Wednesday 11 April 2018

மாறா-மூலதனமும் மாறும்-மூலதனமும்

(Constant Capital and Variable Capital)
 (மூலதனம் நூலில் இருந்து -அத்தியாயம் 8)

முதலாளித்துவ உற்பத்தி முறையின் போது சரக்கின் மதிப்பை உருவாக்குவதில் பல காரணிகள் வெவ்வேறு பாத்திரம் வகிக்கின்றன. இதில் முதன்மையானவை, உழைப்பைச் செலுத்துகிற கச்சாப்பொருள், இயந்திரம், கருவிகள், போன்றவற்றுடன் உழைப்பாளிகளின் உழைப்புச் சக்தி ஆகும்.

உற்பத்தி நிகழ்முறையில், புதிய மதிப்பைச் சேர்க்கும் போதே உற்பத்திச் சாதனங்களின் மதிப்புகள் பாதுகாக்கப்படுகிறது. அதாவது, கச்சாப்பொருள், இயந்திரம், கருவிகள் ஆகியவற்றின் தேய்மானமான மதிப்புகள், புதிய சரக்கில் பாதுகாக்கப்படுகிறது. அவைகள் புதிய உற்பத்திப் பொருளினது மதிப்பின் அடக்கக் கூறுகளாகப் புதுக் கோலம் பெறுகிறது.

எடுத்துக்காட்டாக இங்கே நூல் நூற்பதாகக் கொள்வோம். பஞ்சு, கதிர் ஆகியவற்றைக் கொண்டு தொழிலாளி நூல் நூற்கிறார். இந்த உழைப்பு நிகழ்வில், பஞ்சுக்கு மதிப்பு சேர்ப்பதை ஒரு வேலையாகவும், குறிப்பொருளான பஞ்சின் மதிப்பையும், வேலை செய்யும் போது பயன்படுத்திய கதிரின் மதிப்பில் ஒரு பகுதியையும் நூலில் சேர்ப்பது மற்றொரு வேலையாகவும் செய்வதில்லை. புதிய மதிப்பை சேர்க்கின்ற வேலையிலேயே முந்தைய மதிப்புகள் புதிய சரக்கில் பாதுகாக்கின்ற வேலையும் செய்கிறார். இங்கே தனித்தனியாக இரண்டு வேலைகள் செய்யப்படவில்லை.

ஒரே நேரத்தில் இரு நிகழ்வுகளும் நிகழ்த்தப்படுகிறது. இந்த இருவேறு விளைவுகள் ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படுவதில் உழைப்பின் இரட்டைத் தன்மையே காரணமாகிறது. ஒரே நேரத்தில் புதிய மதிப்பை படைப்பதும், பழையதின் மதிப்பைப் பாதுகாப்பதும் செய்யப்படுகிறது.

இவ்விரு நிகழ்வுகளும் உழைப்பின் இரட்டைத் தன்மையினால் நிகழ்த்தப்படுகிறது. உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட பயன்-மதிப்புகள் ஒவ்வொன்றும் மறைந்து போகிற நிகழ்வு, புதிய பயன்-மதிப்பில் ஒரு புதிய வடிவதில் மறுபடியும் தலையெடுக்கிறது. உழைப்பின் இந்நிகழ்வானது உற்பத்திச் சாதனங்களில் இருந்து புதிய உற்பத்திப் பொருளுக்குப் பெயர்க்கப்படுகிறது. நுகரப்பட்ட உற்பத்திச் சாதனங்களின் மதிப்புகளை உழைப்பாளி பாதுகாப்பது ஸ்தூலமற்ற (சூக்கும) அவரது கூடுதல் உழைப்பின் மூலமன்று, அந்த உழைப்பின் குறிப்பான பயனுள்ள தன்மையின் வடிவத்தின் மூலமே ஆகும். அதாவது இந்த உழைப்பு ஸ்தூலமான உழைப்பாகும். புதிய மதிப்பைப் படைக்கிற உழைப்பானது ஸ்தூலமற்ற உழைப்பாக, சமூகத்தின் மொத்த உழைப்பின் பகுதியாக இருப்பதின் மூலமே நடைபெறுகிறது.
குறிப்பிட்ட அளவிலான உழைப்பைச் சேர்ப்பதின் மூலம் புதிய மதிப்பு சேர்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் செலுத்தப்பட்ட உழைப்பே உற்பத்தி சாதனங்களின் மூல மதிப்புகள் புதிய உற்பத்திப் பொருளில் பாதுகாக்கப்டுகின்றன. உழைப்பின் இரட்டை தன்மையில் இருந்து விளைகிற இந்த இரட்டை விளைவு பல்வேறு நிகழ்வுகளில் வெளிப்படுவதைக் காணலாம்.

