பட்டவை என்பது தெளிவாகிறது. யாருடைய நல்ல எண்ணத்தையோ, கெட்ட எண்ணத்தையோ சார்ந்திராத இந்நிலைமைகள் தொழிலாளி வர்க்கம் கணப் பொழுதுக்கு மட்டும் ஒப்பளவில் வளமான வாழ்வு (relative pros perity) வாழ்வதற்கு அனுமதி அளிக்கின்றன, அதுவுங்கூட வரப்போகும் நெருக்கடியின் முன்னறிவிப்பாக அமையும் பொருட்டு அனுமதி அளிக்கின்றன என்பது தெளிவாகிறது.”
(மூலதனம்- தொகுதி இரண்டு- பக்கம்-543)

Sunday 1 September 2019

5) முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சியும், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் சம அளவில் தவிர்க்கவியலாதவை – மார்க்ஸ்-எங்கெல்ஸ்


(பொருளாதார நெருக்கடிப் பற்றி “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யில்)

மேலாதிக்கம் பெற்ற முந்தைய வர்க்கங்கள் யாவும், [உற்பத்திப் பொருள்களைக்] கையகப்படுத்தலில் தம்முடைய நிபந்தனைகளுக்கு ஒட்டுமொத்தச் சமுதாயத்தையும் உட்படுத்துவதன் மூலம், அவை ஏற்கெனவே பெற்றிருந்த அந்தஸ்துக்கு அரண் அமைத்துக்கொள்ள முற்பட்டன. ஆனால் பாட்டாளிகள் அவர்களுக்கே உரிய முந்தைய கையகப்படுத்தும் முறையையும், அதன்மூலம் முந்தைய பிற கையகப்படுத்தும் முறைகள் அனைத்தையும் ஒழித்திடாமல், சமுதாயத்தின் உற்பத்தி சக்திகளுக்கு எஜமானர்கள் ஆக முடியாது. அவர்கள் பாதுகாத்து வைக்கவும் அரணமைத்துக் கொள்ளவும் சொந்தமாக ஏதும் பெற்றிருக்கவில்லை. தனிநபர் சொத்துடைமைக்கான முந்தைய பாதுகாப்புகளையும், அதன் காப்புறுதிகளையும் தகர்த்தெறிவதே பாட்டாளிகளின் லட்சியப் பணியாகும்.

இதற்குமுன் நடைபெற்ற வரலாற்று ரீதியான இயக்கங்கள் அனைத்தும் சிறுபான்மையினரின் இயக்கங்களாகவோ, அல்லது சிறுபான்மையினரின் நலனுக்கான இயக்கங்களாகவோ இருந்தன. ஆனால் பாட்டாளி வர்க்க இயக்கமோ மிகப் பெரும்பான்மையினர் பங்குபெறும், மிகப் பெரும்பான்மையினரின் நலனுக்காக நடக்கும், தன்னுணர்வுடன் கூடிய சுயேச்சையான இயக்கமாகும். இன்றைய நமது சமுதாயத்தின் மிகக் கீழான அடுக்காகவுள்ள பாட்டாளி வர்க்கம், அதிகாரப்பூர்வ சமுதாயத்தின் மேலமைந்துள்ள அடுக்குகள் முழுவதையும் விண்ணில் தூக்கி வீசி எறியாமல், தன்னால் [சிறிதும்] அசைய முடியாது; தன்னை உயர்த்திக் கொள்ளவும் முடியாது.

முதலாளித்துவ வர்க்கத்துடன் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம், உள்ளடக்கத்தில் இல்லாவிட்டாலும், வடிவத்திலேனும், முதலில் அதுவொரு தேசியப் போராட்டமாகவே இருக்கிறது. சொல்லப் போனால், ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் முதலில் தன் நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன் கணக்குத் தீர்த்தாக வேண்டும்.

பாட்டாளி வர்க்க வளர்ச்சியின் மிகப் பொதுவான கட்டங்களைச் சித்தரிக்கும்போது, தற்போதைய சமுதாயத்தின் உள்ளேயே ஏறக்குறையத் திரைமறைவாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை, அது வெளிப்படையான புரட்சியாக வெடிக்கும் கட்டம்வரையில் - முதலாளித்துவ வர்க்கம் பலவந்தமாக வீழ்த்தப்பட்டு, பாட்டாளி வர்க்க ஆட்சியதிகாரத்துக்கு அடித்தளம் இடப்படும் கட்டம்வரையில் - நாங்கள் வரைந்து காட்டியுள்ளோம்.

