Friday 17 March 2023

2) பொருளாதார நெருக்கடிகள் - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, அதாவது பெருவீத இயந்திரத் தொழில்கள் நிலைக்க ஆரம்பித்ததிலிருந்து, முதலாளித்துவ நாடுகளின் பொருளாதாரம் அவ்வப்போது பொருளாதார நெருக்கடிகளால் உலுக்கப்பட்டு வருகிறது. 1825- இல் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாகப் பாதித்த முதல் பொருளாதார நெருக்கடி இங்கிலாந்தில் ஏற்பட்டது. 1836-இல் மற்றொரு புதிய நெருக்கடி இங்கிலாந்தை உலுக்கியது; அது அமெரிக்காவுக்கும் பரவியது. 1845-48-இல் ஏற்பட்ட அடுத்த நெருக்கடி உலக நெருக்கடியாக இருந்தது. அதைத் தொடர்ந்து 1856, 1857, 1873, 1882, 1890 ஆகிய ஆண்டுகளிலும் நெருக்கடிகள் ஏற்பட்டன. இருபதாம் நூற்றாண்டில் 1900-03: 1907; 1920-21; 1929–33; 1937-38 ஆகிய வருடங்களில் நெருக்கடிகள் ஏற்பட்டன. உதாரணமாக, இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்னர், அமெரிக்காவில் (1948-49; 1953-54; 1957-58; 1960 -61) நான்கு நெருக்கடிகள் ஏற்பட்டன. 1957-58-ஆம் வருடத்திய நெருக்கடி யானது முதலாளித்துவ உலகின் இயந்திரத் தொழில் உற்பத்தியில் அநேகமாக மூன்றில் இரண்டு பாகத்தைக்கொண்டிருந்த நாடுகளைப் பாதித்ததாக இருந்தது. 

முதலாளித்துவத்தின் கீழ்ப் பொருளாதார நெருக்கடிகள் என்பவை அமித உற்பத்தி (over production) நெருக்கடிகளாகும். ஒரு நெருக்கடியின் போது சரக்குகள் விற்பனையாகாமல் தேக்கமடைகின்றன. ஏனென்றால், ஒரு எல்லைக் குட்பட்ட (வரையறுக்கப்பட்ட வாங்கும் சக்தியை உடைய உபயோகிப் பாளர்களால் வாங்கக் கூடியதைக் காட்டிலும் அதிகமான சரக்குகள் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டன. உற்பத்தி அமிதமாக ஏற்பட்டுள்ளது என்பதால் சமூகத்தின் அங்கத்தினர் அனைவருடைய தேவைகளையும் திருப்தி செய்துவிட்டது என்பதல்ல, அதற்குமாறாக, நெருக்கடி சமயத்தில் தொழிலாளி மக்கள் மிகவும் கஷ்ட நிலைமையை அனுபவிக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கைத் தரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தின் விளைவாக மிகப் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை வசதிகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. சரக்குகள் உபரியாக இருப்பது சமூகத்தின் உண்மையான தேவைகளுடன் சம்பந்தப் பட்டதாக இல்லை. இந்த சரக்குகளை வாங்கும் சக்தி மக்களுக்கு இல்லை என்பதையே இது குறிக்கிறது. எனவே, நெருக்கடியின்போது அமித உற்பத்தி என்பது பெயரளவுக்குத் தான் (இதற்குமுன் இருந்த நிலைமையுடன் ஒப்பிட்டுக் கூறுவது மட்டுந்தான்).

அமித உற்பத்தி (over production) என்பதன் விளைவாக ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளானவை உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும், உற்பத்தியின் பலனை அபகரித்துக் கொள்வதில் உள்ள தனியார் முதலாளித்துவ உருவத்திற்கும் இடையிலுள்ள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. லட்சோப லட்சக்கணக்கான மக்கள் முதலாளித்துவத் தொழில் நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்கள் உற்பத்தி செய்வதெல்லாம் தொழில் நிலையங்களின் உடைமையாளர்களுக்குச் சொந்தமாகிறது. ஒரு தொழிலாளி எவ்வளவுதான் உற்பத்தி செய்தாலும், அவனுடைய கூலி அவனை எவ்வளவு வாங்குவதற்கு சாத்திய மாக்குகிறதோ அந்த அளவுக்குத்தான் அவன் வாங்க முடியும்.

