Friday 18 January 2019

10) முதல் (capital) என்றால் என்ன? – எல்.லியான்டியாவ்


பூர்ஷுவாப் பொருளாதார அறிஞன் ஒருவன் இக்கேள்விக்குக் கீழ்க்காணும் விடையை அளித்துள்ளான்.

"தான் விரட்டிச் செல்லும் மிருகத்தின் மீது காட்டுமிராண்டி ஒருவன் எறியும் முதல் கல்லிலும், அவன் கைகளால் பறிக்க முடியாத பழத்தை அடைவதற்கு அவன் எடுக்கும் முதல் குச்சியிலும் இன்னொரு பொருளை அடையும் நோக்கத்திற்காக ஒரு பொருளைத் தனதாக்கும் ஒரு நிலையைக் காண்கிறோம். அதுதான் மூலதனம் தோன்றிய விதமாகும்."
முதல் பற்றிய இவ் விளக்கம் முதலாளிகளுக்கு மிக்க நலம் பயப்பதாகும். முதல் எப் பொழுதும் இருந்திருக்கிறது. இனி எப்பொழுதும் இருக்கும் என்று மக்களை நினைக்கச் செய்வதற்காக அது ஏற்பட்டதாகும்.

உண்மையில் ஒவ்வொரு உழைப்பு மூலமும் முதலானால் மக்கள் முதல் இல்லாமல் வாழமுடியாது என்பது தெளிவு. உழைப்புக் கருவிகள் எப்பொழுதும் தேவைப்பட்டிருக்கின்றன. இனியும் தேவைப்படும். இந்த அடிப்படையில் பார்த்தால் தேங்காயைக் கல்லால் பிளக்கும் குரங்குகூட ஒரு முதலாளிதான்.

ஆனால் இந்த விளக்கம் அப்பட்டமான பொய் விளக்கமாகும். கல்லும் குச்சியும் உழைப்பு மூலங்களாகப் பயன்படுகின்றன. ஆனால் அவைகள் மனிதனை மனிதன் சுரண்டுவதற்குரிய சாதனங்களாகத் தாமே பயன்படுவதில்லை .

உண்மையில் முதல் என்பது பொருள் அல்ல. ஆனால் திட்டவட்டமான உற்பத்தியின் சமூக உறவாகும். உற்பத்திச் சாதனங்களை உடைமையாகக் கொண்டுள்ள வர்க்கத்திற்கும், இவற்றை இழந்த வர்க்கத்திற்கும் இடையேயுள்ள சமூக உறவுதான் இது. அதனால்தான் சுரண்டுவதற்குப் பயன்படக் காட்டாயப்படுத்தப் படுகிறது. பொருள்களோடு தொடர்புடைய வர்க்கங்களுக்கிடையேயுள்ள உறவே இதுதான். முதலாளி உற்பத்திச் சாதனங்கள் அனைத்தையும் உடைமையாகக் கொள்கிறான். பாட்டாளி வர்க்கத்திடமிருந்து அவைகள் எடுக்கப்பட்டுப் போகின்றன. கட்டடங்கள், இயந்திரங்கள், கச்சாப் பொருள்கள், செய்து முடிக்கப் பட்ட பொருள்கள் ஆகியவை தம்மில் தாமே முதலாவதில்லை. ஆனால் தெளிவானதொரு சமூக அமைப்பு முறையாகும். அம்முறையில் இவையனைத்தும் முதலாளி களின் ஏகபோகத்திற்குட் படுகிறது. அவர்கள் இம்முதலாகிய உற்பத்திச் சாதனங்களை சுரண்டும் சாதனங்களாக உபயோகிக்கிறார்கள்.

முதலாளித்துவ சமுதாயங்களில் பண்டங்கள் உற்பத்தி மூலங்களாகும். பண்டங்களாக இருக்கும் போது அவற்றிற்கு மதிப்பு உண்டு. அவைகள் பணத்திற்குக் கொள்ளவும், கொடுக்கவும் படுகின்றன. எனவே, முதலை மதிப்பு என்று விளக்கலாம். இது உழைப்பாளரின் கூலியைச் சுரண்டுவதன் மூலம் உபரி மதிப்பைப் பெறுகின்றன.