இதுநாள்வரையில் ஒவ்வொரு சமூக அமைப்புமுறையும், நாம் ஏற்கெனவே பார்த்தவாறு, ஒடுக்கும் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையையே அடித்தளமாகக் கொண்டிருந்தது. ஆனால் ஒரு வர்க்கத்தை ஒடுக்க வேண்டுமானால், அந்த வர்க்கம் குறைந்தபட்சம் அதன் அடிமை நிலையிலாவது தொடர்ந்து நீடித்திருப்பதற்குரிய சில நிபந்தனைகளை அதற்கு உத்தரவாதம் செய்திட வேண்டும். நிலப்பிரபுத்துவ எதேச்சாதிகார ஒடுக்குமுறையின்கீழ், குட்டி முதலாளித்துவப் பிரிவினர் ஒருவாறு முதலாளியாக வளர முடிந்தது. அதுபோலவே, பண்ணையடிமை முறை நிலவிய காலத்தில் பண்ணையடிமை, நகரத்தார் சமூக உறுப்பினனாகத் தன்னை உயர்த்திக் கொண்டான். இதற்கு மாறாக, [இன்றைய] நவீன காலத்துத் தொழிலாளி, தொழில்துறையின் முன்னேற்றத்தோடு கூடவே தானும் முன்னேறுவதற்குப் பதிலாக, தன் சொந்த வர்க்கம் நிலவுதற்குரிய [வாழ்வாதார] நிலைமைகளுக்கும் கீழே மேலும் மேலும் தாழ்ந்து போகிறான். அவன் பரம ஏழை ஆகிறான்.

பரம ஏழ்மை மக்கள் தொகையையும் செல்வத்தையும்விட அதிவேகமாக வளர்கிறது. இங்குதான் ஒன்று தெளிவாகிறது – முதலாளித்துவ வர்க்கம் இனிமேலும் சமுதாயத்தில் ஆளும் வர்க்கமாக நீடிக்கவும், தான் நிலவுதற்குரிய நிலைமைகளை அனைத்துக்கும் மேலான சட்டவிதியாகச் சமுதாயத்தின் மீது திணிக்கவும் தகுதியற்றது. முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியதிகாரம் செலுத்தவும் தகுதியற்றது. ஏனெனில், அதன் அடிமை, அவனுடைய அடிமை நிலையிலேயே தொடர்ந்து வாழ்வதற்குக்கூட வகைசெய்ய அதற்கு வக்கில்லை. மேலும், அதன் அடிமையிடமிருந்து தான் வாழ்வாதாரங்களைப் பெறுவதற்குப் பதிலாக, அந்த அடிமைக்கு வாழ்வாதாரங்களை வழங்கியாக வேண்டிய நிலைக்கு, அவன் தாழ்ந்து போவதை அதனால் தடுக்க முடியவில்லை என்பதும் காரணமாகும்.

சமுதாயம் இனிமேலும் இந்த முதலாளித்துவ வர்க்கத்தின்கீழ் வாழ முடியாது. வேறு சொற்களில் கூறுவதெனில், முதலாளித்துவ வர்க்கம் நிலவுவது இனிமேலும் சமுதாயத்துக்கு ஒவ்வாததாகிவிட்டது. முதலாளித்துவ வர்க்கம் நிலவுவதற்கும் ஆதிக்கம் செலுத்துவதற்கும் இன்றியமையாத நிபந்தனை, மூலதனம் உருவாதலும் வளர்ந்து பெருகுதலும் ஆகும். மூலதனத்துக்கு இன்றியமையாத நிபந்தனை கூலி உழைப்பாகும். கூலி உழைப்போ முற்றிலும் தொழிலாளர்களுக்கு இடையிலான போட்டியை மட்டுமே சார்ந்துள்ளது. முதலாளித்துவ வர்க்கம் அனிச்சையாக வளர்த்தெடுக்கும் தொழில்துறையின் முன்னேற்றமானது, அத்தகைய போட்டியின் காரணமாக தொழிலாளர்களிடையே ஏற்படும் தனிமைப்பாட்டை, அவர்கள் [சங்க அமைப்பில்] ஒன்றுசேர்தலின் காரணமாக ஏற்படும் புரட்சிகரப் பிணைப்பின் மூலம் நீக்குகிறது.