அதிகபட்ச லாபம் பெறும் முயற்சியில் முதலாளிகள் உற்பத்தியை விரிவுபடுத்துகிறார்கள். தொழில்நுட்பத்தைச் செம்மைப் படுத்துகிறார்கள். மிகப் பெரும் அளவு சரக்குகளை விற்பனைக்காகச் சந்தைக்குக் கொண்டு வருகிறார்கள். ஆனால் தொழிலாளிகளின் கூலி உயர்வு, அது ஒருக்கால் உயர்வதானாலும் கூட, உற்பத்தியின் வளர்ச்சிக்குப் பின்தங்கியே நிற்கிறது. இதன் பொருள், தொழிலாளி வர்க்கத்தின், உழைப்பாளி மக்களின் பரந்த பகுதியினரது உண்மையான கோரிக்கை அத்துடன் ஒப்பு நோக்கும்போது குறைகிறது. முதலாளித்துவ உற்பத்தி விரிவுபடுவதானது, பெருவாரியான பிரதான மக்கள் பகுதியின் எல்லைக் குட்பட்ட உபயோகிக்கும் சக்தியினால் தவிர்க்க முடியாமல் தடைப்படுத்தப்படுகிறது.

முதலாளித்துவத்தின் பிரதான முரண்பாடு பூர்ஷுவா வர்க்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையிலான வர்க்க முரண்பாடுகளாக வெளித்தோன்றுகிறது. உற்பத்தியின் இரு மிக முக்கிய நிலைமைகளுக்கிடையில் முதலாளிகளின் கையில் குவிந்திருப்பதற்கும் நேரிடையான உற்பத்திச் சாதனங்கள் உற்பத்தியாளர்களிடமிருந்து உற்பத்தி சாதனங்கள் பறிக்கப் பட்டு, அவர்கள் தமது உழைப்புச் சக்தியை மட்டுமே உடைமையாகப் பெற்றிருப்பதற்கும் இருக்கும் முரண்பாடு ஒரு புறத்தில், அளவுக்கு மீறிய உற்பத்திச் சாதனங்களும், உற்பத்திப் பொருள்களும் மறுபுறத்தில், வாழ்க்கை வசதிகள் பறிக்கப்பட்ட வேலையில்லாதோர் கூட்டம், அளவுக்கு மீறிய உழைப்புச் சக்தியும் என அமித உற்பத்தியும் என்னும் நெருக்கடியில் குறிப்பாக, தெளிவாகத் தோற்றமளிக்கிறது.

தொழிலாளி வர்க்கத்திற்கும் பூர்ஷுவா வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் அவர்களைச் சுரண்டுகிற நிலச் சொந்தக்காரர்களுக்கும் இடையிலான வர்க்க முரண்பாடுகளை நெருக்கடிகள் அதிகப்படுத்துகின்றன. முதலாளித்துவ சமுதாயத்தில் வர்க்கப் போராட்டம் தீவிரமடைகிறது. இந்தப் போராட்டத்தில் உழைப்பாளி மக்களின் பரந்த பகுதியினர் பங்கெடுத்துக் கொள்ளுகிறார்கள்.

நெருக்கடியானது, முதலாளித்துவ உற்பத்தி முறையின் தவிர்க்க முடியாத உடன்பிறப்பாகும். இயற்கையான விளைவாகும். முதலாளித்துவம் இருக்கிறவரையில் அவை ஏற்படாமற் செய்ய முடியாது. முதலாளித்துவத்தினால் படைக்கப்பட்ட உற்பத்திச் சக்திகள் பூர்ஷுவா உற்பத்தி உறவுகளின் எல்லைவட்டத்தை மீறி வளர்ந்துவிட்டன என்பதையும், அதன் விளைவாகப் பிந்தியது (உற்பத்தி உறவுகள்) உற்பத்திச் சக்திகள் மேலும் வளர்வதற்கு தடையாகிவிட்டன என்பதையும் அவை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. இந்த வளர்ச்சியை உத்தரவாதம் செய்ய உற்பத்திச் சாதனங்கள் மீதான முதலாளித்துவ தனியுடைமையையும், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளையும் ஒழித்துக் கட்டுவது அவசியமாகும்.

உற்பத்திச் சக்திகளை வளர்த்து, உற்பத்தியை சமூகமயமாக்கியதன் மூலம் முதலாளித்துவமானது, சோஷலிஸத்திற்கான பௌதிக முன் தேவைகளை எதார்த்தத்தில் சிருஷ்டித்து விடுகிறது. அதேசமயத்தில் சமுதாயத்தை மாற்றியமைக்கப்போகும் சக்தியையும் அது தோற்றுவிக்கிறது. இந்த சக்திதான் தொழிலாளி வர்க்கம்.

1) முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடு - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

 IV முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் 

1) முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடு

முதலாளித்துவம் வளர்ச்சி அடைய அடைய உழைப்பின் சமூகப் பிரிவினை அதிகரிக்கிறது. முன்னர் தனித்தனியாக சுயேச்சையாக இருந்த இயந்திரத் தொழில் பிரிவுகளுக்கிடையில் பரஸ்பரத் தொடர்புகளும், ஒன்றையொன்று சார்ந்திருப்பதும் ஸ்திரப்படுகிறது. பல்வேறு தொழில் நிலையங்கள், பிரதேசங்கள், நாடுகள் ஆகியவற்றுக்குப் பொருளாதார உறவுகள் பெருமளவு அதிகரித்துள்ளன. முதலாளித்துவ அமைப்பானது, இன்னும் முதலாளித்துவ உறவுகள் ஏற்படாத காலனி நாடுகள் அடங்கலாக முழுக்கண்டங்களைத் தழுவி நிற்கிறது.

தொழில் துறையிலும், விவசாயத்திலும் பெருவீத உற்பத்தி ஏற்படுத்தப்படுகிறது. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியுடன், நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளுடைய ஒன்றுபட்ட உழைப்பை அவசியப்படுத்துகிற உற்பத்திக் கருவிகளும், உற்பத்தி வழிமுறைகளும் அமுலுக்கு வருகின்றன. உற்பத்தி மென்மேலும் அதிகமாக சமூகத் தன்மையைப் பெறுகிறது. ஆனால் உற்பத்தி சாதனங்கள் தனி உடைமையாக இருப்பதன் விளைவாக லட்சக்கணக்கான மக்களின் சமூக உழைப்பின் உற்பத்திப் பொருளை முதலாளிகளின் ஒரு சிறு கூட்டம் அபகரிப்பதில் முடிகிறது.

முதலாளித்துவ அமைப்பு ஆழமான முரண்பாட்டைக் கொண்டுள்ளது. உற்பத்தி மேலும் மேலும் அதிகமாக சமூகத் தன்மையைப் பெறுகிறது. அதேசமயத்தில் உற்பத்திச் சாதனங்களின் உடைமை தனிப்பட்ட முதலாளிகளின் கைகளிலேயே இருக்கிறது. இது உற்பத்தியின் சமூகத் தன்மைக்குப் பொருந்தாதது. உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும், உற்பத்தியின் பலன்களைத் தனிப்பட்ட முதலாளித்துவ முறையில் அபகரித்துக் கொள்வதற்கும் இடையில் உள்ள முரண்பாடுதான் முதலாளித்துவத்தின் அடிப்படையான முரண்பாடு ஆகும்.

முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடானது. இடையறாது வளர்ந்து கொண்டேயிருக்கும். உற்பத்திச் சக்திகளுக்கும், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்கு மிடையிலான முரண்பாடாகப் பிரதிபலிக்கிறது.

அமித உற்பத்தி (over production) என்னும் பொருளாதார நெருக்கடியின் போது இந்த முரண்பாடு, குறிப்பாகவும் தெளிவாகவும் வெளியாகிறது.

Thursday 16 March 2023

1) பூர்ஷுவா வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும்

 III முதலாளித்துவ சமுதாயத்தின் வர்க்க சேர்க்கை 

1) பூர்ஷுவா வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும்

ஒவ்வொரு வர்க்க சமுதாயமும் வெவ்வேறான வர்க்கங்களையும், பகுதிகளையும் பெற்றிருக்கிறது. ஆனால் தமக்கு இடைப்பட்ட உறவுகளில் சமுதாயத்தின் பிரதான முரண்பாட்டை வெளிக்காட்டுகிற பிரதான வர்க்கங்கள் இவற்றில் எப்போதும் உட்படும். அடிமை உடைமை சமுதாயத்தில் இந்த வர்க்கங்கள் அடிமை உடைமையாளர்களும், அடிமைகளும் ஆவார்கள். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் அவர்கள் நில உடைமையாளர்களும் பண்ணையடிமைகளும் ஆவார்கள். முதலாளித்துவ சமுதாயத்தில் பிரதான வர்க்கங்கள் பூர்ஷுவா வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும் (புராலிடேரியட் - Proletarian) ஆகும்.