உதாரணமாக, 36 மணி நேரத்தில் நூற்ற அதே அளவு பஞ்சை, புதியதாக கண்டுபிடித்த இயந்திரத்தின் மூலம் 6 மணி நேரத்தில் நூற்பதாக் கொள்வோம். இதன் மூலம் முன்பு உழைத்த அதே நேரத்தில் ஆறு மடங்கு அதிகமான உற்பத்திப் பொருள் கிடைத்துள்ளது. 6 இராத்தலாக இருந்த அளவு இப்போது 36 இராத்தலாக உற்பத்தி அதிகரித்துள்ளது. முன்பு 6 இராத்தல் பஞ்சை பயன்படுத்திய அதே அளவு உழைப்பு இப்போது 36 இராத்தல் பஞ்சை, உற்பதிக்கு பயன்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வில், ஒவ்வொரு இராத்தல் பஞ்சை உற்பத்தி செய்வதற்கு முன்பு இருந்ததில் ஆறில் ஒரு பங்கு உழைப்பு செலுத்தப்பட்டுள்ளது. மறுபுறத்தில் 36 இராத்தல் நூலில், பஞ்சில் இருந்து பெயர்க்கப்படும் மதிப்பு முன்பு இருந்ததைவிட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. 6 மணி நேர நூற்பின் மூலம் ஒவ்வொரு இராத்தல் கச்சாப் பொருளுக்கும் நூற்பாளரின் உழைப்பால் சேர்க்கப்பட்ட புதிய மதிப்பு முன்பு இருந்ததில் ஆறில் ஒரு பங்கே ஆகும். ஆனால் பாதுகாக்கப்பட்டு உற்பத்திப் பொருளுக்கு மாற்றப்படும் கச்சா பொருளின் மதிப்பு முன்பு இருந்ததைவிடு ஆறு மடங்கு அதிகமாகும்.

உழைப்பின் போது, பழைய மதிப்பைப் பாதுகாப்பதும், புதிய மதிப்பைப் படைக்கவும் முடிவதற்குக் காரணமாக இருக்கின்ற உழைப்பின் இவ்விரு குணங்களும் அடிப்படையில் வேறுபட்டவை என்பதையே இது காட்டுகிறது.

உழைப்பு நிகழ்முறையில் உற்பத்திச் சாதனங்கள் உற்பத்திப் பொருளுக்குத் தமது மதிப்பைப் பெயர்ப்பது, தமது பயன்-மதிப்போடு பரிவர்த்தனை-மதிப்பையும் இணைத்தே இழக்கிறது. உற்பத்திச் சாதனங்களின் மதிப்பை மட்டுமே இழந்து புதிய உற்பத்தி பொருளில் சேர்க்கிறது.

ஆக, உற்பத்திச் சாதனங்களின் பயன்-மதிப்பு உழைப்பு நிகழ்முறையின் போது இழந்த மதிப்பைத் தவிர கூடுதலான மதிப்பை உற்பத்திப் பொருளுக்கு மாற்றுவதில்லை என்பது தெளிவாகிறது. அதாவது உற்பத்திச் சாதனங்களின் மதிப்பு புதிய உற்பத்திப் பொருளில் திரும்ப இடம்பெறுகிறது அவ்வளவே. பயன்படுத்தப்பட்ட பழைய பரிவர்த்தனை-மதிப்பு இந்தப் புதிய பயன்-மதிப்பில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. உழைப்புச் சக்தியைப் பொருத்தளவில், இவ்வாறு கூறமுடியாது.

உழைப்பாளி, உற்பத்திச் சாதனங்களின் மதிப்பைப் புதிய பொருளில் பாதுகாப்பதுடன், உழைப்பு என்கிற செயலால் கூடுதலான புதிய மதிப்பையும் படைக்கிறார். உழைப்பாளி தன் சொந்த உழைப்புச் சக்தியின் மதிப்புகளை உற்பத்தி செய்வதுடன், கூடுதலான மதிப்பையும் படைக்கிறார். இந்த கூடுதல் மதிப்பே உற்பத்திப் பொருளின் அசல் மதிப்பாகும்.