எனவே, நவீனத் தொழில்துறையின் வளர்ச்சியானது, எந்த அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கம், பொருள்களை உற்பத்தி செய்தும் கையகப்படுத்தியும் வருகிறதோ, அந்த அடிப்படைக்கே உலை வைக்கிறது. ஆக, முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்கும் மேலாகத் தனக்குச் சவக்குழி தோண்டுவோரையே உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சியும், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் சம அளவில் தவிர்க்கவியலாதவை ஆகும்.
(முதலாளிகளும் பாட்டாளிகளும்,
அத்தியாயம்-1)



4) வர்க்கப் போராட்டம் – மார்க்ஸ்-எங்கெல்ஸ்


(பொருளாதார நெருக்கடிப் பற்றி “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யில்)

இறுதியாக, வர்க்கப் போராட்டம் தீர்மானகரமான நிலையை நெருங்கும் நேரத்தில், ஆளும் வர்க்கத்தினுள்ளே, சொல்லப்போனால் பழைய சமுதாயம் முழுமையினுள்ளும், நடைபெறுகின்ற கரைந்துபோகும் நிகழ்வுப் போக்கானது, வெகு உக்கிரமான, பகிரங்கமான நிலையை எட்டுகிறது. ஆளும் வர்க்கத்தின் ஒரு சிறு பிரிவு தன்னைத் தனியே துண்டித்துக் கொண்டு, எதிர்காலத்தைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் புரட்சிகர வர்க்கத்துடன் சேர்ந்து கொள்கிறது. ஆக, முந்தைய காலகட்டத்தில், எவ்வாறு பிரபுக்களில் ஒரு பிரிவு முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் சென்றதோ, அதேபோல இப்போது முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுதி பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் செல்கிறது. அதிலும் குறிப்பாக முதலாளித்துவச் சித்தாந்தவாதிகளுள், வரலாற்று இயக்கத்தின் முழுப் பரிமாணத்தையும் தத்துவ ரீதியில் புரிந்துகொள்ளும் அளவுக்குத் தம்மை உயர்த்திக்கொண்ட ஒரு பிரிவினர் பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் செல்கின்றனர்.

இன்றைக்கு முதலாளித்துவ வர்க்கத்தை நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் வர்க்கங்கள் அனைத்திலும் பாட்டாளி வர்க்கம் ஒன்று மட்டுமே உண்மையில் புரட்சிகரமான வர்க்கமாகும். பிற வர்க்கங்கள் நவீனத் தொழில்துறையின் முன்னே சிதைவுற்று முடிவில் மறைந்து போகின்றன. பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் நவீனத் தொழில்துறையின் தனிச்சிறப்பான, சாரமான விளைபொருளாகும்.

அடித்தட்டு நடுத்தர வர்க்கத்தினர், சிறு பட்டறையாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி இவர்கள் அனைவரும், நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியாகத் தம் இருப்பை அழிவிலிருந்து காத்துக்கொள்ள முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். எனவே, இவர்கள் பழமைவாதிகளே அன்றிப் புரட்சிகரமானவர் அல்லர். மேலும் இவர்கள் வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கிச் செலுத்த முயல்வதால், இவர்கள் பிற்போக்காளரும் ஆவர். இவர்கள் ஏதோ தற்செயலாகப் புரட்சிகரமாக இருக்கிறார்கள் எனில், அவ்வாறு இருப்பதற்கு இவர்கள் பாட்டாளி வர்க்கமாக மாறிவிடும் தறுவாயில் உள்ளனர் என்பது மட்டுமே காரணம் ஆகும். இவ்வாறாக, இவர்கள் தமது நிகழ்கால நலன்களை அல்ல, எதிர்கால நலன்களையே பாதுகாத்துக் கொள்கின்றனர். அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் கருத்துநிலையில் தம்மை வைத்துக்கொள்ளும் பொருட்டு, தமது சொந்தக் கருத்துநிலையையே கைவிடுகின்றனர்.