பூர்ஷ்வாக்கள், உற்பத்தி சாதனங்களைச் சொந்தமாக வைத்துக் கொண்டு கூலித் தொழிலாளிகளைச் சுரண்டுவதற்காக அவற்றைப் பயன் படுத்தும் வர்க்கமாகும். பூர்ஷ்வா வர்க்கம் ஒரே தன்மையானது அல்ல. இன்று முதலாளித்துவ வர்க்கத்தின் மேல்தட்டில் உள்ள கூட்டம், முதலாளித்துவ உலகின் அரசியலிலும், பொருளாதாரத்திலும் ஆதிக்கம் வகிக்கும் ஏகபோக பூர்ஷுவாக்களாகும். இங்ஙனம் அனைத்து முதலாளித்துவ நாடுகளினது உற்பத்தியில் மூன்றில் ஒரு பாகம் 200 ஏகபோகங்களின் ஆதிக்கத்திலிருக்கிறது. குட்டி பூர்ஷுவாக்கள் என்போர் முதலாளி வர்க்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். சிறு தொழில் நிறுவனங்களின் சொந்தக்காரர்களில் கணிசமான கம்பெனிகளைச் சார்ந்திருக்கிறார்கள்.

சென்ற காலங்களில் நகர்ப்புற குட்டி பூர்ஷுவாக்கள், தொழிலாளி வர்க்கத்தைவிட மேலான வாழ்க்கைத் தரத்தை அனுபவித்து வந்தார்கள். இன்று மிகப் பெரும்பாலான குட்டி பூர்ஷ்வாக்களின் வருமானம் பெரும் தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிகளைவிட அதிகமல்ல; பல இடங்களில் பெரும் தொழில் நிலையங்களில் வேலை செய்யும் தொழிலாளிகளின் சம்பளங்களைவிடவும் குறைவாகும். மறுபுறத்தில், சிறு தொழில் நிறுவனங்களது சொந்தக்காரனின் வேலை நிலைமைகள், தொழிலாளிகளின் வேலை நிலைமைகளைவிட மோசமானது, ஏனென்றால் அவனுடைய வேலை நாள் நீண்டதாக இருக்கிறது. தமது விடாப்பிடியான, தொடர்ந்த போராட்டங்கள் மூலம் தொழிலாளிகள் வென்றுள்ள சமூக அனுகூலங்கள் குட்டி பூர்ஷுவாக்களுக்கு இல்லை. மேலும் சிறிய உற்பத்தியாளன் பெரும் கம்பெனிகளைச் சார்ந்திருக்கிறான். குட்டிபூர்ஷ்வாக்கள் பிரதானமாக தமது சுயேச்சையை இழந்து விட்டார்கள்.

உற்பத்தி சாதனங்களும் வாழ்க்கை சாதனங்களும் பறிக்கப்பட்ட கூலித் தொழிலாளிகளின் வர்க்கம்தான் புராலிடேரியட் (Proletarian) எனப்படுவது. எனவே இந்த வர்க்கம் முதலாளிகளுக்குத் தனது உழைப்புச் சக்தியை விற்கும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறது.

முதலாளித்துவ சமுதாயத்தில், பூர்ஷ்வா வர்க்கம் கூலித் தொழிலாளிகளைச் சுரண்டாமல் நிலைத்திருக்கவோ மேலும் செல்வந்தர்களாகவும் முடியாதாகையாலும், அதே போல் புராலிடேரியன்கள் தங்களை முதலாளிக்கு வாடகைக்குக் கொடுக்காமலும், தங்களுடைய உழைப்புச்சக்தியை விற்காமலும் வாழ முடியாதாகையாலும், பூர்ஷ்வா வர்க்கமும், புராலிடேரியட்டும் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளன. அதே சமயத்தில் பூர்ஷுவா வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும் ஒன்றுக்கொன்று விரோதமான வர்க்கங்களாகும். அவர்களுடைய நலன்கள் சமரசம் செய்யப்பட முடியாதவை. பூர்ஷ்வா வர்க்கத்திற்கும், தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடுகள்தாம், முதலாளித்துவ சமுதாயத்தின் பிரதான முரண்பாடு ஆகிறது.

 

7) மூலதனம் - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

முதலாளித்துவ சமுதாயத்தைப் பற்றி நாம் ஆராயும் போது முதலில் மூலதனம் என்ற கருத்து நம்முன் நிற்கிறது. 