முதலாளித்துவமானது, முதலாளிகள், நிலப்பிரபுக்கள் ஆகிய சிலரின் தனியார் உடைமையாக உற்பத்திச் சாதனங்கள் இருப்பதை அடிப்படையாகக் கொண்டதாகும். இதற்கு மாறாக பெரும்பான்மை யான மக்கள், தங்களது உற்பத்திச் சாதனங்களை இழந்து இருக்கின்றனர். எனவே, தொழிற்சாலைகள், சுரங்கங்கள், நிலம் ஆகியவற்றின் சொந்தக்காரர்களிடம் தங்களை வேலைக்கமர்த்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

முதலாளித்துவ நாடுகளில் சிறு உடைமையாளர்க ளு ம் இருக்கிறார்கள். உழைப்பின் சிறு உபகரணங்களின் உதவியால் வேலை செய்யும் சிறு விவசாயிகளும் கைத்தொழிலாளரும் ஆவர், ஆனால் இந்தச் சிறு உற்பத்தியாளர்கள் பெரிய உடைமையாளர்களோடு போட்டியிட முடிவதில்லை. கூலி பெறும் உழைப்பாளர்களைப் போலவே இவர்களும் பெரிய முதலாளிகளிடமும், நிலச் சொந்தக் காரரிடமும் அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள்.

முதலாளித்துவ சமுதாயத்தில், மனிதன் தொட்டில் தொடங்கி சுடுகாடு மட்டும் உள்ள அவனது வாழ்க்கை நெடுகிலும் தனியார் சொத்தின் ஆதிக்கத்தை உணர வேண்டி நேரிடுகிறது.

தனியார் உடைமையான ஒரு வீட்டில்தான் அலுவலகப் பணியாளரோ அல்லது தொழிற்சாலைத் தொழிலாளரோ குடியிருக்க வேண்டியிருக்கிறது. அவன் வேலை செய்யும் தொழிற்சாலையோ அல்லது அலுவலகமோ, ஒரு முதலாளியுடையதாகவோ அல்லது முதலாளிகளின் கூட்டு நிறுவனமாகவோ இருக்கிறது. உணவு, உடை, இன்னும் இது போன்ற நுகர்ச்சிப் பண்டங்களை அவன் கடைக்காரர்களிடமிருந்தும் வியாபாரிகளிடமிருந்தும் வாங்குகிறான். முதலாளித்துவ நிறுவனங்களுக்குச் சொந்தமான டிராமிலோ, ரெயிலிலோ, பஸ்ஸிலோதான் அவன் பயணம் செய்கிறான்.

சினிமாக் கொட்டகைகள், நாடக சாலைகள், நடன அரங்குகள், விளையாட்டரங்கங்கள் ஆகியவைகள் தனியாரின் உடைமைகள் தான். பெரும்பாலான செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், நூல்கள், அத்தோடு வானொலி, டெலிவிஷன் ஆகியவைகள் அனைத்தும் தனியார் கைகளின் உடைமையாகக் குவிந்திருக்கிறது. ஆஸ்பத்திரி மருந்துகள் போன்றவையும், வைத்தியரின் பணிகளும் தனியார் வியாபாரப் பொருள்களாக இருக்கின்றன.

அலுவலகப் பணியாளர் அல்லது தொழிற்சாலைத் தொழிலாளர் ஒருவர் சிறு சேமிப்புகள் வைத்திருந்தால், அதை முதலாளிகள் அல்லது அவர்கள் ஏஜண்டுகள் மேற்பார்க்கும் இன்சூரன்ஸ் கம்பெனிகளிலும், சேமிப்பு வங்கிகளிலும் தான் போட வேண்டி யிருக்கிறது. முடிவாக, அவனது சாவு நேரும் போது அவனைப் புதைப்பதும் தனியார் கல்லறைப் பெட்டி முதலியன செய்வோர் ஆகும்.

முதலாளிகளுக்குக் காற்றைத் தங்களது சொத்தாக மாற்றிக் கொள்ள முடிந்து, அதை விற்கவும், வாங்கவும் முடியுமானால், அதை வெகு காலத்துக்கு முன்பே செய்திருப்பார்கள். மனிதனுக்குக் காற்று தேவைப்படுவது போலவே நிலமும் தேவைப்படுகிறது. வீடுகள், தொழிற்சாலைகள், ரெயில்வேக்கள் முதலியன நிலத்தின்மீது தான் கட்டப் பெற்றுள்ளன. நிலத்தை உழுது பயிரிடுவதன் மூலம் உணவுப் பொருள்களும், வாழ்க்கைக்கு இன்றியமையாத இதர பொருட்களும், கிடைக்கின்றன. ஆனால் முதலாளித்துவத்தின் கீழ் நிலம் தனியார் உடைமையாக இருக்கிறது. பெரும்பகுதி நிலம் சிறு எண்ணிக்கை யுள்ள முதலாளிகள், நிலப்பிரபுக்கள் ஆகியோரின் கைகளில் உள்ளது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


No comments:

Post a Comment