பழைய சமுதாயத்தின் மிகமிக அடிமட்ட அடுக்குகளிலிருந்து தூக்கி எறியப்பட்டுச் செயலற்று அழுகிக் கொண்டிருக்கும் சமூகக் கழிவாகிய ”ஆபத்தான வர்க்கம்” இங்குமங்கும் ஒருசில இடங்களில் பாட்டாளி வர்க்கப் புரட்சியால் இயக்கத்துக்குள் இழுக்கப்படலாம். எனினும், அந்த வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள், பிற்போக்குச் சூழ்ச்சியின் லஞ்சம் பெற்ற கைக்கூலியாகச் செயலாற்றவே அதனைப் பெரிதும் தயார் செய்கின்றன.

ஏற்கெனவே பாட்டாளி வர்க்க வாழ்க்கை நிலைமைகளில், பழைய சமுதாயத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கை நிலைமைகள் அனேகமாகப் புதையுண்டு போயின. பாட்டாளிக்குச் சொத்துக் கிடையாது; மனைவி மக்களிடம் அவனுக்குள்ள உறவுக்கும், முதலாளித்துவக் குடும்ப உறவுகளுக்கும் இடையே பொதுவான கூறுகள் எதுவும் இனிமேல் இல்லை. ஃபிரான்சில் இருப்பதுபோலவே இங்கிலாந்திலும், ஜெர்மனியில் இருப்பதுபோலவே அமெரிக்காவிலும், நவீனத் தொழில்துறை உழைப்பும், மூலதனத்துக்குக் கீழ்ப்படும் நவீன கால அடிமைத்தனமும், பாட்டாளியிடமிருந்து தேசியப் பண்பின் அனைத்து அடையாளங்களையும் துடைத்தெறிந்துவிட்டன. சட்டம், ஒழுக்கநெறி, மதம் என்றெல்லாம் பாட்டாளிக்கு எத்தனை முதலாளித்துவத் தப்பெண்ணங்கள் உள்ளனவோ அத்தனை முதலாளித்துவ நலன்கள் அவற்றின் பின்னால் பதுங்கி மறைந்து கொண்டுள்ளன.
(முதலாளிகளும் பாட்டாளிகளும்,
அத்தியாயம்-1)


3) பாட்டாளி வர்க்கமும் வர்க்க உணர்வும் – மார்க்ஸ்-எங்கெல்ஸ்


(பொருளாதார நெருக்கடிப் பற்றி “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யில்)

பாட்டாளி வர்க்கம் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து செல்கிறது. பிறந்தவுடனே அது முதலாளித்துவ வர்க்கத்துடனான தனது போராட்டத்தைத் தொடங்கிவிடுகிறது. முதலாவதாக, இந்தப் போராட்டத்தைத் தனித்தனித் தொழிலாளர்களும், அடுத்து ஒரு தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களும், பிறகு ஒரு வட்டாரத்தில் ஒரு தொழிற்பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களும், தம்மை நேரடியாகச் சுரண்டும் தனித்தனி முதலாளிகளுக்கு எதிராக நடத்துகின்றனர். தொழிலாளர்கள், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்கு எதிராகத் தங்களின் தாக்குதல்களைத் தொடுக்கவில்லை. உற்பத்திக் கருவிகளை எதிர்த்தே தாக்குதல் தொடுக்கின்றனர். அவர்களின் உழைப்போடு போட்டியிடும் இறக்குமதிப் பொருள்களை அவர்கள் அழிக்கின்றனர்; எந்திரங்களைச் சுக்கு நூறாக உடைத்தெறிகின்றனர்; தொழிற்சாலைகளைத் தீவைத்துக் கொளுத்துகின்றனர்; மறைந்துபோய்விட்ட, மத்திய காலத்துத் தொழிலாளியின் அந்தஸ்தைப் பலாத்காரத்தின் மூலம் மீட்டமைக்க முயல்கின்றனர்.