மூலதனம் என்றால் என்ன? இந்த சொல்லின் உள்ளடக்கம் என்ன?

மூலதனத்தின் திட்டவட்டமான வெளித் தோற்றங்கள் பல உள. எந்த முதலாளித்துவ நாட்டிலும் பணம், இயந்திரங்கள், கட்டடங்கள், தயாராகவுள்ள பொருள்கள் முதலியன எதுவும் மூலதனமாக இருக்க முடியும். எனவே இதிலிருந்து மூலதனம் என்றால் மதிப்பு என்ற முதல் முடிவிற்கு வரமுடியும். ஒரு தொழிலாளியினுடைய கூலி பணமாகக் கொடுக்கப்படுகிறது. ஆனால் இதற்குத் தொழிலாளி மூலதனத்தைப் பெற்றிருக்கிறான் என்று அர்த்தமல்ல. ஒரு விவசாயி ஒரு வீட்டையும், விவசாயக் கருவிகளையும் பெற்றிருக்கிறான். ஆனால் இந்த சொத்தும் மூலதனமல்ல. மற்றெல்லா மதிப்பையும் போல, பணம், அது தன்னுடைய மதிப்பை அதிகரிக்கிறபோதுதான் அதாவது அது உபரி மதிப்பை உண்டாக்குகிறபோதுதான் மூலதனமாகிறது. எனவே, உபரி மதிப்பை உண்டாக்குகிற மதிப்புத்தான் மூலதனம் என்று விளக்கி நாம் நமது முதல் முடிவை விரிவுபடுத்தலாம்.

லாபமானது மூலதனத்தின் பிரிக்க முடியாத, அதனுள்ளேயே இருக்கிற தன்மை என்று பூர்ஷுவா விஞ்ஞானம் வலியுறுத்துகிறது. எனினும் மூலதனம் தானாகவே உபரி மதிப்பை உண்டாக்க முடியாது. மூலதனம் அது உழைப்புடன் ஒன்றுபடுகிற - சேருகிற - போதுதான், அதாவது உற்பத்தி செயல்முறைப் போக்கில்தான் அதன் மதிப்பை அதிகரிக்கிறது. மூலதனம் தொழிலாளியைச் சுரண்டுகிறது. அத்தொழிலாளி தன்னுடைய உழைப்பால் உபரி மதிப்பை உண்டாக்குகிறான்; அந்த உபரி மதிப்பு மூலதனத்தை அதிகரிக்கிறது. இதிலிருந்து, மூலதனம் என்பது கூலி வேலைத் தொழிலாளிகளைச் சுரண்டுவதன் மூலம் உபரி மதிப்பை உண்டாக்குகிற மதிப்பு என்றாகிறது.

அதனுடைய ஸ்தூலமான உருவம் எதுவானாலும் மூலதனம் என்பது வெறும் ஒரு பொருள் மட்டும் அல்ல. முதலாளி வர்க்கத்திற்கும் கூலி வேலைத் தொழிலாளர் வர்க்கத்திற்கும் இடையே ஒரு குறிப்பிட்ட உற்பத்தி உறவுகளை மூலதனம் தன்னுட் கொண்டிருக்கிறது. இந்த உறவுகள், மனிதனை மனிதன் சுரண்டுவதில் வெளியாகிறது.

மூலதனத்தைப் பற்றி விளக்குகையில், பூர்ஷுவா பொருளாதார விதிகள், வழக்கமாக உற்பத்திச் சாதனங்கள் எனப் பொருள்படும்படி அதைக் குறிப்பிடுகிறார்கள். பண்டைய ஆங்கிலேய பூர்ஷுவா அரசியல் பொருளாதாரத்தின் பிரதிநிதிகளான ஆடம் ஸ்மித்தும், டேவிட் ரிக்கார்டோவும் இந்தக் கண்ணோட்டம் கொண்டிருந்தனர். உதாரணமாக, ரிகார்டோ கல்லையும், தடியையும் அதாவது புராதன மனிதனின் புராதனக் கருவிகளை, மூலதனமாகக் கருதினார். பூர்ஷுவா விஞ்ஞானம் இன்னமும் மூலதனத்தை, உற்பத்தி சாதனமாக, மூலதனமும் உற்பத்திக்கருவிகளும் ஒன்றெனக் கூறுகிறது. அது மூலதனம் என்பது எந்த உற்பத்தியிலும் நிரந்தரமான, சாசுவதமான, இயற்கையான நிலைமை என எடுத்துக்காட்ட முயற்சிக்கிறது. புராதன சமுதாயத்தில் மூலதனக் “கண்டுபிடிப்பு” இந்த நோக்கத்தைத்தான் நிறைவேற்றுகிறது. மூலதனம் ‘சாசுவதமாக இருந்தது என்ற கோட்பாடு" முதலாளித்துவம் காலகாலத்திலும் இருந்தது என்ற கோட்பாட்டை” உறுதிப்படுத்துவதாகக் கருதப்பட்டது.

