Thursday 16 March 2023

3) அவசிய உழைப்பும், உபரி உழைப்பும் - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

முதலாளித்துவத்தின் கீழ் ஒரு தொழிலாளி பகுதிநேரம் தனக்காகவும், பகுதி நேரம் முதலாளிக்காகவும் வேலை செய்கிறான். தனக்கென அவசியமான வாழ்க்கைச் சாதனங்களைப் படைக்க தொழிலாளிக்குத் தேவைப்படுகிற வேலை நேரம், அவசிய உழைப்பு நேரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சமயத்தில் செலவிடப்பட்ட உழைப்பு, அவசிய உழைப்பு என்று அழைக்கப் படுகிறது. அவசிய உழைப்பு நேரத்திற்கு, கூலி என்ற உருவத்தில் முதலாளியால் விலை (ஈடு) கொடுக்கப்படுகிறது. 

உபரியான உற்பத்திப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கு செலவிடப்பட்ட உழைப்பு நேரம், உபரி உழைப்பு நேரம் எனக் கூறப்படுகிறது. இந்த சமயத்தில் செலவிடப்பட்ட உழைப்பு, உபரி உழைப்பு எனப்படுகிறது. அவசிய உழைப்பிற்கும் உபரி உழைப்பிற்கும் உள்ள விகிதாசாரம் அல்லது அவசிய உழைப்பு நேரத்திற்கும், உபரி உழைப்பு நேரத்திற்கும் உள்ள விகிதாசாரம், தொழிலாளி சுரண்டப்படுவதின் அளவைக் காட்டுகிறது.

உபரியான உற்பத்திப் பொருள்களைப் படைக்கும் உபரி உழைப்பு முதலாளித்துவத்திற்கும் முன்பும்கூட இருந்தது. அடிமை உடைமை, நிலப் பிரபுத்துவ சமுதாயங்களில் சுரண்டும் வர்க்கம், சுரண்டப்பட்ட மக்களின் உபரி உழைப்பின் மீதுதான் வாழ்ந்தது. ஆனால், முதலாளித்துவத்தின் கீழ் உபரி உற்பத்திப் பொருள் உபரி மதிப்பு ஆகிறது. ஏனென்றால், உபரி உழைப்பு ஒரு வர்த்தகப் பண்டம் ஆகிறது. உபரி உழைப்பும்கூட முதலாளியின் (தனி) உபயோகத்திற்கு மட்டுமல்லாமல், அது மூலதனத்திற்கு மாற்றப்படுவதால் புதிய தொழிலாளிகளைச் சுரண்டுவதற்கும் உபயோகப்படுகிறது.

No comments:

Post a Comment