இந்தக் கட்டத்தில் தொழிலாளர்கள், இன்னமும் நாடு முழுமையும் சிதறிக் கிடக்கின்ற, தமக்குள்ளே ஒத்திசைவில்லாத ஒரு கூட்டமாகவே உள்ளனர். அவர்களுக்கிடையே நிலவும் பரஸ்பரப் போட்டியால் பிளவுபட்டுள்ளனர். அவர்கள் எங்காவது மிகவும் கட்டுக்கோப்பான அமைப்புகளில் ஒன்றுபட்டுள்ளார்கள் எனில், அந்த ஒற்றுமை இன்னமும்கூட அவர்கள் தாமாக முன்வந்து ஒன்றுபட்டதன் விளைவாக இல்லாமல், முதலாளித்துவ வர்க்கத்தின் ஒற்றுமையால் ஏற்பட்ட விளைவாகவே உள்ளது. முதலாளித்துவ வர்க்கம் தன் சொந்த அரசியல் லட்சியங்களை அடையும் பொருட்டு, ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தைக் களத்தில் இறக்கும் கட்டாயத்துக்கு ஆளாகிறது. மேலும், சிறிது காலத்துக்கு அவ்வாறு செய்யவும் அதனால் முடிகிறது. எனவே, இந்தக் கட்டத்தில் பாட்டாளிகள் அவர்களின் பகைவர்களோடு போராடவில்லை; பகைவர்களின் பகைவர்களாகிய எதேச்சாதிகார முடியாட்சியின் மிச்சமீதங்கள், நிலவுடைமையாளர்கள், தொழில்துறை சாராத முதலாளிகள், குட்டி முதலாளிகள் ஆகியோரை எதிர்த்துத்தான் போராடுகின்றனர். இவ்வாறாக, வரலாற்று ரீதியான இயக்கம் முழுமையும் முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் குவிந்துள்ளது; இவ்வகையில் பெறப்படும் ஒவ்வொரு வெற்றியும் முதலாளித்துவ வர்க்கத்துக்கே வெற்றியாக அமைகிறது.

ஆனால் தொழில்துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் எண்ணிக்கையில் அதிகமாவது மட்டுமின்றி, பெருந்திரள்களாகவும் குவிக்கப்படுகிறது; அதன் வலிமை வளர்கிறது; அந்த வலிமையை அது அதிகம் உணரவும் செய்கிறது. எந்த அளவுக்கு எந்திர சாதனங்கள் உழைப்பின் பாகுபாடுகள் அனைத்தையும் துடைத்தொழித்து, அனேகமாக எல்லா இடங்களிலும் கூலி விகிதங்களை ஒரேமாதிரிக் கீழ்மட்டத்துக்குக் குறைக்கிறதோ அந்த அளவுக்குப் பாட்டாளி வர்க்க அணிகளுக்குள்ளே பல்வேறு நலன்களும், வாழ்க்கை நிலைமைகளும் மேலும் மேலும் சமன் ஆக்கப்படுகின்றன. முதலாளித்துவ வர்க்கத்தாரிடையே வளர்ந்துவரும் போட்டியும், அதன் விளைவாக எழுகின்ற வணிக நெருக்கடிகளும் தொழிலாளர்களின் கூலிகளை எப்போதும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாக்குகின்றன.

தொடர்ந்து அதிவேக வளர்ச்சி காணும் எந்திர சாதனங்களின் முடிவுறாத மேம்பாடு, அவர்களுடைய பிழைப்பை மேலும் மேலும் நிலையற்றதாக்குகிறது. தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட முதலாளிகளுக்கும் இடையேயான மோதல்கள், மேலும் மேலும் இரு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களின் தன்மையைப் பெறுகின்றன. உடனே தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு எதிராகக் கூட்டமைப்புகளை (தொழிற் சங்கங்களை) அமைத்துக்கொள்ளத் தொடங்குகின்றனர். கூலிகளின் விகிதத்தைத் [குறைந்து போகாமல்] தக்கவைத்துக்கொள்ள அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். அவ்வப்போது மூளும் இந்தக் கிளர்ச்சிகளுக்கு முன்னேற்பாடு செய்து கொள்ளும் பொருட்டு, நிரந்தரமான சங்கங்களை நிறுவிக்கொள்கின்றனர். இங்கும் அங்கும் [சில இடங்களில்] இந்தப் போராட்டம் கலகங்களாக வெடிக்கிறது.