பூர்ஷுவா பொருளாதாரவாதிகள், முதலாளித்துவத்தினது - தோற்றத்தின் சரித்திரத்தையும் முதலாளித்துவ சமுதாயத்தில் வர்க்கங்கள் உருவாவதைப் பற்றியும் தவறாக எடுத்துக் காட்டுகிறார்கள். கஷ்டப்பட்டு வேலைசெய்து சிக்கனமாக இருந்தவர்கள் முதலாளிகள் ஆனார்கள் என்றும் தங்கள் சொத்தையெல்லாம் ஊதாரித்தனமாக செலவிட்ட சோம்பேறிகள் தொழிலாளிகள் ஆனார்கள் என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். இந்தக் கட்டுக் கதைகளுக்கும் வரலாற்று ரீதியான உண்மைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஆரம்ப மூலதனக் குவியல் சிக்கனத்தால் ஏற்பட்டதல்ல; ஆனால் காலனி நாடுகளைக் கொள்ளையடித்ததன் மூலமாகவும் பலவந்தமாக விவசாயிகளை ஓட்டாண்டியாக்கியதன் மூலமும், முதலாளித்துவ உழைப்புக் கட்டுப்பாட்டை உண்டாக்கும் நோக்கத்துடன், ஏழைகளுக்கெதிராக கெடுபிடியான கட்டங்களை அமுலாக்கியதன் மூலமாகவும் தான் அது ஏற்பட்டது.

6) ஒப்பு நோக்கு உபரி மதிப்பு (Relative Surplus-Value) - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

 வேலை நாளை நீட்டுவதன் மூலம், உபரி மதிப்பை அதிகரித்ததானது, தொழிலாளிகளின் எதிர்ப்பை வளர்த்தது. இது, சுரண்டலை தீவிரப் படுத்துவதற்கு மற்றொரு முறையை மேற்கொள்ளும்படி முதலாளிகளைத் தூண்டியது. இந்த வழிமுறை வேலை நாளின் மொத்த நேரத்தை அதிகப் படுத்துவதில்லை. ஆனால் அவசிய உழைப்பு நேரத்தைக் குறைக்கிறது. அதேசமயத்தில் இது உபரி உழைப்பு நேரத்தையும் அதன் காரணமாக உபரி மதிப்பையும் அதிகப்படுத்துகிறது. தொழிலாளிகளுக்கான உபயோகப் பொருள் உற்பத்தி செய்யும் பிரிவுகளில் உற்பத்தித் திறன் உயர்த்தப்படுவது, அவசிய உழைப்பு நேரத்தைக் குறைப்பதை சாத்தியமாக்குகிறது. அதே சமயத்தில் தொழிலாளிகளுடைய வாழ்க்கைச் சாதனங்களின் செலவையும் அதற்கேற்றாற் போல் உழைப்புச் சக்தியின் மதிப்பையும் குறைக்கிறது. முன்பு தொழிலாளியின் வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்ய 5 மணி நேரம் செலவு செய்யப்பட்டதென்றால் இப்போது, உதாரணமாக அந்த நோக்கத்திற்காக மூன்று மணி நேரந்தான் செலவிடப்படுகிறது. இதில் வேலை நாள் பின்வருமாறு இருக்கிறது: 

3 மணி                        7 மணி

அவசிய நேரம்                 உபரி நேரம்

வேலை நாளின் கால அளவு மாறாவிட்டாலும் சுரண்டலின் அளவு அதிகரித்து விட்டது.

அவசிய உழைப்பு நேரத்தைக் குறைப்பது, அதற்கேற்றாற் போல், உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பால் உபரி உழைப்பு நேரம் உயர்வதன் விளைவாக ஏற்படுகிற உபரி மதிப்பு ஒப்பு நோக்கு உபரி மதிப்பு எனப்படுகிறது.