உற்பத்திச் சானங்கள் புதிய உற்பத்தியில் எந்த புதிய மதிப்பையும் சேர்க்கவில்லை, ஆனால் தொழிலாளி தமது உழைப்புச் சக்தியை ஈட்டுவதற்கான (அவசியமான உழைப்பு நேரத்தை) உழைப்பு நேரத்தை கடந்தும் உழைக்கிறார். உழைப்புச் சக்தியைப் பொருத்தளவில், ஈடானதை படைப்பதோடு கூடுதல் நேரத்தினால் கூடுதல் மதிப்பையும் படைக்கிறது. இந்த கூடுதல் நேரத்தில் படைக்கப்பட்ட கூடுதல் மதிப்பே உபரி மதிப்பாகும். உழைப்புச் சாதனங்களின் மதிப்பு புதிய உற்பத்திப் பொருளில் இடம் மாற்றப்படுகிறது. ஆனால் உழைப்புச் சக்தியின் மதிப்பு தமது மதிப்பை ஈட்டுவதோடு கூடுதலாக புதிய மதிப்பையும் படைக்கிறது. அதுவே புதிய பொருளின் மதிப்பாகும்.

கச்சாப் பொருள், உற்பத்தி சாதனங்கள், கருவிகள் ஆகியவற்றுக்கு செலவிடப்பட்ட உற்பத்தியாளரின் மூலதனம், உற்பத்தி நிகழ்வில், புதிய உற்பத்திப் பொருளினுடைய மதிப்பின் அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பயன்படுத்தப்பட்ட பொருளின் மதிப்பு புதியதில் இடம் மாற்றம் செய்யப்பட்டது. எனவே இதற்கு செலவிடப்பட்ட மூலதனம் மாறா-மூலதனம் (Constant Capital) என்று மார்க்ஸ் அழைக்கிறார்.

மறுபுறம், உழைப்புச் சக்தியை வாங்குவதற்கு செலவிடப்பட்ட மூலதனம் படைக்கின்ற மதிப்பில் மாறுபாடு அடைகிறது. உழைப்புச் சக்திக்கு கொடுக்கப்பட்ட மதிப்பைவிட கூடுதலான மதிப்பை இது ஈட்டித் தருகிறது. இந்தக் கூடுதல் மதிப்பே உபரி-மதிப்பு.. இதற்கு செலவிடப்பட்ட மூலதனத்தின் பகுதி மாறும் பருமனாக தொடர்ந்து மாற்றம் பெறுகிறது. இம் மூலதனம் மாறும்-மூலதனம் (Varible Capital) என்று மார்க்ஸ் அழைக்கிறார்.

மாறா-மூலதனத்தால் வாங்கப்பட்ட பொருட்களின் மதிப்பு மாற்றமே கொள்வதில்லை என்று கூறிவிட முடியாது. வாங்கப்பட்ட பஞ்சு பத்து லட்ச ரூபாயா இருக்க, புதிய நிலைமையில் அதாவது பஞ்சு விளைச்சல் பொய்துப் போன நேரங்களில் அதே பஞ்சு பன்னிரண்டு லட்ச ரூபாய்கு விற்கும் போது, வாங்கி வைக்கப்பட்ட பஞ்சின் மதிப்பு அதிகரிக்கிறது. இந்தப் பஞ்சை உற்பத்தியில் ஈடுபடுத்தாமல் அதனை அப்படியே விற்றால், கூடுதல் பணம் கிடைக்கும் என்பது உண்மையே ஆனால். இந்த மதிப்பு மாற்றமானது புதிய உற்பத்தியினால் நிகழ்ந்தது அல்ல.   

உழைப்பின் அளவால் சரக்கின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் இது சமூக நிலைமைகளால் வரம்பிடப்பட்டுள்ளது. சமூக வழியில் அவசியமான நேரம் மாறும் போது மாறவே செய்யும்.

இத்தகைய மாற்றங்கள் உற்பத்தி நிகழ்முறையினால் உருவாகவில்லை. உற்பத்தி நிகழ்முறைக்கு வெளியே தான் ஏற்படுகிறது. இந்த மாற்றங்களினால் மாறும்-மூலதனம் மாறா-மூலதனம் ஆகியவற்றுக்கு இடையேயான அடிப்படை வேறுபாட்டில்  சிறிய பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

No comments:

Post a Comment