அவ்வப்போது சில வேளைகளில் தொழிலாளர்கள் வெற்றி பெறுகின்றனர். ஆனாலும் அது தற்காலிக வெற்றியே. அவர்களுடைய போராட்டங்களின் மெய்யான பலன் அவற்றின் உடனடி விளைவில் அடங்கியிருக்கவில்லை. எப்போதும் விரிவடைந்து செல்லும் தொழிலாளர்களின் ஒற்றுமையில் அடங்கியுள்ளது. நவீனத் தொழில்துறை உருவாக்கியுள்ள மேம்பட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள் இந்த ஒற்றுமைக்குத் துணைபுரிகின்றன. வெவ்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒருவரோடொருவர் தொடர்புகொள்ள இவை உதவுகின்றன. யாவும் ஒரே தன்மை கொண்ட, எண்ணற்ற வட்டாரப் போராட்டங்களை வர்க்கங்களுக்கு இடையேயான ஒரே தேசியப் போராட்டமாக மையப்படுத்த இந்தத் தொடர்புதான் தேவையாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமே ஆகும். மத்திய காலத்து நகரத்தார், அவர்களுடைய படுமோசமான சாலைகளின் துணைகொண்டு, எந்த ஒற்றுமையைச் சாதிக்கப் பலநூறு ஆண்டுகள் தேவைப்பட்டனவோ அந்த ஒற்றுமையை, நவீனப் பாட்டாளிகள் ரயில்பாதைகளின் துணைகொண்டு ஒருசில ஆண்டுகளிலேயே சாதித்துவிட்டனர்.

தங்களை ஒரு வர்க்கமாகவும், அதன்மூலம் ஓர் அரசியல் கட்சியாகவும் ஆக்கிக் கொள்ளும் பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பானது, தொழிலாளர்களுக்கு உள்ளேயே நிகழும் போட்டியின் காரணமாகத் தொடர்ந்து சீர்குலைந்து வருகிறது. எனினும் பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பு முன்னிலும் வலிமை மிக்கதாக, உறுதி மிக்கதாக, சக்தி மிக்கதாக மீண்டும் வீறுகொண்டு எழுகிறது. இது முதலாளித்துவ வர்க்கத்தின் மத்தியிலேயே நிலவும் பிளவுகளைப் பயன்படுத்தித் தொழிலாளர்களின் குறிப்பிட்ட நலன்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கக் கட்டாயப்படுத்துகிறது. இவ்வாறுதான் இங்கிலாந்தில் பத்து மணிநேர வேலைநாள் மசோதா சட்டமாக்கப்பட்டது.

மொத்தமாகப் பார்க்குமிடத்து, பழைய சமுதாயத்தின் வர்க்கங்களுக்கு இடையே நிகழும் மோதல்கள், பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சிப் போக்குக்குப் பல வழிகளிலும் உதவுகின்றன. முதலாளித்துவ வர்க்கம் இடையறாத ஒரு போராட்டத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. முதலில் பிரபுக் குலத்துடன் போராட வேண்டியிருந்தது; அதன்பிறகு, முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த சில பகுதிகளின் நலன்கள் தொழில்துறை முன்னேற்றத்துக்கு எதிராகிவிடும்போது, அந்தப் பகுதிகளுடன் போராட வேண்டியுள்ளது; எந்தக் காலத்திலும் அன்னிய நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்துடன் அது போராட வேண்டியுள்ளது. இந்தப் போராட்டங்கள் அனைத்திலும் முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கவும், அதன் உதவியை நாடவும், அப்படியே அதனை அரசியல் அரங்குக்கு இழுத்துவரவும் வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறது. ஆக, முதலாளித்துவ வர்க்கமே, பாட்டாளி வர்க்கத்துக்குத் தன் சொந்த அரசியல் கல்வியின் கூறுகளையும், பொதுக் கல்வியின் கூறுகளையும் வழங்குகிறது. வேறு சொற்களில் கூறுவதெனில், முதலாளித்துவத்தோடு போரிடுவதற்கான ஆயுதங்களைப் பாட்டாளி வர்க்கத்துக்கு முதலாளித்துவமே வழங்குகிறது.

மேலும், நாம் ஏற்கெனவே அறிந்தபடி, தொழில்துறை முன்னேற்றத்தின் விளைவாக ஆளும் வர்க்கங்களில் பல பிரிவுகள் முழுமையாகப் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்படுகின்றன. அல்லது, குறைந்தபட்சம் அவற்றின் வாழ்வாதார நிலைமைகள் ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன. இந்தப் பிரிவுகளும் பாட்டாளி வர்க்கத்தின் ஞானோதயத்துக்கும் முன்னேற்றத்துக்குமான பல புத்தம் புதிய கூறுகளை வழங்குகின்றன.
(முதலாளிகளும் பாட்டாளிகளும்,
அத்தியாயம்-1)