இவ்வாறு முதலாளிகள், சாத்தியமான அளவு அதிக உபரி மதிப்பைப் பெறுவதற்காக உற்பத்தி விஸ்தரிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, தொழிலாளிகளைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்துவது முதலிய ஒவ்வொரு சாத்தியமான வழியையும் முதலாளிகள் உபயோகிக்கிறார்கள். உபரிமதிப்பு உற்பத்திதான் முதலாளித்துவ சமுதாயத்தின் பிரதான பொருளாதார விதியாகும்.

5) முற்றான உபரி மதிப்பு (Absolute Surplus-Value = அறுதி உபரி மதிப்பு) - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

உபரி மதிப்பை அதிகப்படுத்துவதற்கான முதல் வழி வேலை நாள் நீட்டுவதில் இருக்கிறது. வேலை நாள் 10 மணியிலிருந்து 12 மணியாக நீட்டப்பட்டு விட்டதாக வைத்துக் கொள்வோம். 

உழைப்புச் சக்தியின் மதிப்பு மாறாததால், அவசிய உழைப்பு நேரம் மாறவில்லை. ஆனால் உபரி உழைப்பு நேரம் அதிகரித்து விட்டது.

5 மணிகள்               7 மணிகள்

அவசிய நேரம்           உபரி நேரம்

7 மணி

X  100ரூ  =  140ரூ

5 மணி

வேலை நாளை நீட்டுவதன் மூலம் கிடைக்கப் பெறுகிற உபரி மதிப்பு முற்றான உபரி மதிப்பு (அறுதி உபரி மதிப்பு), ஏனென்றால் வேலை நாள் ஒட்டு மொத்தமாக முற்றாக நீண்டதாகி விட்டது. முற்றான உபரி மதிப்பு (அறுதி உபரி மதிப்பு) அதாவது நீட்டப் பட்ட வேலைநாள் என்பது முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தின் குணாம்சமாக இருந்தது. ஏனென்றால் அப்போது தொழில் நுட்பம் மிக தாழ்ந்த மட்டத்திலேயே இருந்தது; தங்களுக்குச் சொந்தமான கால் நடைகளைப் பெற்றிருந்த பல விவசாயிகளும், கைத் தொழிலாளிகளும் இல்லை. அப்போது பூர்ஷுவா அரசு முதலாளிகளுக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாகத் தொழிலாளிகளை உழைக்கும்படி நிர்ப்பந்திப்பதற்கான விசேஷ சட்டங்களை வெளியிட்டது. இதன் விளைவாகத் தொழிலாளிகளின் ஜீவிய காலம் குறைந்தது, உழைப்பாளி மக்களிடையே மரண விகிதம் உயர்ந்தது.

தொழிலாளி வர்க்கம் வளர்ந்து, பலம் பெற்றபோது குறைந்த நேரம் கொண்ட வேலை நாளுக்கான தங்களுடைய போராட்டத்தைத் தொழிலாளிகள் தீவிரப் படுத்தினார்கள். குறைந்த நேரம் கொண்ட வேலை நாளுக்கான கோரிக்கை, தொழிலாளி வர்க்க இயக்கத்தின் முதல் கோரிக்கைகளில் ஒன்றாகும். இந்தப் போராட்டம் முதலில் இங்கிலாந்தில் ஆரம்பித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் இங்கிலாந்தில் வேலை நாள் 12 மணியாகவும் 1901-இல் 10 மணியாகவும் குறைக்கப்பட்டது. குறைந்த நேரம் கொண்ட வேலை நாளுக்கான போராட்டம் இதர நாடுகளிலும் நடத்தப்பட்டது. உதாரணமாக ருஷ்யாவில் 1897-ஆம் வருட பெரும் வேலை நிறுத்தப் போராட்டங்களுக்குப்பின் வேலை நாளை 11½ மணி என்று வரையறுத்துச் சட்டம் இயற்றப்பட்டது.

பின்னர், தொழிலாளி வர்க்கம் 8 மணி நேரம் வேலை நாளைக் கோரியது. 8 மணி நேர வேலை நாளுக்கான போராட்டம், குறிப்பாக 1917-ஆம் வருட சோஷலிஸப் புரட்சி வெற்றி யடைந்ததற்குப்பின் ருஷ்யாவில் தொழிலாளி வர்க்கத்தின் இந்த கோரிக்கை அமுலாகியபின், ஆக்கம் பெற்றது. தொழிலாளி வர்க்கத்தின் நிர்ப்பந்தத்தால் பலமுதலாளித்துவ நாடுகளில் 8 மணி நேர வேலை நாள் அமுலாக்கப்பட்டது. வேலை நாள் நேரத்தைக் குறைத்ததை ஈடு செய்துகொள்வதற்கு முதலாளிகள் உழைப்பைக் கடுமையாக வேகப்படுத்தினர்.

4) முதலாளித்துவ உற்பத்தியின் நோக்கம் - – தி.கே.மித்தேராபோல்ஸ்கி

உபரி மதிப்பை மூலதனமாக மாற்றுவது, அதைப் புதிய உபரி மதிப்பை உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுத்துவது ஆகியவை தான் முதலாளித்துவ உற்பத்தியின் நோக்கம். சாத்தியமான அளவு குறைந்த செலவில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உபரி மதிப்பைப் பெற முதலாளிகள் எப்போதும் முயற்சிக்கிறார்கள். இந்த நோக்கத்திற்கு எல்லா சாத்தியமான வழிகளையும் பயன்படுத்துகிறார்கள். 

மூலதனம் உபரி மதிப்பிற்கான அசாதாரணப் பேராசையை வெளிக்காட்டுகிறது. ஒரு பிரிட்டிஷ் தொழிற்சங்கவாதி கூறினார், இயற்கை எப்படி சூன்யத்தைக் கண்டு அஞ்சுகிறதோ அதேபோல, மூலதனம், லாபமின்மை அல்லது குறைந்த லாபம் என்பதைக் கண்டு பயப்படுகிறது. ஆனால், போதிய அளவு லாபம் இருக்கிற வரை அது திமிர்பிடித்ததாகிறது. நீங்கள் 10 சதவிகித லாப விகிதத்தை உத்தரவாதம் செய்தால் எந்த நிபந்தனைக்கும் சம்மதிக்கிறது. 20 சதவீத லாபம் அதை உற்சாகப்படுத்துகிறது. 50 சதவிகித லாபத்தில் உண்மையில் அதன் கழுத்தை நெரித்துக் கொள்ளத் தயார். 100 சதவிகித லாபத்தில் எல்லாவித மனித நியதிகளையும் காலில் போட்டு மிதிக்கிறது. அது 300 சதவிகித லாபம் பெறமுடியுமானால், தூக்குத் தண்டனையே கிடைக்கு மானால் கூட அது எந்தக் கொடும் குற்றத்தையும் செய்ய அது தயங்காது.

அடிமை உடைமை சமுதாயத்திலும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்திலும் காணப்படாத உபரி மதிப்பிற்கான வேட்கை, உற்பத்தி வளர்ச்சிக்கு ஒரு சக்தி வாய்ந்த தூண்டு கோலாக இருக்கிறது. இந்தத் தூண்டுகோல், முதலில் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும், பின்னர் உலகம் முழுமையும் பெருவீத இயந்திரத் தொழிலைப் படைத்தது. அதேசமயத்தில் உபரி மதிப்பிற்கான வேட்கை (முயற்சி) முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை வளர்த்து, முதலாளித்துவ உற்பத்தி வளர்ச்சிக்கு ஒரு முரண்பாட்டுத் தன்மையை ஏற்படுத்தியது. ஒரு முதலாளிக்கு, உபரிமதிப்பை உற்பத்தி செய்கிற அந்த உழைப்புத்தான் “உற்பத்தித் தன்மையுடையது” உபரி மதிப்பை அதிகப்படுத்துவதற்காக ஒவ்வொரு முதலாளியும் தொழிலாளியிடமிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு உபரி உழைப்பைக் கசக்கி எடுக்க முயற்சிக்கிறான்.

உபரி மதிப்பை அதிகப்படுத்த இரண்டு வழிகள் இருக்கின்றன. ஸ்தூலமான உதாரணத்தின் அடிப்படையில் இதைப் பரிசீலிப்போம். ஒருவேளை நாள் 10 மணி நேரம் கொண்டது எனவும், அதில் 5 மணி நேரம் அவசிய உழைப்பு நேரம் எனவும் 5 மணி நேரம் உபரி உழைப்பு நேரம் எனவும் வைத்துக்கொள்வோம்.

5 மணி நேரம்                 5 மணிநேரம்

அவசிய நேரம்                 உபரி நேரம்

இதில் சுரண்டலின் அளவு அல்லது உபரி மதிப்பு விகிதம்

(பின் வருமாறு இருக்கும்)

5 மணி உபரி நேரம்

                              X     100ரூ  = 100ரூ

5 மணி அவசிய நேரம்